சனி, 23 ஜூலை, 2011

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-2




எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோதுஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.அந்த கொடூரமான குற்றச்சாட்டு அடங்கிய 'இந்தியா டுடே' தமிழ்வார இதழை இணைத்துள்ளேன். தயைகூர்ந்து முழுமையாக வாசித்துப் பாருங்கள்.

என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல்நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த டி.ஐ.ஜி (DIG) இராஜூ அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப் படிப்பு (DECE) படித்தவன் என்றபோது அவர் கேட்டார் "நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா?" - இதை முன்பே எனது முறையீட்டுமடலில் குறிப்பிட்டிருக்கிறேன். இதையே அன்று ஏடுகள் மூலம் பிரச்சாரம் செய்தனர். அதன் ஒரு உதாரணமே மேற்சொன்ன 'இந்தியா டிடே'.

எனது பெற்றோர் கல்வி ஒன்றே பெரும் சொத்தெனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்கவே உண்மையான ஈடுபாட்டுடன் படித்தேன். அதன் காரணமாகவே நல்ல மாணவன் என்ற பெயருடன் எனது 10ஆம் வகுப்பையும் மின்னணுவியல் (DECE) படிப்பையும் நிறைவு செய்தேன்.

எனது ஆசிரியர்கள் எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்தனரே தவிர குண்டு செய்வதற்குச் சொல்லித்தரவில்லை. எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தார்க்கும் பயன்பட்டதோ இல்லையோ புலனாய்வுத்துறையினருக்கு இவ்வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்து தூக்குமேடையில் நிறுத்தப் பயன்பட்டது என்றுதான் சொல்வேன்.

எந்த 'இந்தியா டுடே' மூலம் என்னை வெடிகுண்டு நிபுணர் என1991ல் பொய்ப்பிரச்சாரம் செய்தனரோ, அதே ஏடு, 1996ஆம் ஆண்டு 'துப்பில் துவாரங்கள்' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை தீட்டியது. அக்கட்டுரை புலனாய்வுத்துறையினர் (CBI, SIT) செய்துள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, 'வெடிகுண்டு குறித்தும் எந்தப் புலனாய்வும் செய்யப்படவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளது.

புலனாய்வுத்துறையினரின் விசாரணையை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக 'இந்தியா டுடே' இதழ்மீது அன்று சிறப்பு நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர் என்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

அவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்ட எனது கல்வி, இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நான் எத்தனை தூரம் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை இது தொடர்பான ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எனது வழக்கு முழுக்க முழுக்க தடா ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புக் கூறப்பட்டது. இது குறித்துத் தீர்ப்புரை பக்கம் - 2660 பத்தி (Para) 80இல், கீழ்க்கண்டவாறு உள்ளது.

80.மேற்கூறிய முக்கிய சர்ச்சையில் முடிவு காண்பதற்கு, ரசு தரப்பானது மேல்முறையீட்டாளர்கள் பலரும் அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்களையே நம்பியுள்ளது.இந்த வாக்குமூலங்கள் தடாச்சட்டத்தின் பிரிவு 15-ன் படி பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

என்றும், பக்கம்: 2843 பத்தி 658 இல் கீழ்க்கண்டவாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

658. திரு.ராஜீவ்காந்தியைக் கொலை செய்யச் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையே முக்கியமாக நம்பியுள்ளனர்; இந்த வாக்குமூலங்கள் தடாச் சட்டத்தின் 15(1) பிரிவின்படி பதிவு செய்யப்பட்டவையாகும்.

ஆகையால் தடா ஒப்புதல் வாக்குமூலமே முதன்மை ஆதாரமாக(Substantive Evidence)க் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்'தடா' வாக்குமூலங்களை நிரூபிக்கத் துணை ஆதாரங்களாகவே (Corroborative Evidence) மற்றவை பயன்படுத்தப்பட்டன. நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்சொன்ன கருத்தின் அடிப்படையிலேயே என் வாதத்தை முன்வைக்கிறேன்.

