வியாழன், 26 செப்டம்பர், 2013

லூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு

யுதிர்ஷ்டிரனுக்கு கடுப்பு கடுப்பாய் வந்தது. அலுத்துச் சலிச்சி வீட்டுக்கு வந்தா கொஞ்சம் காப்பித்தண்ணி போட்டுக் கொடுக்கக்கூட ஆளில்லை. வீமன் எங்கியாச்சும் கல்யாண வீட்டுல சமையலுக்குப் போயிருப்பான்.. சம்பளத்தோட சாப்பாடும் உண்டுங்கிறது கூடுதல் சவுரியம்.. சின்னவனுவோ ரெண்டு பேரும் குதுர மேய்க்கவும் கதைப்பொஸ்தவம் படிக்கவும்தான் லாயக்கு. பாஞ்சாலி அர்ச்சுனங்கிட்ட குலாவிக்கிட்டு காட்டுப்பக்கம் போயிருப்பா போலருக்கு.. பெத்த தாயாச்சும் கொஞ்சம் காப்பித்தண்ணி குடுப்பான்னு பாத்தா முந்தாநாளு உருளக்கெழங்கு கறிய கொஞ்சம் அதிகமா தின்னுட்டு வாய்வுத்தொல்லைன்னு நெஞ்சைப் புடிச்சிக்கிட்டு சுருண்டு படுத்திருக்கு கெழம்..

எப்பயும் ஊர்ஞாயம் பேச நாலுபேரு வந்து நிப்பானுவோ.. இன்னிக்கி ஒரு பயலையும் காணும். மண்பானையத் தொறந்து கொஞ்சம் ஜில்லுன்னு தண்ணியக் குடிச்சிட்டு திண்ணையில வந்து உக்காந்தான்..

“அப்பப்பப்பா.. என்னா வெயிலு.. என்னா வெயிலு.. பேருதான் காடு... வெக்கை கொளுத்துது மச்சான்”ன்னு சொல்லிக்கிட்டே மேல்துண்டை எடுத்து வேர்வைய தொடைச்சிக்கிட்டு தரையத் தட்டிவுட்டுட்டு பக்கத்துல வந்து உக்காந்தான் கிருஷ்ணன்.

“தங்கச்சி.. கொஞ்சம் சில்லுன்னு தண்ணி கொண்டுட்டு வாம்மா”ன்னு குரல்கொடுத்த கிருஷ்ணன்கிட்ட கொஞ்சம் கடுப்பா “அவ நடுலவன்கூட காட்டுக்கு சுள்ளி பொறுக்கப் போயிருக்கா போல.. உம்ம அத்தையும் மேலுக்கு நோவுதுன்னு படுத்திருக்கு.. இரும்.. நானே போயி எடுத்தாரேன்”ன்னு சொல்லி மறுவடி எந்திரிச்சிப் போயி தண்ணி கொண்டாந்து கொடுத்த யுதிர்ஷ்டிரன்

“என்ன மச்சான் சலிச்சிப்போயி வந்திருக்கீரு.. போன காரியம் என்னாச்சு? காயா பழமா?” ன்னான்.

“எங்கய்யா... நீரு விடாக்கண்டன்னா உம்ம பங்காளி கொடாக்கண்டனா இருக்கான்.. “அவந்திமிரு... சீட்டாடித் தொலைச்சதை என்ன உரிமைல திருப்பிக் கேக்குறான்.. அப்டியே பாவம்புண்ணியம் பாத்து கொடுக்கலாம்னு பாத்தாக்கூட எங்கப்பன் வதவதன்னு நூறுபேத்த பெத்துப் போட்டுட்டான்.. அம்பது வேலி நெலம்.. மிராசுதார்னு பேருதான்.. எழவு பாகப்பிரிவினை பண்ணா குடிசை போடக்கூட ஆளுக்கு முப்பது குழி நெலம்தான் தேறும்.. இதுல சித்தப்பன் மக்களுக்கு எங்கேருந்து குடுக்குறது?”ன்னு திரும்பிக் கேக்குறான் மச்சான்.. நானும் என்னன்னமோ அகடவிகடம்லாம் பண்ணிப் பாத்துட்டேன்.. பய அசையலையே.. வயல் என்ன வரப்புகூட தரமுடியாதுங்கிறான்..ஊருல இருக்குற பெரிய மனுசன் பூரா அவம்பக்கம்தான் பேசுறானுவோ”ன்னான் கிருஷ்ணன்.

கொஞ்சநேரம் மேலாக்க கூரைய வெறிச்சிப் பாத்துட்டு இருந்தான் யுதிர்ஷ்டிரன்.. ரொம்ப நேரமா அசையாம நின்ன கெவுலி ஒண்ணு சுள்ளுன்னு பாய்ஞ்சி எதுத்தாப்புல இருந்த பூச்சியக் கவ்வுனிச்சி.. கெவுலியையும் பூச்சியையும் வேடிக்கை பாத்துட்டு இருந்தவங்கிட்ட கிருஷ்ணன்

“ஏம்மச்சான்.. நம்மகிட்டதான் டாகுமெண்ட்டெல்லாம் வலுவா இருக்கே... பேசாம கோர்ட்டுல போட்ருவமா?”ன்னான்

“மிச்சமிருக்குறது அந்த பேப்பரும் பாஞ்சாலி காதுல மூக்குல கெடக்குற குந்துமணி தங்கமும்தான்.. அதை வித்து வக்கீலைப் புடிச்சி நோட்டீஸ் வுட்டு கேஸ் போட்ரலாம்தான்.. அது கோர்ட்டுக்குப் போயி நம்பராகி பெட்டிசன் காப்பிய பிரதிவாதிக்குக் குடுக்குறதுக்குள்ளாற என்னோட புள்ளகுட்டிங்க வளந்து ஆளாயிடும் மச்சான்.. அதுக்குமேல வாய்தாவுக்கு வாய்தா போட்டு, தீர்ப்பாயி, அப்பீலு, மேல்கோர்ட்டுன்னு நம்ம கட்டை தெக்க போற வரைக்கும் காலணா காசுக்கு ஆவாது.. வேற ஏதாச்சும் யோசனை சொல்லும்”

