வெள்ளி, 31 டிசம்பர், 2010

கவி

அழகான கவிதை
ஒன்றெழுத விரும்பினேன்
கவிதை எழுத எனக்கு
அமைதியும் தனிமையும் வேண்டும்
கதவுகளையும் சன்னல்களையும்
சாத்தியாயிற்று
வேறென்ன..ம்ம்ம்...
கவிமனம் வேண்டும்
தளவாடங்களைச் சேகரிக்கத் துவங்கினேன்
சன்னமாய்க் கசியும் மெல்லிசை
வழவழப்பும் புதுமணமும் நிறைந்த‌
வெள்ளைக்காகிதங்கள்
மென்மையாய் வழுக்கிச் செல்லும்
பந்துமுனைப்பேனா
ஆ...அதென்ன...
கோப்பையில் ததும்பும்
மதுவின் விளிம்பில் மிதக்கும்
ஐஸ்கட்டிகள்
அவள் கருவிழிகளைப் போலவே...
மற...எழுது...
மதுபோதைக்கு ஊறுகாயும்
மனபோதைக்கு கைதட்டல்களும்
எதிர்பார்ப்பில்...
ஒருவழியாய்...
பிரசவத்தில்
செத்துப் பிறந்தது கவிதை...
பின்னொருநாள் புரிந்தது
மனத் தெறிப்பின்
மின்னல்களில்
உணர்வொழுக்கின்
சிதறல்களில்
ஒளிந்திருப்பதே கவிதை
என்று...

சனி, 25 டிசம்பர், 2010

காற்றைக்குடிக்கும் தாவரமாகிக் காலம் கழிப்போமோ...?

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்
            - தமிழ்விடுதூது
முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் பேற்றியனாய் பேறு பெற்ற தமிழினத்தின் சிறுதுளியாய் காலக்கடலில் மிதந்துவந்த நான் பதிவுலகம் என்ற மெய்நிகர் உலகின் சிற்றுறுப்பாய் உலவத் துவங்கி ஓராண்டும் ஒரு திங்களும் முடிந்த தருணத்தில் எனது நூறாவது பதிவை எழுதத் துவங்கி இருக்கிறேன். மனம் ததும்பிக் கொண்டிருக்கின்றது! மறுபுறம் விசித்துக்கொண்டும்...

ஏனோ சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், நெகிழ்ந்துகொள்ளவும்...

2008 ஆம் ஆண்டின் ஜூன் மாதவாக்கில்தான் நான் தமிழ் வலைப்பக்கங்களைத் தேடிப்படிக்கத் தொடங்கினேன்... ஈழம் தொடர்பான செய்திகளைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கு இலத்தினரியல் ஊடகங்கள் வரப்பிரசாதமாக இருந்தன. தமிழ் இணையப்பக்கங்களின் தொடர்ச்சியாய் வலைப்பூக்களும் அறிமுகமாயின. வலைப்பூக்களில் எனக்கு முதல் அறிமுகம் கேபிள்சங்கருடையதும், யுவகிருஷ்ணாவினுடையதும்... பிறிதொருநாள் பெரியார் பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது கூகிளில் 'ராமசாமி' என்று உள்ளிட்டுத் தேடிக் கொண்டிருந்தபோது வந்து விழுந்தவற்றுள் 'ராமசாமி அத்தியாய'மும் ஒன்று. "என்னடா இது? வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என்று போய்ப்பார்த்தேன். அதனைப் படித்தபோது என் கிராமத்துப் பெரிசு ஒன்று வேப்பமரநிழலில் உட்கார்ந்து ஆற அமர வாழ்வை அசைபோட்டு நிதானமாகக் கதைசொல்லிக் கேட்பதுபோன்ற உணர்வு உண்டானது. ஏனோ மனதுக்கு நெருக்கமாய் உணர்ந்தேன். யார் இவர் எனப் பார்த்தபோது கேஆர்பி செந்தில் என்றிருந்தது. இடம் தி.நகராம்! "அட! நம்ம ஏரியா!" என்றெண்ணியபடி ஒரு மெயிலைத் தட்டினேன்.

வாழ்க்கையில் சில உறவுகள் பூக்கின்ற விநாடிகள் அவை நிகழும்போது மிகவும் இயல்பாக, எதேச்சையாக எந்த தனித்தன்மையையும் வெளிக்காட்டாமல் நிகழும். அவை தனக்குள் வாழ்வின் புதிய சில கதவுகளை, பாதையின் திறப்புகளைத் தாங்கியபடி ஆலமர விதையினைப் போன்று சாதாரணமாக நம்மைக் கடந்துசெல்லும். முதன்முதலில் நான் அவரிடம் "நான் உங்களை அண்ணான்னு கூப்பிடலாமா?" என்று கேட்டபோது அஸ்வினிதேவர்கள் ததாஸ்து என்று சொல்லியது எனது காதுகளில் விழவில்லை...

அந்த நேரத்தில் நவம்பர் மாதத்தில்தான் நான் எனது வலைப்பூவைத் தொடங்கி இருந்தேன். நானும் வலைப்பதிவன் என்று தெரிந்தபின் நெருக்கம் கூடுதலானது. பின் எனது வலைப்பூவுக்கு மிகப்பெரிய க்ரியா ஊக்கி அவர்தான்.

அடுத்தடுத்து கேபிள்சங்கர், மணிஜி, வினவு தோழர்கள், அப்துல்லா அண்ணன், ஜோதிஜி, தேவா, நேசமித்திரன், ரதியக்கா, வழக்கறிஞர் சாமித்துரை, குழலி, பாலபாரதி என்று நட்புக்கள் மொட்டுவிரிய மெல்லமெல்ல மணம்பரப்பத் தொடங்கியது என் வலைப்பூ. ஆரம்பகாலத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருந்த நான் கொஞ்சங்கொஞ்சமாக எனது வலைப்பூவுக்கென ஒரு வடிவத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். இமையோரம் துளிர்க்கும் ஈரம் என் இந்த நண்பர்களுக்காக...

என்றாவது ஒருநாள் என எழுதிக் கொண்டிருந்த என்னை எதிர்மறையில் தூண்டி அநேகமாக தினம் ஒரு பதிவு எழுதும் வீரியத்தை எனக்குத் தந்து பிரிந்த என் கண்மணிக்கும்...

இலக்கேதும் இன்றி இந்தப் பதிவுலகத்துக்கு வந்தேன். இப்போது எனக்கென சில நோக்கங்களை மையப்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது... பதிவுலகம் பல சமயங்களில் எரிச்சலையும், சலிப்பையும் தந்தாலும்கூட இது ஒரு கட்டற்ற, தனிமனிதனின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும், அதிகாரத் தூண்களுக்கு எதிரான புரட்சிகரக் கூறுகளைக் கொண்டே பயணிக்கிறது. இங்கு நானும் சில விதைகளைத்தூவிச் செல்லலாம். காலவெள்ளத்தில் எதிர்நீந்தி நிற்கும் சில நினைவுகளை ஆவணப்படுத்திப் போகலாம்.வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைப் போலவும், கைப்பேசிகளைப் போலவும், கணிணியும் இணையமும் முழுக்க முழுக்கப் பரவலாகும்போது இணையத்தின், வலைப்பூக்களின் பலம் கற்பனையை விஞ்சிநிற்கும் என்பது வெறும் கணிப்பல்ல!

இணையத்தில் கிடைக்கும் தமிழ்நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும், இலக்கியப் புதையல்களும் என்னை மலைக்கவைக்கின்றன. இதழியலாளர் பாலபாரதியிடம் ஒருநாள் ஒரு சங்கப்பாடல்பற்றிக் கேட்டபோது அவர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கத்தையும், இன்னும் மதுரைத்திட்டம் போன்ற பக்கங்களையும் அறிமுகம் செய்வித்தார்.இன்னும் இன்னும் இணையத்தில் தமிழ் தனது எல்லைகளை விரித்துக்கொண்டே செல்கிறது.

இதோ நூறைத் தொட்டுவிட்டேன்... ஆனால் எனை இணையத்தில் படிக்கவும் எழுதவும் தூண்டிய என் இனம் வீழ்ந்து கிடக்கிறது... லெமூரியா தொடங்கித் தனது வேர்களையும் விழுதுகளையும் உலகெங்கும் பரப்பி உலகின் தலைமக்களாய்த் திகழ்ந்திருக்கவேண்டிய ஓர் இனம் தனது விழிகளில் மாத்திரம் ஜீவனை நிரப்பியபடி வீழ்ந்து கிடக்கிறது. லட்சக்கணக்கான ரத்தசொந்தங்கள் ஜீவமரணப் போராட்டத்தில் இருக்க, இங்கு நெடுந்தொடர்களிலும், நீர்த்துப்போன அரசியலிலும், குத்தாட்ட சினிமாக்களிலும், கும்பி கழுவும் பொருளாதாரப் போராட்டத்திலும் மூழ்கித் தனது சுயநினைவிழந்து கிடக்கின்ற தமிழ்நாட்டுச் சமூகம்... தன்னை வழிநடத்த ஒரு மேய்ப்பனின்றி...

ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்கள் என்றும் மந்தைகளாகவே இருந்துவிடமாட்டார்கள். துளிகள் இணைந்து கங்கையெனப் பெருகும். அதன் வெள்ளத்தில் கசடுகள் அடித்துச் செல்லப்பட்டு என் இனம் எழுந்துநிற்கும். இணையத் தமிழில் இணைந்து மேலெழும் இச்சமூகத்தின் பயணத்தில் மெல்லமெல்ல எல்லாவகை மக்களும் இணைந்து சமுத்திரமாக விரியும். இந்தப் பொழுதில் எனக்கு வேறேதும் எழுதத் தோன்றவில்லை. என் இரவுகளில் என்னைக் கனக்கவும், கரைக்கவும் செய்யும் ஒரு பாடலை இங்கு இணைக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் நெஞ்சங்கள் சற்றே நிதானித்து இந்தப் பாடலைச் செவிமடுக்க வேண்டுகிறேன்.

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம்தின்னும் கிளியோ
பிணம்தின்னும் கழுகோ
தூதோ முன்வினைத் தீதோ
களங்களும் அதிரக் களிறுகள் பிளிற
சோழம் அழைத்துப் போவாயோ
தங்கமே என்னைத் தாய்மண்ணில் சேர்த்தால்
புரவிகள்போலேப் புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை அதுவரை....

தமிழர்காணும் துயரம் கண்டு
தலையைச் சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒருநாள் விடியும் என்றே
இரவைச் சுமக்கும் நாளே அழாதே
நூற்றாண்டுகளின் துருவைத் தாங்கி
உறையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே அழாதே!

புதன், 22 டிசம்பர், 2010

பதிவர் பா.ராவும் ஒரு தோழியும்...


அடடா... பதிவு போட்டு நாளாச்சுன்னு யோசித்துக் கொண்டிருந்தபோது தோழியின் எண் செல்ஃபோன் திரையில்...

வேறொன்றுமில்லை... என் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நான் அடிக்கடி ஸ்டேட்டஸ் மெஸேஜை மாற்றிக் கொண்டிருப்பேன். நான் ரசித்தவற்றை நண்பர்களும் ரசிக்க...

இன்று பதிவர் பா.ராவின் கவிதை ஒன்றை எடுத்துப் போட்டிருந்தேன்.

கவிதை என்றவுடன் ஞாபகம் வருகிறது. தமிழகத்தில் மொத்தம் ஆறுகோடிக் கவிஞர்கள் இருக்கிறார்களாம். "பெண்ணே! உன் கண்ணில் தெறித்த மின்னலில் குருடனானேன்" என்கிற ரீதியில் 'அகநானூறு' படைத்து, "ஏ! இளைஞனே... எழுந்திரு! எதிர்காலம் உன் தோள்களுக்காய்க் காத்திருக்கிறது" (எந்த பஸ்டாப்புலன்னு தெரியல!) என்று 'புறமும்' பாடி கவிதைவடித்த களைப்பில் குப்புறடித்துத் தூங்கும் கவிஞர்களின் இம்சை இருக்கிறதே! அய்யய்யய்யய்யோ....!

இரண்டு நாள்களுக்குமுன் ஒரு 'கவிஞ' நண்பரை எதிர்பாராதவிதமாகப் பார்க்க நேரிட்டது. தன் ஊர்ப்பெயரைப்போட்டு ...........கவிஞர் என்ற அடைமொழியுடன் மிடுக்காகத் திரிவார்... பின்னே? கவிஞரில்லையா...கம்பீரம் குறையக்கூடாதாம்!!! "தம்பி! என் கவிதை ஒன்று ........ இதழில் பிரசுரமாகி இருக்கிறது... பாருங்களேன்" என்றபடி தனது தோள்பையில் கையை விட்டார். எனக்கென்னவோ பாம்பு கீரி வித்தை காட்டுபவன் பாம்பை வைத்திருக்கும் கூடைக்குள் கையை விடும் காட்சி நினைவுக்கு வந்துபோனது. ஒரு சிறுவர் இதழை எடுத்து நீட்டினார் "இதுல பாருங்க தம்பி..." என்றபடி... கவிதை என்ற வடிவத்தைக் கண்டுபிடித்த படுபாவியைச் சபித்துக் கொண்டே வாசித்தேன்... அந்தக் கொடுமையை என்ன சொல்ல...

"ஆனாவுக்கு அடுத்து ஆவன்னா
அவளுக்கு வெச்ச பேரென்னா..' என்று நீண்டது அந்தக் 'கவிதை'.

இன்னும் சில கவிஞர்கள் இருக்கிறார்கள்... "பாலைநிலத்தின் கானல்வெயிலில் ஊர்ந்துகொண்டிருக்கும் பச்சைப்பாம்பின் தடமறியத் தொடரும் பீலைகாய்ந்த விழியின்..." என்று ஆரம்பித்தால் படித்துமுடித்தபின் ஒரு ஃபுல் மக்டெவலை மடமடவெனக் கவிழ்த்த எஃபெக்ட் கிடைக்கும்.

ஆனால் பச்சைக்குழந்தை கொடுக்கும் முத்தம் மனசுக்குள் போய் 'பச்சக்' என்று ஒட்டிக்கொள்வது போன்ற கவிதைவரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் பா.ராஜாராம். பிறந்த குழந்தை விழிகள் விரிய உலகத்தை முதல்முறை பார்ப்பதுபோலவே காணும், உணரும் எல்லாவற்றையும் வியந்து, நெகிழ்ந்து அன்பு வழிய வழியச் சொட்டும் கவிதைகளை எழுதுபவர். "நல்லாருக்கீங்களா மக்கா" என்ற வார்த்தைகள் இவர் உச்சரிக்கும்போது மட்டும் தனித்த நெகிழ்வுடன் தொனிக்கும்.

இவரது கவிதைகளில் ஒன்றைத்தான் என் ஸ்டேட்டஸ் மெஸேஜில் அப்டேட் செய்திருந்தேன்...

"முதுகிற்குப் பின்புறம்
மறைகிற குழந்தைகளை
முன்னிழுத்து
"சித்தப்பாடா " என்று
கண்ணீருடன்
சிரிக்கிறார்கள் காதலிகள்"

வந்தது வினை... தோழியின் ஃபோன் வடிவத்தில்...

"அதென்ன எதுக்கெடுத்தாலும் பொம்பளைங்களைக் குறைசொல்றதே உங்களுக்குப் பொழப்பா போச்சு? ஏன் ஆம்பிளைங்க மட்டும் யோக்கியமா" என்று படபடவெனப் பொரிந்தவர் "நான் இப்போ எழுதி அனுப்புறேன்...ஒழுங்கு மரியாதையா இதையும் சேத்து உன் ஸ்டேட்டஸ் மெஸேஜ்ல போடு" என்று சற்றேறக் குறைய மிரட்டியவர் இரண்டு கவிதைகளை எழுதி அனுப்பினார். ஏற்கனவே பதிவுக்கு மேட்டர் தேடிக் கொண்டிருந்தவனுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் வந்து வாயில் விழுந்த கதையாகிப்போனது. ஸோ... பதிவாவேப் போட்டாச்சு!

1)"காதலியுடன் சாலையை
அளக்கும் போது
எதிர்ப்படும் உறவினரிடம்
தோழி என்றோ
சகோதரி என்றோ
அறிமுகப்படுத்துகிறார்கள்
கூச்சமின்றி."

2)"விரல்பிடித்து
குழந்தையுடன்
நடைபயிலும் போது
முறுவலித்து
கடந்து போகும்
காதலியை
அத்தையென அறிமுகஞ்செய்கிறார்கள்
முன்னாள் காதலர்கள்."

பின்குறிப்பு: தலைப்பு எதுவும் விவகாரமாகத் தெரிந்தால் பழிபாவம் அனைத்தும் தமிழ்ப் பத்திரிகைகளுக்கே போய்ச்சேரும். சூம்பிப் போன விஷயத்துக்கெல்லாம் சுனாமி ரேஞ்சுக்குத் தலைப்பு வைத்துப் பரபரப்பாக்கும் வித்தை கற்றுக்கொடுத்தது அவர்கள்தானே?!

வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஆலமரத்துக் கலைச்செல்வி - (கிராமத்துக் கதைகள்: 5)


நெறமாச புள்ளத்தாச்சி அடிமேல அடியெடுத்து வெச்சி நடக்குறமாரி மெல்லமா நடந்துபோற ஆறு, காத்துகிட்ட செல்லமா கதெ பேசி தலையாட்டிச் சிரிக்கிற நெல்லுகருதுங்க,  தலையத் தலைய ஆட்டிக்கிட்டு மணிச்சத்தம் எழுப்பிட்டுப் போற வண்டிமாடுங்க, வைக்கலயும் புல்லையும் தின்னுப்புட்டு சாஞ்சி படுத்துக்கிட்டே அச போடுற பசுமாடுக மாதிரி சிறுவயசு நெனப்பயெல்லாம் கண்ணுமுழி சொருவ பேசிச் சிரிச்சிக்கிட்டே பொழுதத் தள்ற கெழடுகட்டைங்க, மல்லியப்பூ வாசமும் சீட்டித்துணி தாவணியுமா கருவண்டுமாரி கண்ணை உருட்டிக்கிட்டே திரியிற கன்னிப்பொண்டுவ...

கெராமம்னாலே எல்லாருக்கும் மனசுக்குள்ளாற அழகா வந்துபோற சித்திரம் இதாங்க. ஆனா கெராமங்களுக்குள்ளாற இன்னொரு மொகமும் இருக்கு. எதுத்தாப்புல வார உருவங்கூடத் தெரியாத அளவுக்குப் பேயிற மார்கழிமாசப் பனியிலயும் தீட்டுக்காரப் பொண்டுவ வீட்டுக்கு வெளியிலதான் படுக்கணும்னு சட்டம் பேசுறதும், விழுந்த பல்லுகூட சரியா மொளைக்காத எட்டு வயசு வாண்டு நாப்பத்தஞ்சி வயசு ஆம்பளையப் பாத்து "எலேய் முனியா! இங்ஙன வாடா!"ன்னு மட்டுமருவாதி இல்லாமக் கூப்புடுற அளவு சாதிக் கோராமையும் கெராமத்துக்கு மட்டுமே சொந்தமானதுங்க.

எங்கூருல ஒதுக்குப்பொறமா இருந்திச்சி அந்த ஆலமரம். தாலியறுத்த பொம்பிளை கூந்தல விரிச்சிப்போட்டுட்டு அழுவுறமாரி அது கெளைங்களை ஆட்டி காத்துல 'ஓ'ன்னு எரைச்ச போட்டுட்டே இருக்கும். அதோட கெளையில எல்லாம் சின்னச் சின்னதா வேட்டியில கட்டித் தொங்க உட்டுருக்குற பையிங்களும் ஆடிட்டு இருக்கும். ஊருல மாடுங்க கன்னு போடுறப்ப வார நஞ்சுக்கொடிய அந்த மாரி வேட்டித் துணியில கட்டித் தொங்க உட்ருப்பாங்க. அந்த ஆலமரத்தடிதான் என்னைமாரி பொட்டுபொடுசுங்க வெளையாடுற எடம். உச்சிப்பொழுதுல ஆலமரத்தடிக்குப் போனா கலைச்செல்வி புடிச்சிக்குவான்னு சொல்லி பயமுறுத்தும் எங்க பெரியம்மா.  கலைச்செல்விக்கு சின்னப்பசங்கன்னா கொள்ள ஆசையாம். கிட்டப்போனா உடவே மாட்டாளாம். கலைச்செல்விக்கு பயந்துக்கிட்டே நாங்க ஆலமரத்தடிக்கு உச்சிவேளயில போவமாட்டோம்.

ஒருநா நா ஏம்பெரியம்மாட்ட "அதாரு பெரியம்மா கலைச்செல்வி? அவ ஏன் சின்னப்பசங்கள புடிச்சிக்கணும்? எனக்கு அவ கதெ சொல்லு"ன்னு கேட்டேன். பெரியம்மா சொன்ன கதெ ஒரு பாரதக்கதெ. ரத்தமும்  கவிச்சியும் அழுவையும் ஆத்தாமையுமான கதெ. கதய சொல்றப்பவே பெரியம்மா கண்ணுலருந்து தண்ணி தாரதாரையா ஊத்த ஆரமிச்சிச்சி:

செல்லமுத்துத் தேவரு பண்றதென்னவோ மாட்டுத்தரகு வேலதான். ஆனா ஆளப்பாத்தா ஆறடி ஒசரத்துல கருந்தேக்கு மரத்துல செதுக்குன செலமாரி இருப்பாரு. ரெண்டுபக்கமும் ரெண்டு நட்டுவக்காளிய நட்டுவெச்சமாரி திருக்கிகிட்டு இருக்குற மீசை. ஏத்திச் சீவுன தல, மேலுக்கு சட்டை போடாம எட்டுமொழவேட்டிய மட்டும் கட்டி அதுக்குமேல சிங்கப்பூரு பெல்ட்டப் போட்டு இறுக்கி இருப்பாரு. நெஞ்சில இருக்கு மசுர வெலக்கிப்பாத்தா நாலணா பெரிசுக்கு ஒரு மச்சம் இருக்கும். அந்த மச்சமும் கலைச்செல்வியுந்தான் அவரோட அதிர்ஷ்டத்துக்குக் காரணம்னு அடிக்கடி சொல்லிக்குவாரு. காலங்காத்தால எந்திரிச்சி கொல்லைக்கு போயிட்டு வந்து குளிச்சிமுழுவி வந்து துன்னூத்துப்பட்டய போட்டுக்கிட்டு வெங்கலக் கூம்பா நெறெய பழையசோத்துல எருமைத்தயிர ஒரு சொம்பு ஊத்திப் பெசஞ்சி பச்சமொளகாயும், சின்ன வெங்காயமும் கடிச்சிக்கிட்டே சாப்புட்டு முடிச்சி தரகு யாவரத்துக்குக் கெளம்புனாருன்னா பொழுது சாஞ்சி வாரப்ப கையில காசும் வாயில சாராயமுமாத்தா வந்து சேர்வாரு.

கலைச்செல்வி பாக்குறதுக்கு அபிஷேக ஆராதன பண்றதுக்கு முன்னாடி இருக்குற அம்மன் செல மாரியே இருப்பா. நல்லா கருகருன்னு காக்காப்பொன் நெறம் அவளுக்கு. கருப்புல அழகுக் கருப்பு எழவுக்கருப்புன்னு ரெண்டு வெதம் இருக்கு. இவ கருப்பு அழகுக்கருப்பு. குளிச்சிட்டு தலதொவட்டாம கூந்தல விரிச்சிபோட்டுட்டு, பாவாடைய ஏத்தி மக்குட்டு கட்டிக்கிட்டு நின்னான்னா பாக்குறவங் கண்ணெல்லாம் கடமடையில ஓடுற காவேரி கணக்கா விரிஞ்சி இருக்கும். "ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சது ஆண்டவன் கணக்கு"ன்னு ஒரு சொலவடை சொல்லுவாங்க. ஒவ்வொரு மனுசனுக்கும் ஆண்டவன் நல்லதக் குடுத்துருக்குற மாரியே கெட்டதையும் சேத்துதாங் குடுத்துருக்கான். கலைச்செல்விக்கு ஆண்டவங் குடுத்தது சாதகத்துல ஏழுல செவ்வா. கல்யாணம் பண்ணத் தோதா ஒரு மாப்புளயும் கெடைக்கல. அவ அப்பாரு ஊரெல்லாஞ்சுத்தி ஒடம்பெல்லாம் வத்தி சல்லடபோட்டு சலிச்சிப் பாத்தும் ஒரு பய சிக்கல. அவரும் சாராயங் குடிச்ச நேரம்போக மத்த நேரமெல்லாம் சாதகத்த தூக்கிச் சொமந்து வெறுத்துப்போயி "இனி இந்த சனியனுக்கு நா மாப்ள பாக்க மாட்டேன். கெடந்து அழியட்டும்"னு சொல்லிட்டு சாதகத்தயும் தூக்கி வீசிட்டாரு. ஆச்சு அந்த பொரட்டாசியோட அவளுக்கும் வயசு இருவத்தொம்போது.

கலைச்செல்வி எப்பவும் சின்ன வயசு வாண்டுப் பயலுவளோடயே வெளையாண்டு சிரிச்சிக்கிட்டு இருந்தவ மெல்லமெல்ல ஒடுங்க ஆரமிச்சா. அவளையொத்த பொண்டுவ பூரா கையில் ரெண்டு வயித்துல ஒண்ணுன்னு சொமந்துட்டு இருக்குறப்ப அவ மட்டும் வெறும் வயித்த தடவிட்டு ஏங்கி அழுதுட்டு இருப்பா. ராப்பொழுது அவளுக்கு மட்டும் தவக்களைய முழுங்கவந்த பாம்புமாரி தெம்பட ஆரமிச்சிச்சி. அணைச்சிக்க ஒரு கையும் சாஞ்சிக்க ஒரு மடியும் இல்லையே அப்டீங்குற ஏக்கத்துல அவ ஒடம்பும் எளைக்க ஆரமிச்சது. காலாகாலத்துல கல்யாணம் ஆவாத பொண்ணுவளுக்கு மனசுக்குள்ளாற எரியிற வேதன பாதின்னா ஊருல இருக்குற மக்க மனுச வார்க்குற வார்த்தயில எரியறது மீதி. அவளும் ஊரு ஒலகத்துல ஒரு சாமி உடாம வேண்டிக்கிட்டா. வெள்ளி,செவ்வா ஆனா துர்க்கையம்மங் கோயில்ல வெளக்கேத்தி வெச்சி "எனக்குன்னு பொறந்த மவராசன எங்கண்ணுல காட்டுடி தாயே"ன்னு கண்ணுகசிய வேண்டிக்குவா. அப்பிடி ஒருநா கோயில்ல வெளக்கேத்தப் போறப்பதா அவனப் பாத்தா கலைச்செல்வி.