1.9 வோல்ட் மின்கலம் குறித்து எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுவதில் உள்ள வாசகங்களை அப்படியே தர விரும்புகின்றேன்.

"மேலும் நான் 9 வோல்ட் மின்கலம் இரண்டு (Golden Power) வாங்கி சிவராசனிடம் கொடுத்தேன். இவைகளைத்தான் அவர் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தினர்.

இவ்வழக்கில் 9 வோல்ட் மின்கலம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் .அ.சா 91 மொய்தீன், அ.சா 252 சீனிவாசன், அ.சா. 257 மேஜர் சபர்வாள், அ.சா 280 சந்திரசேகரன் ஆகியோர் ஆகும். இவர்களில் அ.சா252, அ.சா 257, அ.சா 280 ஆகியோர் தடயவியல் நிபுணர்கள். அவர்கள் சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 வோல்ட் மின்கலம் பற்றி நிபுணத்துவக் கருத்து (Expert Opinion) மட்டுமே அளித்துள்ளனர். எனவே அவர்களுடைய சாட்சியம் எனது வழக்கை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.

அ.சா 91 மொய்தீன் என்ற கடை ஊழியரின் சாட்சியம்மட்டுமே என் வழக்கோடு தொடர்புபடுத்தி வருகிறது. அவரது சாட்சியத்தையும், அவரை விசாரித்து வாக்குமூலம் பதிசு செய்ததாகக்கூறும் ஆய்வாளர் அ.சா 266 வெங்கடேசன் சாட்சியத்தின் தொடர்புடைய பகுதியையும் உங்களது பரிசீலனைக்குத் தருகிறேன்.

இவ்வழக்கில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட 288 அரசு சாட்சியங்களில், மேற்சொன்ன ஒரே சாட்சியான அ.சா 91 மொய்தீன் நம்பகத்தன்மை குறித்து மட்டுமே உச்சநீதிமன்றத்தில் 25 மனுதாரர்களின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் தனது வாதுரையை எடுத்துரைத்தார் என்பதைத் தங்களது பார்வைக்குத் தருகிறேன்.

மேற்சொன்ன இரண்டு சாட்சிகளான அ.சா 91, அ.சா 266 ஆகியோரின் சாட்சியத்தைப் படிக்கும்போது தாங்களே உணர்வீர்கள் அ.சா 91 எத்தனை பொய்யான சாட்சியம் என்பதை. முறிப்பாக அ.சா266 கூறுவதுபோல் அ.சா 91 இன் கடையில் மின்கலம் வாங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் எதையும் நான் கொடுக்கவில்லை என்பதால்தான் அவ்வாறான எந்த வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினரால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால்தான் அ.சா 266 தனது முதல்விசாரணை பக்கம் 6இல் 16-08-1991 அன்று நான் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அவரே மீண்டும் முரண்பாடாக பக்கம் 15இல் 15-08-1991 என்றும் மாற்றி மாற்றிக் கூறுகிறார்.

2. வழக்கின் மிக முக்கியமான ஆவணமாக, ஆதாரமாக அரசு தரப்பால் காட்டப்படுவதும், உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுவதுமான 7-5-1991 தேதியிட்ட ஒயர்லெஸ் செய்தி (Exh. P-392) குறித்த தீர்ப்புரைகளில் வரும் பகுதிகளைக் கீழே தருகிறேன்.

முதல் எதிரி நளினி குறித்த வழக்கைப் பற்றி விவாதிக்கும்போது நீதியரசர் வாத்வா, பத்தி. 429, 430 இல் (State of Tamilnadu Vs Nalini and Ors AIR 1999 SC 2640)-

429. 7-5-1991இல் சிவராசன், சென்னையிலிருந்து இலங்கையில் இருக்கும் பொட்டு அம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பிய ஒரு சங்கேதச்செய்தியை விண்டு பார்த்தபோது பின்வருமாறு உள்ளது: 'அந்தப்பெண் இந்து மாஸ்டர் இல்லத்தில் மூத்த மகள் ஆவாள். நமது நோக்கம் எங்கள் மூவரைத் தவிர யாருக்கும் தெரியாது. அதிகாரத்துக்கு வரப்போகும் கட்சியின் ஆதரவைப் பெறுவதுதான் நோக்கம் என நான் அந்தப் பெண்ணுக்கும் சொல்லி இருக்கிறேன். இங்கு வி.பி.சிங் வருகிறார். நாங்கள் வரவேற்போம். இதேபோல் எல்லாத் தலைவர்களையும் வரவேற்போம்.