“வேற என்னய்யா சொல்றது? பொண்ணு கட்டிக் குடுத்த பாவத்துக்கு நானும் உங்ககூட கெடந்து அல்லாடுறேன்.. வேணும்னா நம்ம மாமம்மச்சானுவோ, சேக்காளியளைச் சேத்துக்கிட்டு மோதிப்பாப்பம்.. இந்தப் பக்கம் நாலு தலை, அந்தப்பக்கம் நாலு தலை உருளத்தான் செய்யும்.. வக்காளி நாம பெரிசா, அவம்பெரிசான்னு பாத்துருவோம்.. என்ன சொல்றீரு?” ஆவல் ஆவலாய்க் கேட்டான் கிருஷ்ணன்..

“சொம்மாக் கெடவும் மச்சான்.. இதென்ன அந்தக்காலம் மேரின்னு நெனைச்சீரா.. இப்போ சர்க்காரு, போலீசு, சட்டம்னு ஆயிரத்தெட்டு இருக்கு.. லாக்கப்ல போட்டு நொங்கிப்புடுவானுவோ நொங்கி... இதெல்லாம் ஒரு மயிறும் கதைக்காவாது... நான் பாஞ்சாலி கழுத்துல கெடக்குற நகைநட்டை வித்து பணம் ரெடி பண்றேன்.. பட்டணம் போயி நாலுக்கு எட்டு ஒரு ரூம்பைப் புடிப்போம்.. நமக்குத் தெரிஞ்ச தொழில் ஜோசியம் கைவசம் இருக்கு.. நாலைஞ்சி மாசம் கழிச்சி வீமனை வெச்சி சின்னதா நாலு பெஞ்சுப்பலவை போட்டு மெஸ்சும் வைக்கலாம்.. வழக்கு வாய்தா, வம்பு,சண்டைன்னு போவாம உருப்படியா பண்ணுவோம்.. நீரும் வாரும் கூடமாட ஒத்தாசையா இருக்கும்”னு சொல்லிகிட்டே துண்டை ஒதறிப் போட்டுக்கிட்டு எந்திரிச்சான் யுதிர்ஷ்டிரன்.

இதுக்குமேல கதைய எப்டி எழுதித் தொலைக்கிறது..மொறைப்படி பாத்தா பயலுவோ வெட்டுக்குத்துன்னு எறங்கி அடிச்சிக்கிட்டு சாவணுமே.. இப்ப என்ன பண்ணித் தொலைக்கிறதுன்னு தாடியச் சொறிஞ்சிக்கிட்டு முழிச்சிட்டு இருந்தான் வியாசன். “நீரு என்ன எழவோ பண்ணித் தொலையும்.. சீக்கிரம் கதையச் சொல்லி முடிச்சா நானும் டைப்படிச்சிக் குடுத்து முடிச்சிட்டுப் போயிருவேன்.. ஆயிரத்தெட்டு சோலி கெடக்கு”ன்னு மொனகிக்கிட்டே கையில இருந்த தந்த ஊசியால பல்லுக் குத்த ஆரமிச்சான் விநாயகன்.
.


ஞாயிறு, 5 மே, 2013

ஸ்வர்ணா என்றொரு தேவதை

நீண்டதூரப் பேருந்துப் பயணங்களில் ஜன்னலோர இருக்கையும், "சார் என்ன பண்றீங்க" ரீதியில் ஆரம்பித்து உயிரை எடுக்காத, தொந்தரவற்ற பக்கத்து இருக்கைப் பயணியும் வாய்க்கப்பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ரகுநாதன் அன்று கொஞ்சம் விசேஷமாகவே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்... முன்னிருக்கையில் அடர்த்தியான கூந்தலில் கதம்பச்சரம் சூட்டி அமர்ந்திருந்தவளின் ஒன்றிரண்டு முடியிழைகள் முகத்தில் உரசப்பெறுவதன் மூலம்! ரகுநாதனுக்குக் கவிதை எழுதும் உந்துதல் வந்தது... ஸ்வர்ணலக்ஷ்மியின் நினைவுகளும்.

ஸ்வர்ணலக்ஷ்மி பதினொண்ணாங்கிளாஸ் அட்மிஷனுக்காக நுழைந்தபோது மொத்த ஸ்கூலுமே "கால் கண்டார் காலே கண்டார்! தோள் கண்டார் தோளே கண்டார்" என்று பார்த்தவிழி பூத்து நின்றது.வாத்தியார், பையன்கள் என்ற வித்தியாசங்கள் மறைந்து சகலரும் ஜோதியில் ஐக்கியமாகி இருந்தனர்.

கால்விரல்கள்கூடத் தெரிந்துவிடாதபடிக்கு சர்வஜாக்கிரதையாய் அசைந்துவரும் தாவணிகளை மட்டும்தான் அவன் கண்டிருக்கிறான்.
கணுக்கால் தெரியும் மினிஸ்கர்ட், வினோதமான மேல்சட்டை, சுமார் மூன்றடி நீளத்தில் காற்றில் கொஞ்சிக் கொண்டிருக்கும் கூந்தலை அடிக்கடி சரிசெய்யும் நீண்ட மெல்லிய விரல்கள்... இத்யாதி,இத்யாதி! ஆற்றில் வலைக்குச் சிக்காமல் துள்ளி நழுவும் கெண்டைமீன் போல கண்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஸ்வர்ணாவுக்கு. நொடிக்கு மூன்றுதரம் சிரிக்கும் வித்தையை எங்கிருந்துதான் கற்றாளோ! சாயங்கால வெயில் மாந்தளிரில் பட்டால் ஒருமாதிரி மின்னுமே, அதுபோல வெளுப்புமில்லாமல் மாநிறமும் இல்லாமல் ஒரு நிறம் அவளுக்கு... ராட்சஸி!