அவம்பேரு அறிவழகன். பேருக்கேத்தமாரியே அறிவுல அழகன். பாழாப்போன சேரியிலப் பொறந்தா அவம் அவதாரமே ஆனாக்கூடத்தான் மக்கமனுசங்க மதிக்க மாட்டாங்களே? நடராசனே கெதின்னு மனசுருகுன நந்தனாரக்கூட நெருப்புல எரிச்சித்தானே நாயனார்னு சேத்துக்கிட்டாங்க? பள்ளச்சேரியில இருந்து சிம்னி வெளக்குல படிச்சி மெல்ல மெல்ல காலேசி பக்கம் எட்டிப்பாத்தவன் அறிவழகன். தாம்படிச்சது தன்னோட மக்களுக்காவணும்னு கெவுருமெண்டு வேல கெடச்சிம் போவாம சேரிப்புள்ளங்கள கூப்புட்டு வெச்சி "படிங்கடா! படிச்சாத்தாண்டா நமக்கெல்லாம் விடிவுகாலம்"னு சொல்லி படிப்புச் சொல்லிக் குடுத்துட்டு இருக்குற மவராசன்... அவந்தான் கலைச்செல்விக்கும் மவராசங்கிறது ஆண்டவங் கணக்கு.

"என்ன சின்னம்மா நல்லாருக்கீங்களா? ஏம் ஒருமாரி களப்பாவே திரியிறீங்க?"ன்னு சம்பிரதாயமா அறிவழகன் கேட்டவொடனேயே கலைச்செல்வி கண்ணுல ரெண்டு சொட்டு தண்ணி எட்டிப்பாத்திச்சி. அனுசரணையா, ஆதரவா ஒரு சொல்லு கேட்டு எவ்ளோ நாளாச்சி?
"ம்... இருக்கேன் அறிவு"ன்னு சொல்லிட்டு நவுந்தா கலைச்செல்வி. இந்தக் காதல் இருக்கே... திருட்டுப்பூனமாரி மனசுக்குள்ளாற நமக்குத் தெரியாமலயே வந்து ஒக்காந்துக்கும். திருட்டுப்பூன வாரதும் தெரியாது சொம்புல இருக்குற பாலக் குடிக்கறதும் தெரியாது. எல்லாம் முடிஞ்சப்புறம் லபோதிபோன்னு கத்திக்கூப்பாடு போட்டு என்ன பிரயோசனம்? கலைச்செல்வி மனசுல கொஞ்சநாளா அறிவழகன் வாரதும் போறதுமா இருந்தான். "நல்லாருக்கீங்களா"ன்னு கேட்ட ஒத்த வார்த்த கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரமிச்சிச்சி. அப்பப்ப பாத்துக்கிறதும் பேசிக்கிறதுமா இருந்தாங்க. இப்பல்லாம் ராத்திரில கலைச்செல்வி தனியாத் தூங்குறது இல்ல. தலவாணிய அறிவழகனா நெனச்சிக் கட்டிப்புடிச்சிக்கிட்டுதான் தூங்குறது. பேச்சுல ஆரமிச்ச காதல்ல வயசு நெருப்பப் பத்தவெக்க மாட்டுக்கொட்டாயி, வாய்க்காக்கரெ, வைக்கப்போருன்னு அப்பப்ப கட்டிக்கிட்டு பத்தி எரிய ஆரமிச்சாங்க ரெண்டுபேரும்.

மனசுபூரா காதல் நெறஞ்சி வழிஞ்சதுல நாளுகணக்க மறந்துட்டா கலைச்செல்வி. தின்ன சோறு செரிக்காம விடியகாத்தால ஒருநா வாந்தி எடுத்தப்பதா கலைச்செல்விக்கு நெஞ்சு திக்குன்னிச்சி. தலகுளிச்சி மூணுமாசம் ஆச்சி.பயத்துல மனசு கெடந்து அடிச்சாலும் ஒரு ஓரத்துல சின்ன சந்தோசம் அவளுக்கு... 'அறிவழகனோட குட்டி சீவன் இப்ப ஏம் வயித்துக்குள்ளாற'ன்னு. நெளிஞ்சி கொழஞ்சி கன்னஞ் செவக்க அறிவுகிட்ட மெல்லமா சேதியச் சொன்னா. ராப்பூரா யோசிச்சான் அறிவு.நாலாம் நாள் காலையில கலைச்செல்வி ஆசயா வளத்த பசுங்கன்னுக்குட்டி அவளக் காணாம கத்திக்கிட்டு இருந்திச்சி.பாடஞ் சொல்லிக்குடுக்குற அறிவைக் காணாம சேரிப்பசங்க நாவப்பழம் பறிக்கப் போயிட்டாங்க.ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு கணக்குப் போட்ட ஊருக்காரங்க சேதியப் புரிஞ்சிக்கிட்டாங்க.சல்லடபோட்டுச் சலிச்சாலும் காத்துல கரைஞ்ச கற்பூரம் கைக்கு மறுவடி வருமா?

நாலுமாசம் போனிச்சி. ஒருநா ஊருக்குள்ளாற ஒரே பரபரப்பு. செல்லமுத்துத் தேவரோட பங்காளி வகையறாக்காரன் ஒருத்தன் செதம்பரத்துக்கு சாமி கும்புடப் போனவன் நடராசரப் பாத்ததோட இல்லாம கடத்தெருவுல கலைச்செல்வியயும் அறிவழகனயும் பாத்துட்டான். ஊருல சாதிக்காரங்ககிட்ட தகவலச் சொல்லி மெல்லமா வலைய விரிச்சானுவோ. மீனு ரெண்டும் சிக்குனவொடனே அள்ளிப்போட்டுட்டு வந்துட்டானுவோ. வார வழியிலயே ஊரு எல்லையில அய்யனாரு கோயில் ஓரமா அறிவழனக் கட்டிப்போட்டு அடிச்சே கொன்னு போட்டானுவோ.

கலைச்செல்விய ஊட்டுக்குக்கொண்டாந்து அவ ஆயா அப்பங்கிட்ட ஒப்படச்சி "பள்ளப்பய கரு நம்ம சாதியில பொறக்கபடாது. ஒம்பொண்ண நீயே கொன்னுடுன்னு சொல்லிட்டு வெளியிலயே நின்னுக்கிட்டானுவ. கலைச்செல்வி அழுது மொறையாறி ஆறாப் பெருகுனா. கையெடுத்துக் கும்புட்டா. "அய்யா! என்ன உட்ருங்கய்யா"ன்னு அவ அப்பன், பெத்த தாயாரு, சித்தப்பம் பெரியப்பன்னு ஒவ்வொருத்தங் கால்லயும் உழுந்து கெஞ்சுனா. ஒருத்தனும் மனசு எரங்கல. அம்மாக்காரி மடியோட சேத்துவெச்சி அழுத்திப் புடிச்சிக்க அப்பங்காரன் அவ வாயத் தொறந்து பாலிடாயில ஊத்துனான். கக்குனது பாதி, உள்ள போனது பாதின்னு மறுபடியும் அழுது கெஞ்சுனா கலைச்செல்வி. "எனக்காவ இல்லன்னாலும் எங்கொழந்தைக்காவயாவது என்ன உசுரோட உட்ருங்க சாமீ"ன்னு சொல்லிக் கதறுனா. "சாதி மானத்த வாங்கிட்டியேடி சனிப் புடிச்ச முண்ட. பள்ளப்பய புள்ளயாடி ஒனக்குக் கேக்குது?"ன்னு சொல்லி அவ வயித்துல எட்டி மிதிச்சான் அவ பெரியப்பன். "அந்த அளவுக்கு .......... அரிப்பெடுத்துத் திரிஞ்சா சாதிக்காரனா பாத்துப் படுக்க வேண்டியது தானடி?"ன்னு கேட்டு தலமுடியப் புடிச்சி இழுத்து அறஞ்சான் தாய்மாமன். மருந்து மயக்கத்துலயும், அடி தாங்க முடியாமயும் கண்ணுமுழி சொருவுனிச்சி கலைச்செல்விக்கு. அப்பிடியே தரதரன்னு இழுத்துட்டுப்போயி அடுக்கி வெச்சிருக்குற கருவக்கட்டைங்கமேல படுக்கவெச்சி கொஞ்சூண்டு மண்ணெண்ணெய ஊத்திக் கொளுத்தி உட்டான் ஒண்ணு உட்ட அண்ணங்காரன். நெருப்பு சூட்டுல மயக்கந்தெளிஞ்ச கலைச்செல்வி "அண்ணே என்னக் கொன்னுடாதண்ணே"ன்னு அலற ஆரமிச்சா. அவ தலயிலயே கட்டையால ஒரு போடு போட்டான் அண்ணங்காரன். அப்பிடியே சுருண்ட உழுந்த கலைச்செல்வி முழுசா எரிஞ்சி அடங்குனா. மறுநா காலையில மிச்சம்மீதி இருந்த சாம்பல், எலும்பயெல்லாம் கொண்டுபோயி ஊருக்கு ஓரமா இருந்த ஆலமரத்தடியில குழி தோண்டிப் பொதச்சாங்க சொந்தக்காரவங்க.