நான் பையப்பைய நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நமது நோக்கத்தை நான் சொலிவிட்டால், அந்தப்பெண் உறுதியாக நம் பக்கம் நிற்பார் என்பதில் ஐயமில்லை.

நாங்கள் அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகி வருகிறோம். எங்களுக்கு முழு மனநிறைவு உள்ளது. நோக்கத்தை அவரிடம் வெளிப்படுத்தலாம். அவரை நம்பலாம் என்று பெண்கள் சொல்கிறார்கள்.

நான் திரும்பி வந்தால் உங்கள் ஆளாகத் திரும்பி வருவேன். நாம் தூள் வணிகத்தில் வலுவாக இருக்கிறோம்.'

430. இந்த மூத்த மகள் என்பது நளினி(ஏ1)யைக் குறிக்கும். இந்து மாஸ்டர் முருகனை(ஏ3)க் குறிக்கும்

...தொடரும்.

வியாழன், 21 ஜூலை, 2011

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-1




பதிவுலகம் பக்கம் வந்து நீண்ட காலமாகிவிட்டது. எதையும் தொடர்ந்தாற்போல் சற்றுநேரம் சிந்திக்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்ததே காரணம். வெறுமனே கூகிள் பஸ்ஸில் கும்மியடித்துக் கொண்டிருந்துவிட்டேன். தொடர்ந்தாற்போல ஒரு நல்ல கட்டுரையையோ, கதையையோகூட வாசிக்கும் அளவு மனதை ஒழுங்கு செய்ய இயலவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் மிகவும் வைராக்கியத்துடன் ஒரு புத்தகத்தை வாசித்திருந்தேன். என் மனதில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்திய புத்தகங்களுள் அது முக்கியமான ஒன்று!

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தனது வாழ்வின் மிகப்பெரும் பகுதியை சிறைப்பறவையாகவே கழித்துக் கொண்டிருக்கும் பேரறிவாளனின் "தூக்குக்கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற நூல்தான் அது. அதனை தமிழ் இணையவாசிகள் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. என்னால் ஒரு பத்துபேர் அந்தப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால், அது என் பாக்கியம் எனக் கருதி அந்த நூலை தட்டச்சு செய்து எனது வலைப்பூவில் ஏற்றுகிறேன். ஒரு சிறு துரும்பாக எனது பணி அமையும் என்று கருதுகிறேன்.

இந்த நூலுக்கு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களும், நீதியரசர் எச்.சுரேஷ் அவர்களும் எழுதிய அணிந்துரைகளை இத்தொடரின் கடைசியில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.

எனது கருத்துக்கள் போதும். இனி, புத்தகத்துக்குள் நுழையலாம்.

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். - அ.ஞா.பேரறிவாளன், மரணதண்டனைச் சிறைவாசி, த.சி.எண். 13906, நடுவண் சிறை, வேலூர்-2.

மதிப்பிற்குரிய அம்மா/அய்யா! வணக்கம்!

நான் அ.ஞா.பேரறிவாளன்.ராஜீவ் கொலைவழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரணதண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன்.எனது கருணைமனு மேதகு குடியரசுத்தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதுச் சிறுவனாக அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 14 1/2 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப்பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்காப்புப்போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.

துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தங்களைப்போன்ற மனிதநேய உள்ளங்களின் துணை இருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உண்டு. ஏற்கனவே நான் கைது செய்யப்பட்டதன் பின்னணி, சட்டப்புறம்பான காவல், துன்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் பெற்ற முறை, வாக்குமூலம் தொடர்பான முரண்பாடுகள், சிறைத்துன்பங்கள் எனப் பல்வேறு செய்திகளை உள்ளடக்கி, முறையீட்டுமடல் ஒன்றை 1999-2009 ஆண்டுக் காலப்பகுதியில் தங்களுக்கு அனுப்பி இருந்தேன். (இணைப்பு-1)

அம்மடலோடு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள முரண்பாடுகள், பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டி ஒரு ஆவணமும் இணைத்திருந்தேன். (இணைப்பு-2) அவற்றில் எனது தரப்பின் நியாயத்தைப் படித்துணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்நிலையில் மீண்டும் ஒரு மடல் எழுதக்காரணம், மரணதண்டனைத் துன்பத்தோடு 14 1/2 ஆண்டுகளின் பின்னும் சிறைவாழ்வு நீடிக்கிறதே என்பதால் மட்டுமல்ல. இருவேறு முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இம்மடல் எழுதுகிறேன்.

முதலாவது காரணம், மேதகு குடியரசுத் தலைவர் எமக்குக் கருணை காட்டும்படி அரசுக்குப் பரிந்துரைத்த செய்தி அறிந்தபின் கொண்ட நம்பிக்கையும், மகிழ்ச்சியும்.

மேதகு குடியரசுத்தலைவர் அவர்களின் பரிந்துரையோடு, 1999 ஆம் ஆண்டில் திருமதி சோனியா அவர்கள் எம் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நான் உள்ளிட்ட நால்வருக்கும் தண்டனையை நிறைவேற்றுவதில், தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ விருப்பம் இல்லை எனச்சொல்லி, மேதகு குடியரசுத்தலைவர் அவர்களுக்கு எழுதிய மடல், எனது தண்டனையை மாற்றியமைத்துவிடும் என்ற நம்பிக்கையை மேலும் வலுவாக்கியுள்ளது.

தற்போதைய அரசு திருமதி சோனியா அவர்களின் தலைமையிலான கூட்டணி அரசு என்பதால் அவரது விருப்பத்தைப் பிரதிபலிப்பதாகவும் மனிதநேயக் கண்ணோட்டத்தோடு மேதகு குடியரசுத் தலைவர் எடுத்துள்ள நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அரசின் பரிந்துரை அமையும் என்ற நம்பிக்கையோடு உள்ளேன்.

இம்முறையீட்டுமடலுக்கான இரண்டாவது மிக முக்கியக் காரணம், எமது வழக்கில் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகவும், பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் (MDMA) அதிகாரியாகவும் அங்கம் வகித்து இவ்வாண்டின் (2005) மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு.இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, 'குறுந்தகடு' (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு வழங்கிய பேட்டியே.

10-08-2005 தேதியிட்ட 'குமுதம்' வார இதழின் பேட்டியின் இறுதியில் திரு.இரகோத்தமன் சொல்கிறார்-

"கொலை நடந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை" என்கிறார் இரகோத்தமன். அவை "ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கொலைக்குப் பிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் தப்புகிறார்கள். அவர்களுடன் மூன்றாவது நபர் ஒருவரும் பயணிக்கிறார். அவர் யார் என்பது இன்றுவரை தெரியவில்லை.

மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய வெடிகுண்டு பெல்ட்டைத் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை."

உங்களில் யாருக்காவது தெரியுமா?

31-07-2005 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழின் பேட்டியில் இறுதிக்கேள்வியும் அவரின் பதிலும்:

"ராஜீவ் கொலைவழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா?"

"ஒரே ஒரு விஷயம் இருக்கிறது... தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு 'பெல்ட்'டைச் செய்து கொடுத்த நபர் யார்... என்கிற விஷயம்தான்!"

ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள, பல்நோக்குக் கண்காணிப்புக்குழு (MDMA) விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தியிருக்கிறது.