கூடப்படிக்கும் பெண் எவளாவது லேசாகத் திரும்பிப் பார்த்தாலே அடுத்தநாள் சுவரிலோ போர்டிலோ இன்னாருக்கும் இன்னாருக்கும் லவ்வு எனக் காவியம் படைக்கும் கிறுக்குப்பயல்கள் ஊர் அது. ஸ்வர்ணலக்ஷ்மியோ முழுக்க முழுக்க ஸ்நேகம் ததும்பி நின்றாள். எல்லோருக்கும் ஒரு சிரிப்பு... ஒரு தொடுகை... ! பையன்கள் அவ்வப்போது லீவ்லெட்டர் கொடுப்பதற்காகவே ஸ்டாக் வைத்திருக்கும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி இன்னபிற வியாதிகள் எல்லாம் ஸ்வர்ணலக்ஷ்மி வந்தபின் மாயமாய்ப் போயின... தேவதைகள் சொஸ்தப்படுத்துவதற்காகவே அவதரிக்கின்றனர் போலும்!

ஏகப்பட்ட பையன்கள் தப்பும் தவறுமாய் காதல்கடுதாசிகளை விதம்விதமாக எழுதிக்குவிக்க ரெண்டுகுயர், மூணுகுயர் நோட்டெல்லாம் இளைத்துத் துரும்பாய்ப்போன கொடுமையெல்லாம் நடந்தேறின. பனிரெண்டாவதுக்கு கெமிஸ்ட்ரி வகுப்பெடுக்கும் பாலமுருகன் வாத்தியாரும் கைநோக லெட்டர் எழுதியதாகச் செவிவழிச் செய்திகள் உண்டு! எல்லாக் கடுதாசிகளையும் சின்னப்புன்னகையாலும் "சேச்சே! நான் உன்ன லவ்வெல்லாம் பண்ணலடா" என்று ஒற்றைவாசகத்துடனும் எளிதாகக் கடந்து கொண்டிருந்தாள் ஸ்வர்ணா. 'சிரிச்சி சிரிச்சி பேசறா... அப்புறம் ஏன் லவ்வு பண்ணலங்கிறா?' என்ற கேள்வி, ஒதுக்கி வீசப்பட்ட பாடப்புத்தகங்களைக் கரையான் அரிப்பதுபோல ஒவ்வொருத்தனையும் அரித்துத் தின்றது. காதல் துளிர்க்கப்பெற்றவர்களும், காதல் மறுக்கப்பட்டவர்களுமாக ஏகப்பட்ட புதுக்கவிஞர்கள் பிறப்பெடுத்தனர். மொத்தத்தில் "எங்கெங்கு காணினும் ஸ்வர்ணாவடா" என்றாகிப்போனது.

ஒண்ணாங்கிளாசிலிருந்து கூடப்படிக்கும் பெண்களிடம் பேசியறியாத ரகுநாதனுக்கு ஸ்வர்ணா அவனிடம் வந்து எது பேசினாலும் ஏதோ மந்திர உச்சாடனம்போல இருந்தது. "ஹோம் வொர்க் முடிச்சிட்டியாடா?" என்று கேட்டால்கூட மிதத்தல், பறத்தல் போன்ற அதிமானிட வேலைகளெல்லாம் செய்ய ஆரம்பித்தான். ஒன்றரை குயர் நோட்டு முழுக்க "அன்பே ஸ்வர்ணா!ஆருயிர் செய்யுதடி உன்னால் தர்ணா" என்று ஆனாவுக்கு ஆவன்னா, ணாவன்னாவுக்கு ணாவன்னா எல்லாம் போட்டு படுஜோராகக் கவிதை எல்லாம் எழுதத்தான் செய்தான். ஆனால் ஸ்வர்ணாவிடம் பேசித் தொலையும்போது மட்டும் நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு சதிவேலை செய்யும். நாலு பசங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கதைபேசத் தொடங்கினால் ஸ்வர்ணாவுக்கு என்ன பிடிக்கும், ஸ்வர்ணா நாளைக்கு என்ன ட்ரெஸ்ஸில் வருவாள், ஸ்வர்ணாவின் அண்ணன் ஏன் இவ்வளவு தடியாக ராட்சசன் மாதிரி இருக்கிறான் என்பது போன்ற விவரங்கள் அலசி ஆராயப்பட்டன.

ஸ்வர்ணாவுக்கு மொத்த ஸ்கூலுமே தன்னைச் சுற்றி இயங்கி வருவதெல்லாம் ஒரு விஷயமாகத் தோன்றவே இல்லை. வந்தாள்... சிரித்தாள்.. பேசினாள்..சிரித்தாள்.. படித்தாள்..சிரித்தாள்..ஹோம்வொர்க் செய்தாள்..சிரித்தாள்...ஹோம்வொர்க் செய்யாமல் திட்டு வாங்கினாள்..சிரித்தாள்.. இன்னும் தாள்..தாள்..தாள்! அழகான பெண்களுக்கு அறிவு என்பது ஆட்டுக்கு வால்போல என்ற தொன்மொழிகளெல்லாம் ஸ்வர்ணாவுக்கு செல்லுபடியாகாது. ஹெட்மாஸ்டர் பஞ்சாபகேச அய்யருக்கு ஸ்வர்ணா என்றாலே ஒரே பூரிப்புதான். ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்த்து வயிறெரிந்தவர்கள் சுதந்திரதினக் கலை நிகழ்ச்சிகளில் பாரதமாதா வேஷம் கட்டியபோது குளிர்ந்துபோனார்கள். "பாரதி கனவில் வந்த" கவிதையைப் படித்தபோது தமிழ்வாத்தியார் வாயில் எத்தனை பல் சொத்தைப்பல்லென்ற நெடுநாள் சந்தேகம் தீர்ந்துபோனது.