அப்பயில இருந்து ஆலமரத்தடிக்கு வெளையாட வார வாண்டுப் பசங்க, துள்ளிக்கிட்டு ஓடியாற கன்னுக்குட்டிங்க எல்லாத்தையும் கலைச்செல்வி புடிச்சிக்கிறான்னு ஊருக்குள்ளாற பலமான பேச்சு அடிபட்டிச்சி.

கலைச்செல்வி செத்துப்போன ரெண்டாவது வாரம் சேரியில செல்லத்தேவரு ஊட்டுல பண்ணையம் பண்ணிக்கிட்டு இருந்த நொண்டியன் மருமவளுக்கு ஆம்பிளப்புள்ள பொறந்திச்சி. அது நெஞ்சில நாலணா பெரிசுக்கு மச்சம் இருந்திச்சி.

திங்கள், 6 டிசம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...06/12/10


பருப்பொருள்களோட 'ஜடத்தன்மை' பத்தின நியூட்டன் விதி நம்ம எல்லாருக்கும் தெரியும். நெட்டுரு போட்டாவது படிச்சி பரிச்சை எழுதி இருப்போம். எனக்கு இந்த ஜடத்தன்மை ரொம்ப அதிகம். போட்டது போட்டபடி கெடப்பேன். திடீர்னு வெளிலருந்து வர்ற அழுத்தம் தாங்க முடியாம ஓட ஆரமிப்பேன். இந்த கட்டுரைத் தொடரை வாராவாரம் எழுதலாம்னுதான் ஆரம்பத்துல நெனச்சேன். எங்க... நாந்தான் ஜடமாச்சே! சரி... சுயபுராணம் போதும்... விஷயத்துக்கு வருவோம்.

1) ரெண்டு நாளு முன்னாடி கூகிள் பஸ்ஸுல குழலி அண்ணன் ஒரு மேட்டரைப் போட்டாரு... ஜீனியர் விகடன்ல வந்த கட்டுரை "வைமேக்ஸ் பூதம்". அப்புறம் சாட்ல புடிச்சி என்னண்ணே விஷயம்னு கேட்டா அவர் சொல்ற கதை பெரிய வயித்தெரிச்சல்ங்க. நம்ம மந்திரிங்க, ராசாங்க எல்லாம் முழு மாட்டை கொம்போட முழுங்கி இருக்காங்க. அப்பத்தான் எனக்குப் புரிஞ்சது இது 'வெறும்' ஒண்ணே முக்கா லச்சம் கோடி மேட்டர் இல்ல... அதையும் தாண்டிப் 'புனிதமானது' அப்டீன்னு. யப்பா சாமீ... இந்த அரசியல் வாதிப் பயலுங்க கட்டுற வெள்ளை உடுப்புக்குப் பின்னாடி இவ்ளோ அழுக்கு இருக்கா?!

அட்ரஸே இல்லாத கம்பெனிக்கெல்லாம் வைமேக்ஸ் டெண்டர் கொடுத்துருக்காங்க... அட்ரஸ் இல்லாத கம்பெனி யாருக்குச் சொந்தம்னு கேட்டா அங்கதான் சப்பணம் போட்டு ஒக்காந்துருக்காங்க ராசாமாருங்க. அடிக்கிறது கொள்ளைன்னு முடிவு பண்ணியாச்சு...அப்புறம் என்ன அவனுக்குப் பங்கு இவனுக்கு பங்குனு நொண்ணை மாதிரி.. நம்மளே கம்பெனிய ஆரமிப்போம்..நம்மளே டெண்டர் எடுப்போம்.. நம்மளே ராசாங்கத்த நடத்துவோம்! எதிர்க்கட்சிக்காரன் கேள்விகேட்டா அவன் வாயிலயும் ஒரு 'கட்டை'ச் சொருவு. நல்லாருக்குய்யா டெக்னிக்கு! அமைதிப்படை படத்துல ஒரு வசனம் வரும் "நம்ம கட்சிக்கு நாந்தான் தலைவரு! நீதான் பொதுச் செயலாளரு! ஒரு பயலுக்கும் ஒரு போஸ்டிங்கும் கொடுக்கப்படாது... எதுத்துக் கேள்வி கேட்டான்னா கட்டம் கட்டி உஸ்ஸு... மன்னிப்புக் கடிதம் குடுத்தான்னா இஸ்ஸு... 'உஸ்ஸு..இஸ்ஸு இதான்பா நம்ம நாட்டு அரசியலே!"

"நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு எட்டாடு கேக்குமாம்!"

2) கிட்டத்தட்ட பதினஞ்சி நாளா டெல்டா மாவட்டங்கள் பூரா அடைமழை. பொத்துகிட்டு ஊத்துது. கண்ணுக்கெட்டின தூரம் வரை வயலே தெரியல ஒரே தண்ணிக்காடா கெடக்கு. வயல்ல பணத்தையும் ஒழைப்பையும் கொட்டுனவன்லாம் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு ஒக்காந்துருக்கான். ஒருநேரம் அடைமழை... எல்லாத் தண்ணியும் கடலுக்கு சமர்ப்பணம்... இன்னொரு நேரம் சொட்டுத்தண்ணி இல்ல. எச்சிகூட ரெண்டு சொட்டுக்கு மேல ஊறாது.

ஊதாரியாத் திரியற எல்லாரும் பிச்சைக்காரனாத்தான் ஆவணும். இயற்கை கொடுக்குற மழையை எப்ப நாம சேமிச்சி வெச்சிருக்கோம்? ஒரு நாட்டுல மூணுல ஒரு பங்கு நீரும், மூணுல ஒரு பங்கு காடும் இருந்தாத்தான் அந்த நாடு சுபிட்சமா இருக்க முடியும்... ஆனா நம்ம நாட்டுல வெறுமனே மக்கள்தொகைப் பெருக்கத்தைக் காரணம்காட்டி காடுகளையும் ஏரிகளையும் அசுரன் அண்டா வாயத் தொறந்து முழுங்குற மாதிரி முழுங்கிட்டோம். மக்களோட குடியிருப்புக்கள் எல்லாத்தையும் அடுக்குமாடிக்கட்டடங்களா மாத்தி மத்த இடங்களை நீரும் காடும் நிறையச் செய்தாத்தான் இனி மனுசப்பய ஜீவிக்க முடியும்... தனித்தனி வீடுங்குறதுல்லாம் இனி சாத்தியப்படாது.

நீர்வள மேலாண்மைங்குறது எவ்ளோ முக்கியமானது... அதைச் சரியா கையாள்றப்போ எவ்ளோ பெரிய மாற்றங்கள் இருக்கும்னு கொஞ்சம் யோசிங்க... வீணாப்போற மழைத்தண்ணியெல்லாம் அங்கங்க தடுப்பணை கட்டி சேமிச்சா எப்டி இருக்கும்? ராஜஸ்தான்ல ராஜேந்தர் சிங் அப்டீங்குற மனுஷன் இதைச் சாதிச்சி காட்டி இருக்கார்... கூடுதல் தகவல் வேணுங்கிறவங்க இந்த ரெண்டு தளங்களையும் பாருங்க.

http://ramyanags.blogspot.com/2005/10/blog-post_30.html

http://www.tarunbharatsangh.org/

வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்

இது அவ்வைக் கெழவியோட பாட்டுங்க

3)  செல பேரு மூஞ்சை எத்தனை வருசமானாலும் மறக்க முடியாதுங்க... நாஞ்சொல்றது நடந்து ஒரு இருவது வருசம் இருக்கும்... எங்க வீட்டுக்குப் பக்கத்து தரிசு நெலத்துல ஒரு குரூப்பு வந்து தோல்பொம்மைக்கூத்து நடத்துனாங்க. அவங்கள அப்போ பாக்குறப்ப ரொம்ப வித்தியாசமா இருக்கும்... அதுல தலைமையா இருந்த அந்த தம்பதிகளுக்குள்ள இருந்த நெருக்கம், மத்த மனுசங்ககிட்ட அவங்க காட்டுன அன்பு, அவங்க கூடாரத்துல நான் சாப்புட்ட கருவாட்டுக் கொழம்பு... எதுவும் இன்னும் மறக்கல. எளிமையான மனுசங்ககிட்டதான் அன்பு ததும்பி இருக்கும்னு சொல்லுவாங்க... அது சத்தியமான உண்மை.

