சனி, 28 ஆகஸ்ட், 2010

கவிதைகள் விற்பவன்


கவிதைகளுக்கு மவுசு அதிகம்
கனவுகள் கோர்த்து விற்றால்
கொள்ளை லாபம்

நகரமையத்தில் வைத்த கடையில்
காட்சிக்கு மட்டுமல்ல
கைக்கொள்ளவும் உண்டு
விதவிதமாய்க் கவிதைகள்

வியாபார உலகில்
எல்லாமே விளம்பரம்தான்
விற்பதாயினுஞ்சரி
வாங்குவதானாலுஞ்சரி

டிஸ்கவுண்ட் சேலும் உண்டு
பழையன கொடுத்து
புதியன பெறுதல்

கவிதை செய்வது தனிக்கலை
காளான்வளர்ப்பு போல...
வார்த்தைகள் இடறக்கூடாது
வர்ணங்கள் பிசகக் கூடாது

புதுசாய் விற்க வருபவர்கள்
"ஏ! தமிழா..." என்றோ
"ஏ! இளைஞனே..." என்றோ கூவினால்
கச்சிதமாய்க் களைகட்டும்

இல்லையெனில்
'உதடுகள் கவ்வும் காதலை'
ஜரிகைதூவி விற்கலாம்

இப்போது கிராக்கி
உறுப்புக்களின் குறிப்பு நவிலலுக்கு

எப்போதும் குறையாத மவுசு
ஏழைக்குடிசையின் கூரைக்கிடையில்
வழியும் நிலாவுக்கு

என்றாலுஞ்சரி
எப்போதும் அகப்படாமல்
விற்பனைக்குத் தப்பி
ஒளிந்துகொண்டே இருக்கிறது

பால்மாந்தி இருக்கும்
ப்ளாட்பாரக் குழந்தையின்
உதட்டுக்குள் மறைந்திருக்கும்
புன்னகைக்கவிதை

12 பேரு கிடா வெட்டுறாங்க:

ஹேமா சொன்னது…

அருமை அருமை மனிதரே.எல்லாமே வியாபாரமாகும் உலகில் இயற்கையும்
வறுமையும் தப்பி இருக்கிறதோ !

Bibiliobibuli சொன்னது…

என்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றையும், மனிதர்கள் முதற்கொண்டு இயற்கை வரை அதனதன் இயல்புகளோடு கலைக்காமல் ரசிக்கும் போது எல்லாமே எனக்கு கவிதையாய் தெரிகிறது.

Unknown சொன்னது…

//எப்போதும் குறையாத மவுசு
ஏழைக்குடிசையின் கூரைக்கிடையில்
வழியும் நிலாவுக்கு//

அருமை அருமை.

என்னது நானு யாரா? சொன்னது…

///இல்லையெனில்
'உதடுகள் கவ்வும் காதலை'
ஜரிகைதூவி விற்கலாம்///

இதை தான் அனேக பேர்கள் கவிதை என்கின்ற போர்வையில செய்து கொண்டிருக்கிறார்கள்! கவிதை அருமை! நேரம் கிடைக்கும் போது நம்ப பக்கம் வாங்க நண்பரே!

dheva சொன்னது…

அடிச்சு டின்னு கட்றதுன்னு கேள்வி பட்டிருக்கேன்...

உன் கவிதகள் மூலம் செஞ்சுகிட்டு இருக்கப்பா.. நீ....!

பதிவுலகமே.... நீ நின்று கவனிக்கப்படவேண்டிய படைப்பாளி என் தம்பி விந்தை மனிதன்!

வாழ்த்துக்கள் பா!

VELU.G சொன்னது…

நல்ல படைப்பு நண்பரே

சின்னப்பயல் சொன்னது…

இப்டி சொல்லியே இந்தக்கவிதை
விற்பனையாகிவிட்டது,, :-)

மோகன்ஜி சொன்னது…

கூர்மையான சிந்தனை இது கவிஞரே! பால் மாந்திய குழந்தையின் உதட்டுப் புன்னகையில் தெறிக்கும் கவிதை எல்லாம் பிளாட்பாரம் நீங்கி ஒருநாள் அரங்கேறி எதிரொலிக்கும். அன்று உம் சிந்தனையை உலகம் புரிந்து கொள்ளும்.வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

மார்க்கெட்டிங் தேவைபடுகிற உலகத்தில் மனிதர்கள் ஜரிகைதாளில் சுற்றித்தரப்படும் செயற்கை சுவர்க்கம் வாங்க வரிசை கட்டி நிற்கின்றனர்.. பிளாட்பார வாசிகள் இன்னொரு நூற்றாண்டை கடந்த பின்னும் இருப்பார்கள் ....

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

vasan சொன்னது…

விற்ப‌ன‌க்கு க‌ன‌வுக‌ளாய்,காத‌லாய்,க‌ல்வியாய்,அர‌சிய‌லாய்,அதிகார‌மாய், ஆயிர‌ம் வ‌ந்தாலும்,
விற்ப‌ன‌யாவ‌து, ச‌மைய‌ல் க‌லையும், ச‌மைத்த‌ க‌ல‌வியும் தான்.

Avineni Bhaskar / అవినేని భాస్కర్ / அவினேனி பாஸ்கர் சொன்னது…

அருமையா இருக்கு... பாராட்டுக்கள் நண்பா :-)

Related Posts with Thumbnails