இப்படியான பிரக்யாதிகள் கொண்ட ஸ்வர்ணா ரகுநாதனையும் நண்பனாக ஏற்றுக்கொண்டதற்கு பாட்டன் முப்பாட்டன் உள்ளிட்ட பரம்பரையே பூர்வஜென்ம புண்ணியங்கள் செய்திருப்பதாகக் கருதிக் கொண்டான் ரகுநாதன். ஒருவழியாகப் ப்ளஸ்டூ பரிட்சை முடிவுகளும் வெளிவந்து மார்க் ஷீட்டும், கையுமாக "போயிட்டு வரேண்டா" என்று சொல்லி ஸ்வர்ணா விடைபெற்றபோது "ராசாத்தீ... ஏம் உசிரு என்னதில்ல..." என்று பக்கத்து ஆடியோகேசட் கடையிலிருந்து ஷாகுல் ஹமீது உருகிக் கொண்டிருந்தார்.

"வெளங்காமுட்டி பய.. ஒழுங்கா படிடான்னு கழுதமாரி கத்தியும்.... பாருடி ஒம்புள்ளையை! தொள்ளாயிரத்தி அம்பது மார்க்கோட பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருக்கு. எம்மவன் டாக்டருக்கு படிக்கப்போறான்னு நானும் ஊரெல்லாம் பீத்திக்கிட்டு வந்ததுக்கு இதான் லட்சணம்..."
கத்திக் கொண்டிருந்த அப்பாவுக்குத் தெரியுமா ஸ்வர்ணா சிரிப்பால் களவாண்டு போன மார்க்குகள் ஒரு நூத்தம்பது இருக்குமென்று? அவரவர் பாடு அவரவர்க்கு... அவரவர் கவலை அவரவர்க்கு.

காலம் ரகுநாதன் கையில் ஒரு எஞ்சினியரிங் பட்டத்தையும், அவன் தகப்பனாருக்கு நான்குலட்சம் கடனையும் பரிசாகத் தந்ததும், இடையில் அவனது வாழ்க்கையில் சுமார் மூன்று ஒருதலைக் காதல்களும் இரண்டு இருதலைக் காதல்களும் கடந்துபோனதும், ஒவ்வொரு காதல் கடந்து போகும்போதும் ஸ்வர்ணாவின் முகம் மின்னிப் போனதும், முப்பதாயிரம் மாதவருமானமும் முன்னந்தலை வழுக்கையுமாக முதிர்கண்ணனாகி நின்ற ரகுநாதனுக்கு கல்யாண மார்க்கெட்டில் நல்ல விலைபடிய பேரம் பேசப் பட்டுக் கொண்டிருப்பதுமாக சுமார் ஒரு மாமாங்கம் ஃப்ளாஷ்பேக்கை விரித்துச் சொன்னால் கோடிபெறும்.

என்றாவது ஒருநாள் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்கும், பழங்கதைகளும், கொசுவர்த்திக் கொளுத்தல்களுமாகக் கூடிக்கலையும் நண்பர்குழாத்தின் பேச்சுக்களின் இறுதிப்புள்ளி சுற்றிச்சுற்றி ஸ்வர்ணாவில் வந்துநின்று சின்ன மௌனத்துடனும் பெருமூச்சுடனும் முடிவுபெறுவதும் வாடிக்கை. அப்படித்தான் ஒருநாள் அந்த அரிய பெரிய தகவலைக் கண்டுபிடித்து வந்து சொன்னான் ஆரம்பப்பள்ளி ஆசிரியனாகக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் தங்கபாண்டியன்... "டேய் ஸ்வர்ணா ஊருக்குப் போயிருந்தேன். அவ தஞ்சாவூர்ல பிஎஸ்ஸி படிச்சிட்டு இருந்தப்பவே ஒரு பையனோட லவ்வாம்... ஃபைனல் இயர்ல பிரச்சினையாகி அந்தப் பையனோட ஓடிப்போயிட்டா. இப்போ அவ கோயம்புத்தூர்லதான் இருக்காளாம். புருஷன் ஆடிட்டரா இருக்கார்போல. நல்லா செட்டிலாயிட்டா. ரெண்டு குழந்தைங்க பொறந்தப்புறம் வீட்டுலயும் ராசியாயிட்டாங்களாம். அவளும் எம்பிஏ முடிச்சிருக்காளாம்" என்றபோது அரிஸ்டாட்டில் 'யுரேகா' சொல்லி ஓடிக் கொண்டிருந்தபோது அடைந்திருந்த உணர்ச்சிகளை அவன் முகத்தில் காண முடிந்தது. அப்போது முடிவு செய்தான் ரகுநாதன் எப்படியாவது ஒருதடவை ஸ்வர்ணாவைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதென்று.

ஒருவழியாக ஸ்வர்ணாவின் கோயம்புத்தூர் முகவரியைக் கண்டுபிடித்து ஒரு சுபமுகூர்த்த சுபநாளில் கோயமுத்தூருக்கு ஆம்னி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்ததுதான் ஆரம்ப பாராக்களுக்கு அடிப்படை. ஒருவழியாக சிங்காநல்லூரில் இறங்கி அட்ரஸ் விசாரித்துக்கொண்டு காலிங்பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது பத்து விநாடிகளுக்குள் பதினைந்துமுறை வியர்த்திருத்தான்.

"யாரு" என்றபடியே கதவைத் திறந்த ஸ்வர்ணா லேசாகப் பூசினாற்போல இருந்தாள். ஆடிமாசக்காவேரிபோல் அலைபாய்ந்திருந்த கண்களில் மார்கழிமாச அகண்டகாவேரிபோல அமைதியும் ஆழமும் நிறந்திருந்தன. அதே ஸ்வர்ணா! இன்னும் ஸௌந்தர்யமாக...

"நீங்க...நீ... ஹேய் ரகுதான! என்னடாது? வானத்துலருந்து குதிச்சமாதிரி திடீர்னு வந்து நிக்கிறே?" ஆச்சர்யமாக வரவேற்றாள்.