மயில்ராவணன் கதை, நல்லதங்காள் கதை எல்லாம் நான் அந்தக் கூத்துல பாத்து தெரிஞ்சிகிட்டதுதான்...கூத்து பாத்துட்டு சேக்காளிப் பசங்களோட எல்லாம் சேந்து நாங்களே மயில்ராவணனாவும் இந்திரசித்தாவும் வெளையாடுனது எல்லாம் 'பசுமை நிறைந்த நினைவுகளே'. நேத்து அந்தத் தம்பதிகளைப் பாத்தேங்க.. தோல்பொம்மையெல்லாம் இப்ப இல்லையாம். எல்லாத்தையும் ஒழிச்சிக் கட்டிட்டு கட்டடக்கூலி வேலைக்கு போறாங்க.

ரத்தமும் சதையுமா இருந்த பல கலைகளை தொலச்சிட்டு சினிமாங்குற மாயபிம்பத்துக்குப் பின்னாடி ஓடிகிட்டு தட்டையான மனுசங்களா நாம மாறி மாமாங்கம் ஆச்சுங்க. பள்ளிக்கோடத்து புள்ளைங்களைக் கூட சொந்தக் கற்பனைக்கு வழியில்லாம குட்டைப்பாவாடை கட்டி குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட உட்டு 'ஆண்டுவிழா' நடத்திட்டு இருக்கோம்... சமுதாயம் வெளங்கும்ங்கிறீங்க?

"வர வர மாமியா கழுத போலானாளாம்... கழுதையும் தேஞ்சி கட்டெறும்பு ஆனிச்சாம்"

4) எரிமலைய எச்சி துப்பி அணைக்க முடியுமா என்ன?! விடுதலைப்போராட்டங்கள் எப்பவும் அதனோட இலக்கை அடையாம முடியறதில்லீங்க... இது தெரியாம லச்ச லச்சமா மக்களைக் கொன்னுபோட்டு ஒரு போராளி இயக்கத்தை அழிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிடும்னு மெதப்புல திரிஞ்ச ராஜபக்க்ஷே லண்டன்ல இருந்து பின்னங்கால் பிடரில அடிக்க திரும்பி ஓடி இருக்காரு. புலம்பெயர் தமிழ்மக்களைக் கையெடுத்து கும்புடத் தோணுது. அதே சமயம் ஒரு ஏக்கமும் வருது. தமிழ்நாட்டு ஜனங்க எப்ப சீரியல்ல இருந்தும் டாஸ்மாக்ல இருந்தும் விடுதலை அடையப்போறாங்கன்னு... மக்களை ஒரு மாதிரி போதை அடிமையா ஆக்கி வெச்சிருக்குற நம்ம நாட்டு அரசியல் எப்போ முடிவுக்கு வரும்?

“And as we let our own light shine, we unconsciously give other people permission to do the same” - Nelson Mandela

5) சமீபத்துல ஒரு கட்டுரையில ஒரு சுவாரஸ்யமான புதிர்க்கதை படிச்சேன். பிரபஞ்சன் எழுதினது... நம்மோட பழங்கதை மரபைப் பத்தின கட்டுரை. நம்ம கிராமப்புற இலக்கியங்கள்ள நிறைய சுவாரஸ்யமான விஷயம் இருக்குங்க... நகரங்கள் மாதிரி கிராமங்கள்ல காதலர்கள் அவ்ளோ சுலுவா சந்திச்சிப் பேசிக்க முடியாது. நெறைய திட்டம் போட்டு கஷ்டப்பட்டு சாடைமாடையா பேசிவெச்சி.... பாக்கப்போறப்ப ஏதாச்சும் சின்ன எடஞ்சல் வந்து நின்னுடும். அப்புறம் மறுபடி பழைய குருடி கதவத் தொறடி கதைதான்.

இந்தக் கதையில காதலன் காதலியப் பாத்து "உன்னைத் தனியா பாக்கணும்டி... எங்க பாக்குறது எப்பிடி பாக்குறது"ன்னு கேக்குறான். அவளுக்கும் மனசு ஆசையில கெடந்து அடிச்சிக்குது ஏக்கத்துல... இறுக்கத் தழுவி அணைச்சி ஒரு முத்தம் கொடுத்துக்கிட்டா அது ரெண்டு வருசத்துக்கு தாங்குமே? ஆனா ஊரு மக்களுக்குத் தெரிஞ்சா பொழப்பு நாறிடுமே? ரெண்டு பேருமே சாடையா பேசிக்கிறாங்க... அதான் இந்தப் பாட்டு...

"ஒரு மரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன்-
“பெண்ணே உன் வீடு எங்கே?”
“பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே.”
“நான் எப்போ வரட்டும்.”
“இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த
பிறகு வந்து சேர்."

என்ன அர்த்தம்னு கொஞ்சூண்டு மூளையக் கசக்கி யோசிங்க... பாக்கிய அடுத்த வாரம் பேசிக்குவோம்.

6) கடேசியா எப்பவும்போல ஒரு கவிதை. நரன் எழுதினது:

பிரசவ வார்டு
---------------------
மருத்துவமனை பிரசவ வார்டில்
பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்
ஈனும் வலியில்
"அம்...மா" வென அலறியது
பெண் எறும்பொன்று
அதே வார்டில்
பிள்ளைப் பெற்றிருந்தவளை
பார்க்க வந்திருந்தவர்கள்
எடுத்து வந்திருந்த பாட்டிலில்
ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
சில எறும்புகள்
பிள்ளைத்தாச்சிக்கென ...
பிள்ளைத்தாச்சிக்கென .

இவரோட மத்தக் கவிதைகளையும் படிக்கணும்னா இங்க போங்க

http://narann.blogspot.com/

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி! - இறுதிப் பகுதி

அகதி வாழ்வில்
அருவருப்பொன்றும்
அவ்வளவாயிருந்ததில்லை…
வாயுள் சலங்கழித்த
சமாதானச்சிப்பாயின் மூத்திரப்போக்கியை
கடித்தெடுக்க முடியாத
இயலாமையை விட...
-சக்கரவர்த்தி

ஒரு ஈழக்கவிஞனின் இந்தக் கவிதையைத் தட்டச்சும்போது என் விரல்கள் நடுங்குகின்றன. எனக்கு முன்னே என் இனம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் பாரம் என்னை அழுத்துகிறது. கைகால் இருந்தும் முடவனாய், செவியிருந்தும் செவிடனாய், விழியிருந்தும் ஊமையாய் ஆனோமே என்ற குற்ற உணர்ச்சி ஒரு கம்பளிப்பூச்சியாய் என்மேல் ஊர்கிறது.

கிளிநொச்சி நகரம் வீழ்த்தப்பட்டது என்ற செய்தி உலகத்தமிழரின் உள்ளங்களில் இடியாக விழுந்தது. உலகம் முழுதும் வாழ்ந்திருக்கும் தமிழர்கள் கிளர்ந்தெழுந்தனர். தமிழகத்திலும் நாளொரு போராட்டமும் பொழுதொரு ஆர்ப்பாட்டமுமாய் ஒவ்வொரு விடியலும் ஆட்சியாளர்களுக்கு நெருப்பை மடியில் கட்டிக்கொண்டதைப்போல விடிந்தது. மொழிப்போர் காலத்துக்குப் பிறகு தமிழன் சுரணை பெற்ற காலகட்டமாய் 2009 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்கள் இருந்தன.

தமிழகத்தில் ஈழத்தின் கொடூரங்களை சட்டங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் சளைத்துவிடாமல் பிரச்சாரம் செய்தவர்களை இந்த சமயத்தில் நன்றியோடு நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். நான் குறிப்பிடுவது எவ்வித தேர்தல் லாபநோக்குமின்றி இன உணர்வினையும் மனித நேயத்தையும் மட்டும் நெஞ்சில் சுமந்திருந்தவர்களைப்பற்றி மட்டுமே. தீவிர இடதுசாரி இயக்கமான ம.க.இ.க மற்றும் அதன் துணை அமைப்புக்கள், பெ. மணியரசனின் தமிழ்தேசியப் பொதுவுடைமைக்கட்சி, பெரியார் திராவிடர் கழகம், அய்யா நெடுமாறன், இன்றைய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான், தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு, அவரது துணைவியாரும் கவிதாயினியும் ஆன தாமரை மற்றும் இன்னும் ஏராளமான சிறு சிறு இயக்கங்கள், இவர்களையன்றி எந்தத் தலைமையுமின்றிக் களத்தில் சுழன்ற தமிழகக் கல்லூரி மாணவர்கள் குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் இவர்களெல்லாம் ஊண் உறக்கம் மறந்து ஆற்றிய களப்பணி காலத்தின் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட வேண்டியது! கல்லூரி மாணவர்களின் அயராத உழைப்பாலும், சீமான் போன்றோரின் சீற்றம் மிகுந்த உரைகளாலுமே சிவகங்கையில் சிதம்பரமும், ஈரோட்டில் இளங்கோவனும் 'தலையால் தண்ணி குடிக்க' வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தேர்தல்வரை நாடகம் நடத்திக் கொண்டிருந்த இந்திய ஏகாதிபத்தியம் கடைசிகட்ட வாக்குப்பதிவு முடிந்ததுமே தன் முகமூடியைக் கழட்டி வீசியது. அடுத்த தேர்தலுக்குள்தான் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்களே! தனது கோரப்பற்களை விரித்து அது விழுங்கத் துவங்கியது மனிதமாண்புகளையும் மண்டை ஓடுகளையும்! எலும்புக்குவியலுக்குள் நசுங்கிச் செத்தது காந்தியத்தின் கடைசி அத்தியாயம்!