"சும்மாதான்பா. கோயமுத்தூருக்கு வேலையா வந்தேன். பசங்ககிட்ட பேசிட்டு இருந்தப்போ நீ இங்கதான் இருக்கிறதா சொன்னாங்க. அதான் அப்பிடியே உன்னைப் பாத்திட்டு போகலாம்னு.."

அதே சிரிப்பு! "தாங்க்ஸ்டா! ஸ்கூலுக்கு அப்புறம் நம்ம க்ளாஸ்மேட் யாரையுமே பாக்கலை. மொதமொதல்ல உன்னைத்தான் பாக்குறேன்"

பேசினாள்..சிரித்தாள்..பேசினாள்..சிரித்தாள்...புருஷன் பற்றி... குட்டி ஸ்வர்ணா பற்றி... சாகசங்கள் நிறைந்த அவளது காதல்கதை பற்றி... எப்போது பார்த்தாலும் இங்கிலீஷில் பீட்டர் விடும் ஃபிஸிக்ஸ் வாத்தியார் பற்றி... காதலித்தே ஆகவேண்டும் என்று கெஞ்சி காலில் விழுந்த பனிரெண்டாம் வகுப்பு குமாரசாமி பற்றி.. இன்னும் ஏதேதோ.

புருஷனுக்கு ஃபோன் பண்ணி அவனிடம் கொடுத்தாள். ஸ்வர்ணாவிடம் இருந்து சிரிப்பையும், வழியும் அன்பையும் கடன்வாங்கியனைப்போலவே அவரும் பேசினார். ஹ்ம்ம்.. கொடுத்து வைத்த மனிதன்! மதியம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அவள் புருஷன் சொல்ல, அவனும் தலையாட்டினான். சாப்பாடு முடிந்து "நான் கெளம்பறேன் ஸ்வர்ணா! நேரமாச்சு" என்று எழுந்தவனிடம் "இருடா! கொஞ்சநேரம் பேசிட்டுப் போ! அவருக்கு ஆஸ்திரேலியா விசா அப்ரூவ் ஆயிடிச்சு. அடுத்தமாசம் ஃபேமிலியோட கெளம்பிடுவோம். ஆமா உனக்கு எப்படா கல்யாணம்?" என்றாள்.

"பார்த்துகிட்டு இருக்காங்க ஸ்வர்ணா. கூடிய சீக்கிரம் ஆயிடும்னு நினைக்கிறேன்" என்றபடி இன்னும் அரைமணிநேரம் ஓடிப்போனது. ரகுநாதன் ஸ்வர்ணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

கதவைத் திறக்குமுன் "ரகு... ஒரு நிமிஷம்" என்ற ஸ்வர்ணா லேசாக அவன் முன்னுச்சி மயிரைக் கலைந்திட்டு அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுச் சொன்னாள்.

"நீ என்னை லவ் பண்ணேனு எனக்கு தெரியும்டா. உன்னோட காதலுக்கு இதான் என்னோட கிஃப்ட். சரி போயிட்டு வாடா. ஆஸ்திரேலியா போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்றேன். மறக்காம ஏர்போர்ட் வந்திடு" என்று கதவைத் திறந்தாள்.

வெளியேவந்து ஆட்டோ பிடித்து ரயில்நிலையம் வந்து சீட் சரிபார்த்து அமர்ந்த ரகுநாதனுக்கு ஏனோ கொஞ்சம் அழவேண்டும் போலத் தோன்றியது... கவிதை எழுத வேண்டும் போலவும்...

செவ்வாய், 31 ஜனவரி, 2012

லவ்வு கவுஜ..


விமலா கமலா
அமலா சுமலா
எல்லோருமே அழகிகள்தான்
எவளைக் காதலிக்கலாமென்று
யோசித்துக் கொண்டிருந்தவேளை
விமலா கெமிஸ்ட்ரி வாத்தியாரோடும்
கமலா கண்கள் கருவாயன் மேலும்
அமலா மட்டும் அப்பாசொல்படி
அம்மி மிதிக்க
சுமலாவிடம் கேட்டேன்
"சும்மா லவ் பண்ணலாமா?"
சுமலா சொன்னாள்
"டூ லேட். டு லெட் போர்டு கழற்றி
நாலு நாளாச்சு"

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் 4


ரொம்ப காலமாச்சுது என் ப்ளாக்கைத் தொறந்து. கூகிள் பஸ்ல டெண்டடிச்ச பொறவு ப்ளாக் பக்கம் வரவே மனசு தோணலை. கூகிள் பஸ் ஒரு குறும்புக் குழந்தை. சிலீர்னு சிரிக்கும்.. அப்பிடியே அசந்த நேரம் பாத்து வெரலைக் கடிச்சி வைக்கும்.. தோணிச்சின்னா நம்ம மேல ஒண்ணுக்கடிக்கவும் செய்யும். துறுதுறுன்னு ஓடியாடி எல்லாத்தையும் கலைச்சிப் போட்டுக் கெறங்கடிக்கும். அது ஒரு அனுபவம்டா சாமீ! திடீர்னு ஒரு நாளு குழந்தை திடீர்னு காணாமப் போயிடிச்சி. அழுவுற புள்ள வாயில குச்சிமுட்டாய சொருவுற மாதிரி கூகிள் ப்ளஸ்னு ஒன்னைச் சொருவிட்டானுங்க கூகிள் காரனுங்க. அப்டியே ஒரு மாதிரி சமாளிச்சி அட்ஜஸ்ட் பண்ணி ப்ளஸ்லயும் ஓட ஆரமிச்சாச்சின்னு வைங்களேன். நேத்திக்கு ஏதோ தேடப்போயி நம்ம பபாஷா ப்ளாக் பக்கம் மேய்ஞ்சிட்டு இருந்தப்ப "மூன்றாவது பெர்த்- உமா சீரிஸ் 3" ரிலே ரேஸ் கதை கண்ணுக்குப் பட்டிச்சி. ரெண்டு மூணு மாசம் முன்னாடி இருக்கும்னு நினைக்கிறேன். மணிஜியோட ஃபேவரைட் உமாவை வெச்சி ஒரு ரிலே ரேஸ் தொடர்கதை எழுதலாமேன்னு மணிஜி ஒரு ஸ்பார்க்கைக் கெளப்ப விதூஷ் தூபம் போட, விதூஷ், மணிஜி, பபாஷா, நேசமித்திரன், நம்ம பாரா சித்தப்பூ, மனசை அள்ளுறா மாதிரி கவிமழை பொழியிற லதாமகன், அப்புறம் நானு எல்லாருமா இந்த ரிலே ரேஸ் தொடரை எழுதலாம்னு ஒரு பேச்சி. நான் அப்டியே மறந்து தொலைச்சிட்டேன். மப்புல பேசுறது எது நம்மளுக்கு ஞாவகம் இருக்கு. இப்பப் பாத்தா அப்டியே ஆடி மாசக்காவேரி மாதிரி அலை அலையா பொரளுற கூந்தலை அசால்ட்டா ஒத்தக்கையால ஒதுக்கிக்கிட்டு அச்சு அசலா முன்னாடி வந்து நிக்கிறா உமா. "சம்முவம்..எட்றா வண்டிய"ன்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். இதோ "மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் 4".

மொதோ மூணு பார்ட்டும் படிக்க அப்டியே இங்கிட்டு போங்க..

விதூஷ் : மூன்றாவது பர்த் (உமா சீரிஸ் - ரிலே ரேஸ் கதை) 

மணிஜி: மூன்றாவது பர்த் ...உமா சீரிஸ் -2 

பலாபட்டறை ஷங்கர்: மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3. 

***********************************************************************************



..."ரகுநாதன்" என்றான் ஸ்வீட்டாக!

பெண்களிடம், அதுவும் என்னை மாதிரி அழகான பெண்களிடம் பேசும்போது மட்டும் ஆணின் குரல் அபாரக் குழைவைப் பெற்றுவிடுவது எனக்கு எப்போதும் ஆச்சர்யம்தான். அபூர்வமாக, குரலில் வேண்டுமென்றே கொஞ்சம் கடுமையை ஏற்றிக்கொண்டு பேசும் ஆண்கள்கூட 'தப்பித்துக் கொள்ளும்' மனோபாவத்தில் பேசுவதாக எனக்குத் தோன்றுவது அங்குமிங்கும் நான் அரைகுறையாகப் படித்த ஃப்ராய்டின் பாதிப்பால்கூட இருக்கலாம். எனக்கு மீண்டும் இந்த ரிலே ரேஸ் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் மணிஜி குறிப்பிட்ட "கன்னியர் தம் கடைக்கண்ணை காட்டி விட்டால் காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம் “ வரி ஓடத் துவங்கியது. முதல் அத்தியாயத்தைத் தொடங்கி என்னை மீண்டும் 'லைம்லைட்'டுக்குக் கொண்டுவந்த விதூஷுக்கு வேறு உடம்பு சரியில்லையாம். சென்னை போய் இறங்கிய பின் ஒரு தடவை நேரில் சென்று நலம் விசாரித்துவர வேண்டும்.

இப்போது முழுசாக அவனை நோட்டம் விட்டேன். ஆள் ஜம்மென்றுதான் இருக்கிறான். முகத்தில் ஒரு 'ஃப்ரீக் அவுட் பாய்'க்கான குறும்பும், தன்னம்பிக்கையானவன் என்பதற்கான வெளிச்சமும் சரிசமமாகப் பரவி இருந்தது. பெரும்பாலான பெண்களுக்கு இந்த மாதிரி மிக்ஸிங்கில் இருக்கும் ஆண்களை மிகவும் பிடித்துவிடும் இல்லையா? எனக்கும்தான்! அச்சச்சோ.. நீங்கள் விபரீதமாக எதையும் கற்பனை செய்து தொலைத்து விடாதீர்கள்.. நீங்கள் நினைப்பதுபோல இல்லை. அவ்வப்போது என்னைப் பார்த்து ஏதோ யோசிக்கிறான் போல!

வழக்கமாக என்ன யோசிப்பார்கள்?

"அழகான பெண்களுக்கு வாய்க்கும் புருஷன்மார்களெல்லாம் முன்வழுக்கையோடும், சரிந்த தொந்தியோடும் இருப்பார்கள்" என்றுதான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன். புருஷன் இடத்தில் தன்னை ரீப்ளேஸ் செய்துகொள்ளும் தற்காலிக சந்தோஷம்! அவ்வளவு ஈஸியா என்ன ஒரு பெண்ணை விழவைப்பது? ச்சை! ரொம்பவும்தான் ஃப்ராய்டுத்தனமாக யோசிக்கிறேன்.

"என்னங்க.. பேரைக் கேட்டீங்க, அப்டியே யோசனையில ஆழ்ந்துட்டீங்க போல! என் பேருல ஏதாச்சும் விசேஷம் இருக்குதா என்ன?"

தூண்டில்!தூண்டில்!!

"இல்லைங்க ரகு! சும்மாதான்!"

ரகு.. ரகு.. பேரைச் சுருக்கிக் கூப்பிட்டாச்சு..செத்தான் இனி!

"தாங்க்ஸ்ங்க" என்றான்.

"எதுக்கு?"

"ரகுன்னு ஷார்ட்டா கூப்டதுக்கு" என்று சிரித்தான். ரோஸ் நிறத்தில்.. பளீரென்று...இன்னும் சிகரெட்டால் கற்பழிக்கப்படாத ஆரோக்கிய ஈறுகள்... கிள்ளலாம் போல!

"யூ ஆர் சச் அன் இண்ட்ரஸ்ட்டிங் கோ பேஸஞ்சர் ரகு"

மீண்டும் சிரித்தான்.

ரமணனின் ட்ரேட் மார்க் சிரிப்பு!