மே 18 ஆம் தேதி. பிணந்தின்னி வட இந்திய ஊடகங்கள் பிரபாகரனுடையது எனப்படும் ஓர் உடலத்தைக் காட்டி அகோரிகளைப் போலக் கூத்தாடின. பார்த்திருந்த தமிழரின் கண்ணீர் அன்று மட்டும் சிவப்பாய்ப் பொங்கியது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றதை தமிழகத் தமிழர் ஈழத்துக்குச் செய்த துரோகமாகவே சித்தரிக்க்கின்றனர். இல்லை... ஈழத்தின்மீதான தமிழக மக்களின் அனுதாபம் என்றும் 'சீஸரின் மனைவி' போல சந்தேகத்துக்கு இடமில்லாத ஒன்று. ஆனால் மக்கள் இனத்துரோகிகளுக்கு மாற்றாக ஜெயலலிதாவை நம்பத் தயாரில்லை என்பதே உண்மையானது. மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது முத்துக்குமாரின் உடல் மட்டுமல்ல; ஈழ ஆதரவுத் தமிழக அரசியல்வாதிகளின் மேலான நம்பிக்கையும்தான்.

ஈழப்படுகொலை முடிந்த மூன்றாம் நாளே பதவிக்காக அரசியல்பேரம் துவங்கியது 'தமிழினத் தலைவரின்' திமுக. அடுத்த தேர்தலுக்கு 'ஈழம்' பேசினால் போதும், அதுவரை ஓய்வு என்று கொடநாடு பயணப்பட்டார் ஜெயா. 'நீலச்சாயம் வெளுத்துப்போன' கதை தெரியாமல் கட்டுரைத்தொடர் எழுதத் தொடங்கினார் அண்ணன் திருமா. 'சுகாதாரம்' பறிபோன துக்கத்தில் முடங்கிப்போனார் தமிழர் பண்பாட்டுக்காவலர் மருத்துவர் அய்யா. உணர்வுள்ள மிச்சத் தமிழனும் நிதர்சனத்தின் வீரியம் தாங்காமல் நெடுந்தொடர்களுக்காய்க் கண்ணீர்ச் சுரப்பிகளை 'ஓவர்டைம்' செய்ய ஆரம்பித்தான். ஆக... முடிந்தது தமிழகத்தின் ஈழத்தாக்கம்...

இல்லை... முடியவில்லை. ஈழம் ஒரு எரிமலையைப்போல் எங்கள் நெஞ்சில் உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றது... மேலே பூத்திருக்கும் சாம்பல் ஊதப்பட்டு உணர்வெனும் காற்று வீசியடிக்கும் பொழுதிற்காய்க் காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த இறுதித்தீர்ப்பு நாளில் அரியணைகள் தூக்கி எறியப்படும்... மண்ணுக்குள் புதைந்திருக்கும் எம் மாவீரர்கள் மறுபடியும் உயிர்ப்பார்கள் என்ற நம்பிக்கை என் நெஞ்சில் என்றும் இருக்கின்றது. ஏனெனில் விடுதலைப்போராட்டங்கள் இறந்துபோனதாக வரலாறு என்றுமே பதிவு செய்ததில்லை.

ஈழத்தின் மக்கள் ஒன்றும் ஆனிப்பொன் கட்டிலும் அம்சதூளிகா மஞ்சமும்,அறுசுவை விருந்தும் கேட்டுப்போராடவில்லை. அவர்கள் போராடியது சுயமரியாதை கெடாத வாழ்வுக்கும், சுதந்திரமான காற்றுக்கும். அதற்காகவே இன்றுவரை அவர்கள் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் சர்வதேசங்களும் மனிதத்தின் மொழிமறந்து ஆண்டுகள் ஆயிற்று. இந்தச் செவிட்டுச் சர்வதேச நாடுகளின் செவிகள் துப்பாக்கிகளின் மொழியை மட்டுமே கேட்கப் பழகிவிட்டன. ராணுவச் சமநிலையை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தபோதுதான் சர்வதேசம் ஈழம் என்றொரு தேசம் இருப்பதை ஏறிட்டுப் பார்த்தன.

துப்பாக்கியின் மொழியைப் பேசத் தெரிந்த பிரபாகரா... எங்கே இருக்கிறாய் நீ?

களமாடி வீழ்ந்த
எம் தோழர்களே!
உம் உடலங்களைக்
கொடுங்கள்
ஒற்றைத் தீக்குச்சியாக...
நமுத்துப்போன நம்
மக்களின் நெஞ்சில்
உணர்வைத் தீமூட்ட...

(தொடர் முற்றும்... தேடல் தொடரும்)

புதன், 1 டிசம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி! - பகுதி 3


உன் கனவில்
          பாம்பு
          துரத்துகிறது
          நீ
         ஓடுகிறாய்...

குறவன் கனவில்
         அவன்
         துரத்துகிறான்
         பாம்பு
         ஓடுகிறது...

வீரம்
         தொழிலாக்கு.

- காசி ஆனந்தன்

"நல்லாருக்கீங்களாண்ணே! ரொம்ப தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணி குடுங்க" என்றபடி என் அலுவலகத்தில் நுழைந்த அவன் பெயர் வேலவன். வயது சுமார் 19. என் கிராமத்தைச் சேர்ந்தவன். ஒருவகையில் உறவுமுறையுங்கூட.

"என்னடா வேலவா? நீ சென்னையிலயா இருக்க? இத்தன நாளு எனக்குத் தெரியாம போச்சே! என்னடா பண்ற இங்கிட்டு?"

"ஆமாண்ணே! இங்கனதான் ஒரு மெடிக்கல் ஷாப்புல வேலைக்குச் சேந்து ஆறு மாசமாச்சி.மாசம் ரெண்டாயிரம் சம்பளம், ரூமு கொடுக்குறானுவோ. நம்ம வக்கீலு பாரதிண்ணேதான் ஒங்க நம்பர் குடுத்து போயி பார்றான்னு சொன்னாரு. இதுல உங்களுக்கும் ஒரு காப்பி கொடுத்துட்டு போலாம்னு ஓடியாந்தேன்"

அப்போதுதான் அவன் கையில் இருந்த பார்சலைப் பார்த்தேன். பிரதியெடுக்கப்பட்டு சிறுநூல் வடிவில் இருந்த முத்துக்குமாரின் மரணசாசனம். அவனது சம்பளத்தில் கணிசமான அளவு செலவழித்து அவன் அந்தப் பிரதிகளை எடுத்து அவனுக்குத் தெரிந்த நண்பர்கள் ஒவ்வொருவரையும் தேடித்தேடிச் சென்று கொடுத்து வருகிறான். இத்தனைக்கும் அவனது குடும்பத்திற்கு அவனது வருமானம்தான் மிகப்பெரும் ஆதாரமாக இருந்தது. அதில் ஒரு பகுதியைச் செலவிட்டு... என் கண்கள் லேசாகக் கசிந்தன.

நான் பார்த்து வளர்ந்த வேலவனைப்பற்றி எனக்குள் இருந்த சித்திரம் கலையத் துவங்கியது. அவன் பேசி நான் பார்த்ததில்லை. அதிர்ந்துகூட நடக்கமாட்டான். ஏறக்குறைய அவன் ஒரு வாயுள்ள ஊமை என்றே அதுவரை நான் எண்ணி இருந்தேன். ஆனால் இன்று...?

ஈழத்தின் வரலாற்றில் இருந்து தமிழகத்தின் மொழிப்போர், இந்திய வரலாறு, ஏகாதிபத்திய அரசியல், உலக விடுதலைப்போராட்டங்கள் என அவன் அதிவேகத்தில் வீழும் அருவியாய் இருக்க நான் தாங்கும் பாறையானேன்.

அவன் பேசிக்கொண்டே இருந்ததை நான் ஆச்சர்யமாகப் பார்த்தேன். நான் பேசாதிருந்ததை அவன் ஆச்சர்யமாகப் பார்த்தான்.