பாவி..ரமணா! இத்தனை வருஷங்கள் ஓடிய பிறகும்.. நொடிக்கு நொடி..  பாரதிக்கு நந்தலாலா.. எனக்கு ரமணன்

     "கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
      கீதம் இசைக்குதடா நந்தலாலா"



 [ காக்கைச் சிறகினிலே - துள்ளாத மனமும் துள்ளும்]

லேசாகப் பொங்கித் தளும்பி சின்னக் கோடாய்க் கன்னம் வழியே கீழிறங்கியது.

"ஹலோ! என்னாச்சுங்க... திடீர்னு?"

ரகுவின் குரல் மீண்டும் ட்ரெய்னுக்குள் இழுத்து வந்தது.

"நத்திங் ரகு. திடீர்னு என்னென்னமோ ஞாபகம். ஸாரி..வெரி ஸாரி"

ஜன்னல் கம்பிகளில் கன்னத்தைச் சாய்த்து ஒரு கையை முட்டுக்கொடுத்தபடி பார்வையை வெளியே மாற்றினேன். அசுரவேகத்தில் ரிவர்ஸில் ஓடிக் கொண்டிருந்த வெளிச்சப்புள்ளிகள்.. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ரமணன். "“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்ற ரமணன்... " தமிழால் மட்டும் இல்லையடி பெண்ணே.. உன்னாலும்தான்" என்று குறும்பாய்ச் சிரித்த ரமணன்... கம்பனையும் ஷெல்லியையும் காதலிக்கக் கற்றுத்தந்த ரமணன்... ஃப்ராய்டு,நீட்ஷே, சார்த்தர், நெரூதா என்று ஜன்னல்களை விரியத் திறந்த ரமணன்...

களிமண்ணாய் இருந்த உமாவைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ரமணன்...

மூளைச் சிதறல்கள் சுற்றிலும் தெறித்துக் கிடக்க வெறித்துப்போன விழிகளுடன் மல்லாந்து கிடந்த என் ரமணன்...

எனக்கு அழவேண்டும் போல இருந்தது.

மெல்ல எழுந்து நடந்து பாத்ரூமை நெருங்கி, உள்நுழைந்து தாழ்ப்பாளிட்டேன்.

ஒரு பாட்டம் அழுதுதீர்த்து, முகம் கழுவித் துடைத்துக்கொண்டு பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.

அங்கே... அங்கே...


டிஸ்கி: இந்த ரிலே ரேஸ் கதையின் அடுத்த பாகத்தைத் தொடர கூகிள் பஸ், ப்ளஸின் டான் அண்ணன் ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி முன் வந்திருக்கிறார். மேலும் பாரா சித்தப்பூ, நேசன், லதாமகன் ஆகியோரையும் அழைக்கிறேன்

சனி, 23 ஜூலை, 2011

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-2




எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோதுஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.அந்த கொடூரமான குற்றச்சாட்டு அடங்கிய 'இந்தியா டுடே' தமிழ்வார இதழை இணைத்துள்ளேன். தயைகூர்ந்து முழுமையாக வாசித்துப் பாருங்கள்.

என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல்நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த டி.ஐ.ஜி (DIG) இராஜூ அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப் படிப்பு (DECE) படித்தவன் என்றபோது அவர் கேட்டார் "நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா?" - இதை முன்பே எனது முறையீட்டுமடலில் குறிப்பிட்டிருக்கிறேன். இதையே அன்று ஏடுகள் மூலம் பிரச்சாரம் செய்தனர். அதன் ஒரு உதாரணமே மேற்சொன்ன 'இந்தியா டிடே'.

எனது பெற்றோர் கல்வி ஒன்றே பெரும் சொத்தெனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்கவே உண்மையான ஈடுபாட்டுடன் படித்தேன். அதன் காரணமாகவே நல்ல மாணவன் என்ற பெயருடன் எனது 10ஆம் வகுப்பையும் மின்னணுவியல் (DECE) படிப்பையும் நிறைவு செய்தேன்.

எனது ஆசிரியர்கள் எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்தனரே தவிர குண்டு செய்வதற்குச் சொல்லித்தரவில்லை. எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தார்க்கும் பயன்பட்டதோ இல்லையோ புலனாய்வுத்துறையினருக்கு இவ்வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்து தூக்குமேடையில் நிறுத்தப் பயன்பட்டது என்றுதான் சொல்வேன்.

எந்த 'இந்தியா டுடே' மூலம் என்னை வெடிகுண்டு நிபுணர் என1991ல் பொய்ப்பிரச்சாரம் செய்தனரோ, அதே ஏடு, 1996ஆம் ஆண்டு 'துப்பில் துவாரங்கள்' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை தீட்டியது. அக்கட்டுரை புலனாய்வுத்துறையினர் (CBI, SIT) செய்துள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, 'வெடிகுண்டு குறித்தும் எந்தப் புலனாய்வும் செய்யப்படவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளது.

புலனாய்வுத்துறையினரின் விசாரணையை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக 'இந்தியா டுடே' இதழ்மீது அன்று சிறப்பு நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர் என்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

அவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்ட எனது கல்வி, இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நான் எத்தனை தூரம் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை இது தொடர்பான ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எனது வழக்கு முழுக்க முழுக்க தடா ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புக் கூறப்பட்டது. இது குறித்துத் தீர்ப்புரை பக்கம் - 2660 பத்தி (Para) 80இல், கீழ்க்கண்டவாறு உள்ளது.

80.மேற்கூறிய முக்கிய சர்ச்சையில் முடிவு காண்பதற்கு, ரசு தரப்பானது மேல்முறையீட்டாளர்கள் பலரும் அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்களையே நம்பியுள்ளது.இந்த வாக்குமூலங்கள் தடாச்சட்டத்தின் பிரிவு 15-ன் படி பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

என்றும், பக்கம்: 2843 பத்தி 658 இல் கீழ்க்கண்டவாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

658. திரு.ராஜீவ்காந்தியைக் கொலை செய்யச் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையே முக்கியமாக நம்பியுள்ளனர்; இந்த வாக்குமூலங்கள் தடாச் சட்டத்தின் 15(1) பிரிவின்படி பதிவு செய்யப்பட்டவையாகும்.

ஆகையால் தடா ஒப்புதல் வாக்குமூலமே முதன்மை ஆதாரமாக(Substantive Evidence)க் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்'தடா' வாக்குமூலங்களை நிரூபிக்கத் துணை ஆதாரங்களாகவே (Corroborative Evidence) மற்றவை பயன்படுத்தப்பட்டன. நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்சொன்ன கருத்தின் அடிப்படையிலேயே என் வாதத்தை முன்வைக்கிறேன்.

1.9 வோல்ட் மின்கலம் குறித்து எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுவதில் உள்ள வாசகங்களை அப்படியே தர விரும்புகின்றேன்.

"மேலும் நான் 9 வோல்ட் மின்கலம் இரண்டு (Golden Power) வாங்கி சிவராசனிடம் கொடுத்தேன். இவைகளைத்தான் அவர் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தினர்.

இவ்வழக்கில் 9 வோல்ட் மின்கலம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் .அ.சா 91 மொய்தீன், அ.சா 252 சீனிவாசன், அ.சா. 257 மேஜர் சபர்வாள், அ.சா 280 சந்திரசேகரன் ஆகியோர் ஆகும். இவர்களில் அ.சா252, அ.சா 257, அ.சா 280 ஆகியோர் தடயவியல் நிபுணர்கள். அவர்கள் சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 வோல்ட் மின்கலம் பற்றி நிபுணத்துவக் கருத்து (Expert Opinion) மட்டுமே அளித்துள்ளனர். எனவே அவர்களுடைய சாட்சியம் எனது வழக்கை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.

அ.சா 91 மொய்தீன் என்ற கடை ஊழியரின் சாட்சியம்மட்டுமே என் வழக்கோடு தொடர்புபடுத்தி வருகிறது. அவரது சாட்சியத்தையும், அவரை விசாரித்து வாக்குமூலம் பதிசு செய்ததாகக்கூறும் ஆய்வாளர் அ.சா 266 வெங்கடேசன் சாட்சியத்தின் தொடர்புடைய பகுதியையும் உங்களது பரிசீலனைக்குத் தருகிறேன்.

இவ்வழக்கில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட 288 அரசு சாட்சியங்களில், மேற்சொன்ன ஒரே சாட்சியான அ.சா 91 மொய்தீன் நம்பகத்தன்மை குறித்து மட்டுமே உச்சநீதிமன்றத்தில் 25 மனுதாரர்களின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் தனது வாதுரையை எடுத்துரைத்தார் என்பதைத் தங்களது பார்வைக்குத் தருகிறேன்.

மேற்சொன்ன இரண்டு சாட்சிகளான அ.சா 91, அ.சா 266 ஆகியோரின் சாட்சியத்தைப் படிக்கும்போது தாங்களே உணர்வீர்கள் அ.சா 91 எத்தனை பொய்யான சாட்சியம் என்பதை. முறிப்பாக அ.சா266 கூறுவதுபோல் அ.சா 91 இன் கடையில் மின்கலம் வாங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் எதையும் நான் கொடுக்கவில்லை என்பதால்தான் அவ்வாறான எந்த வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினரால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால்தான் அ.சா 266 தனது முதல்விசாரணை பக்கம் 6இல் 16-08-1991 அன்று நான் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அவரே மீண்டும் முரண்பாடாக பக்கம் 15இல் 15-08-1991 என்றும் மாற்றி மாற்றிக் கூறுகிறார்.

2. வழக்கின் மிக முக்கியமான ஆவணமாக, ஆதாரமாக அரசு தரப்பால் காட்டப்படுவதும், உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுவதுமான 7-5-1991 தேதியிட்ட ஒயர்லெஸ் செய்தி (Exh. P-392) குறித்த தீர்ப்புரைகளில் வரும் பகுதிகளைக் கீழே தருகிறேன்.

முதல் எதிரி நளினி குறித்த வழக்கைப் பற்றி விவாதிக்கும்போது நீதியரசர் வாத்வா, பத்தி. 429, 430 இல் (State of Tamilnadu Vs Nalini and Ors AIR 1999 SC 2640)-

429. 7-5-1991இல் சிவராசன், சென்னையிலிருந்து இலங்கையில் இருக்கும் பொட்டு அம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பிய ஒரு சங்கேதச்செய்தியை விண்டு பார்த்தபோது பின்வருமாறு உள்ளது: 'அந்தப்பெண் இந்து மாஸ்டர் இல்லத்தில் மூத்த மகள் ஆவாள். நமது நோக்கம் எங்கள் மூவரைத் தவிர யாருக்கும் தெரியாது. அதிகாரத்துக்கு வரப்போகும் கட்சியின் ஆதரவைப் பெறுவதுதான் நோக்கம் என நான் அந்தப் பெண்ணுக்கும் சொல்லி இருக்கிறேன். இங்கு வி.பி.சிங் வருகிறார். நாங்கள் வரவேற்போம். இதேபோல் எல்லாத் தலைவர்களையும் வரவேற்போம்.

நான் பையப்பைய நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நமது நோக்கத்தை நான் சொலிவிட்டால், அந்தப்பெண் உறுதியாக நம் பக்கம் நிற்பார் என்பதில் ஐயமில்லை.

நாங்கள் அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகி வருகிறோம். எங்களுக்கு முழு மனநிறைவு உள்ளது. நோக்கத்தை அவரிடம் வெளிப்படுத்தலாம். அவரை நம்பலாம் என்று பெண்கள் சொல்கிறார்கள்.

நான் திரும்பி வந்தால் உங்கள் ஆளாகத் திரும்பி வருவேன். நாம் தூள் வணிகத்தில் வலுவாக இருக்கிறோம்.'

430. இந்த மூத்த மகள் என்பது நளினி(ஏ1)யைக் குறிக்கும். இந்து மாஸ்டர் முருகனை(ஏ3)க் குறிக்கும்

...தொடரும்.
Related Posts with Thumbnails