ஏறத்தாழ ஊமையாய் இருந்த வேலவனை உலக விடுதலைப்போராட்டங்களின் வரலாற்றைப் பேசவைத்தது எது? ஈழம் !

பொறியியலும் இன்னபிற உயர்தொழில்நுட்பப் படிப்புக்களும் படித்த இளைஞர்களை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்களின் வீடுதேடிச்சென்று காலில் விழுந்து "காங்கிரஸுக்கும் சிதம்பரத்துக்கும் ஓட்டுப் போடாதீர்கள்" என்று மன்றாட வைத்தது எது? ஈழம்!

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்களை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கவைத்து அவர்களைக் கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்கும் நிலையை உருவாக்கியது எது? ஈழம்!

இன்னும்...இன்னும்... ஏராளமான தமிழக இளைஞர்கள் மனம் கொதித்து செய்வதறியாமல் "என்ன செய்யப்போகிறோம் எம் இனத்துக்கு?" என்று ஏங்கித் தவித்தனர். "உங்களுக்குக் கிடைத்த உன்னதத் தலைவன்போல எங்களுக்குக் கிடைக்கவில்லையே!" என்ற முத்துக்குமாரின் வரிகள்தான் அவர்களின் உள்ளக்குரலாய் இருந்தது. ஆம்! ஒரு உணர்ச்சிப்பூர்வமான பட்டாளத்தை வழிநடத்தவும், அதன் ஆற்றலை ஒருங்கிணைக்கவும் தமிழகத்தின் தலைவர்கள் தயாரில்லை. மாறாக வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த ஈழ உணர்வினைக் களப்பலியாக்கவே அவர்கள் விரும்பினர்.

காங்கிரஸை எதிர்க்கிறேன் என்ற பெயரில் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்!" என்ற அபத்தமான கோஷமும் எழுந்தது. இருபத்தைந்து வருட ஈழப்போராட்டத்தையும் விடுதலைப்போரில் வித்தாகிப்போன மாவீரர்களையும் இழிவுபடுத்தும் வண்ணம் "நான் ஜெயித்தால் ஈழம் அமைத்துத் தருவேன்" என்று வாய்ச்சவடால் அடித்த ஜெயலலிதாவைப் புலம்பெயர் சமூகம் கூட "ஈழத்தாய்" என்று புகழ்ந்தது. "போரென்றால் அப்பாவி மக்களும் சாகத்தான் செய்வார்கள்" என்று அம்மையார் உதிர்த்த முத்து, பாவம் 'செலக்டிவ் அம்னீஷியா' (வார்த்தை உபயம் நன்றி : ஜெயலலிதா) வால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்துக்கு மறந்துபோனது!

இந்த சமயத்தில் இந்திய அரசியலமைப்பைப் பற்றியும் சிலவார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மாநில அரசு என்பது ஏறத்தாழ கங்காணி வேலைக்கு ஒப்பானதுதான். அதைத்தவிர வேறு அதிகாரங்கள் ஒரு மாநில அரசுக்குக் கிடையாது. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளிலோ பாதுகாப்புத் தொடர்பான முடிவுகளிலோ ஒரு மாநிலக் கட்சி அல்லது மாநில அரசாங்கம் தலையிடுவதை ஒருபோதும் டெல்லிதர்பார் அனுமதித்ததில்லை. டெல்லிதர்பார் என்பது வெறுமனே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய அரசியல்கட்சிகளால் மட்டும் நடத்தப் படுவதில்லை. அது ஒரு சூதாட்டக்களம்! அங்கு மிகப்பெரும் முதலாளிகளும் அரசியல் தரகர்களும் கோலோச்சும் மாயதர்பார் அது! அதன் வெளியுறவு, நிதி, பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் அனைத்தும் இம்மாதிரியான முதலாளிகள் மற்றும் தரகர்களின் நலனையே முதன்மையாகக் கருதி எடுக்கப்படுகின்றன. இம்மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும்போது, கொள்கைகள் நிர்ணயிக்கப்படும்போது ஒரு மாநிலக் கட்சி அல்லது அரசின் அழுத்தம் என்பது கால்தூசுக்குக்கூட மதிக்கப்படாது.

எனவே வெறுமனே தி.மு.க வையும் கருணாநிதியையும் மட்டுமே குற்றம் சாட்டுவதென்பது குருடன் யானையைப் பார்த்த கதைக்கு ஒப்பானது. அவரது ஆட்சியை எப்போது கவிழ்க்கலாம் என்று சுற்றிலும் நிற்கின்ற ஒரு கூட்டம்... அதனிடம் இருந்து ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள அவர் எத்தகைய ஆட்காட்டி வேலைக்கும், சமரசத்துக்கும் சித்தமாய் இருந்தார். அவர் மட்டும் ஆட்சிக்குப்பதிலாக தமிழ், தமிழர் என்று பேசும் வைகோவையும் ராமதாஸையும் திருமாவளவனையும் ( இவர் இன்று காங்கிரசில் சரணாகதியாகி தன் "அடங்க மறு; அத்துமீறு; திமிறி எழு; திருப்பி அடி!" என்ற கோஷத்துக்கு புதிய பொருள்படைத்து நிற்கிறார் என்பது வேறு!) ஓரணியில் கொண்டுவர முயற்சி செய்திருந்தால்? வைகோவோ அல்லது ராமதாஸோ கருணாநிதிக்கு எதிரான தமது சொந்தப் பகையைக் கைவிட்டு "வாருங்கள் கலைஞரே! போராட்டத்தை முன்னடத்திச் செல்லுங்கள்! உமக்கு முன்னே நின்று உம்மை எதிர்ப்போருக்கு நாங்கள் முகம் கொடுக்கிறோம்!" என்று முதல் கரத்தை நீட்டி இருந்தால்? ஜெயலலிதாவோடு சேர்ந்து தமிழர் தேசியத்தை ஆதரித்தது எப்படி இருந்ததென்றால் ராஜபட்சேவுடன் இணைந்து ஈழப்போராட்டத்தை நடத்துவது போல...!

இவர்கள் யாருக்கும் நிஜத்தில் தமிழ் இனத்தின் மீதான அக்கறை இருந்திருந்தால் தமது அரசியலை மட்டும் முன்னிறுத்தி மக்களைப் பகடைக்காயாக்கி இருக்க மாட்டார்கள்.

ஈழம் என்ற ரோம் பற்றி எரிந்தபோது தமிழக அரசியல் நீரோக்கள் தேர்தல் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். தம்மை வழிநடத்தும் தலைவனின்றி திசை சிதறி, மனம் சிதறி, இலக்கு சிதறிக் கிடந்தார்கள் தமிழக இளைஞர்கள். இன்னும் நல்ல தலைமைக்கான வெற்றிடம் தமிழகத்தில் அப்படியேதான் இருக்கின்றது. வெற்றிடம் நிரப்பும் முயற்சியில் ஸ்டண்ட் நடிகர்களுக்கும் நப்பாசை!

மொழிப்போர் காலத்தில் தமிழ் இளைஞர்களுடையே இருந்த இன எழுச்சி மீண்டும் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அரும்பி இருந்த காலகட்டத்தில் அதனை வழிநடத்தும் தலைமையின்றி எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது. கருணாநிதி மட்டும் துரோகியல்ல. தமிழ், தமிழர் என்று பேசிக்கொண்டு எல்லாவற்றையும் தேர்தலுக்காக அடகுவைத்த அனைத்து தமிழக அரசியல்வாதிகளுமே துரோகிகள்தாம். அவர்கள் ஈழத்துக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை. தமிழகத் தமிழருக்கும் சேர்த்தே துரோகமிழைத்தனர். ஒரு இனத்தின் உணர்வெழுச்சி காயடிக்கப்பட்டது. அவர்கள் மிகத் தந்திரமாக ஏற்கனவே பின்னப்பட்டிருந்த பொருளாதாரத் தேடலுக்கான அன்றாடப் போராட்டம், நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய வலைகளில் சிக்கவைக்கப் பட்டிருந்தனர். அவர்க்ளைத் தேர்தல் சந்தையில் விலைமாடுகளாக்குவது எளிதான விஷயமாகவே முடிந்தது.

நாடகத்தின் இறுதிக்காட்சி நெருங்கியது. மேமாதம் பதிமூன்றாம் தேதி கடைசிக்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டு திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்டிருந்த இறுதிக்காட்சி அரங்கேற்றப்பட்டது. ஒருலட்சம் பிணங்கள் விழுந்தன. ஆறுகோடிப் பிணங்கள் அழுதன!

மேமாதம் பதினெட்டாம் தேதி விடிய விடிய அழுதுதீர்த்த உணர்வுள்ள தமிழர்கள் விடிந்ததும் அன்றைய வயிற்றுப்பாட்டுக்காய் அரக்கப்பரக்க ஓடத் தொடங்கினர்!

(கொஞ்சம் அழுகைக்குப்பின்.... தொடரும்!)
Related Posts with Thumbnails