...தொடரும்

புதன், 18 மே, 2011

கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட... (வயதுவந்தோர் மட்டும்)




இப்பல்லாம் ப்ளாக் பக்கம் எட்டிப் பாக்குறதே இல்ல. முழுநேர கூகிள் பஸ்ஸராயிட்டேன்.அரட்டைக்கு அரட்டை, விவாதத்துக்கு விவாதம், நட்புக்கு நட்பு, ஜாலிக்கு ஜாலின்னு எல்லாமே தெகட்டத் தெகட்ட கிடைக்குது. அதுவும் கொஞ்சநாளா நைட் சர்வீஸ் பஸ் வுடுறேன் பேர்வழின்னு தமிழிலக்கியப்பாடல்களா எடுத்து செம்ம அரட்டை. இன்னிக்கு நைட் சர்வீஸ் பஸ்சு 18 +னு வெச்சிக்கிட்டு குற்றாலக்குறவஞ்சில இருந்து கொஞ்சம் பாட்டை எடுத்து அரட்டை அடிக்க ஆரமிச்சேன். பஸ் உலக நண்பர்களின் ஆலோசனைப்படி அதை எடுத்து இங்க பதிவா போடுறேன்.

சிற்றிலக்கியங்கள்ல குற்றாலக்குறவஞ்சியும் ஒண்ணு. ரொம்ப இண்ட்ரஸ்டிங். அதுல இருந்து சில பகுதிகள்:

குறிசொல்லும் குறவனும், குறத்தியும் ஊடல்கொண்டாடும் பாட்டுக்கள். குறவன் காதல் பித்தேறித் தவிக்கிறான். குறத்தி அவனை எள்ளிச் சிரிக்கிறாள்.


குன்றத்தைப் பார்த்தால் கொடியிடை தாங்குமோ சிங்கி! தன்
கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா!

குன்றுமாதிரி நிமிர்ந்து நிக்கிற உன் கொங்கைகளைப் பாத்தாலே மலைப்பாய் இருக்கிறதடி சிங்கி!. சின்னக்கொடி போன்ற இடை எப்டியடி இவ்ளோ கனத்தைத் தாங்கும்?!

சிங்கி சொல்றா:

யோவ்! அதப்பத்தி நீ என்னாத்துக்கு கவலைப்படுற. சுரைக்காய் காய்ச்சிருக்குற செடிக்கு சுரைக்காய் பாரமா என்ன? போவியா வேலைய பாத்துக்கிட்டு!

இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்நீ சிங்கி! நாட்டில்
நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா!

முன்னாடியெல்லாம் இப்டி நெளிவு சுளிவா ஒனக்கு பேச வராதேடி சிங்கி! எப்டிடி இப்போ மட்டும் என்னாமா தளுக்கி குலுக்கி பேசுற! எங்க போய்டி கத்துகிட்ட இதெல்லாம்?!

உன்னைமாரி ஊட்ல குழிபறிச்சிட்டு இருந்தா ஆவுமாய்யா! நாடு,நகரம்னு நாலு எடம் சுத்தி நாலு நல்ல மனுசன், பெரிய மனுசனைப் பாத்து குறி சொல்லிட்டு வாரப்ப, அவங்ககிட்ட இருந்து நல்ல விஷயமா நாலு கத்துக்கிட்டு வரலாம்யா!

பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி! நடுப்
பட்டப் பகலில்நான் எட்டிக் கொடுப்பேனா சிங்கா!

பொட்டில கெடக்குற பாம்புமேரி என்னா அழகா வளைஞ்சு சுருண்டு இருக்குற உன்னோட பெண்மைய மோகத்துல ஆடவைக்க வேண்டாமாடி என் செல்லச் சிங்கி?!

யோவ்! என்னய்யா மனுசன் நீ! எந்த மறைப்பும் இல்லாத வெட்டவெளியில நல்ல சாதிப் பாம்பா இருந்தா ஆடுமாய்யா? ஒனக்குத்தான் புத்திகெட்டு அலையிதுனா நானுமா அலையணும்! மருவாதியா அப்பால போயிடு!

கட்டிக்கொண் டேசற்றே முத்தம் கொடுக்கவா சிங்கி! நடுப்
பட்டப் பகலில்நான் எட்டிக் கொடுப்பேனா சிங்கா!

சரி அத வுடு! கொஞ்சநேரம் உன்னைக் கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒரு முத்தமாவது கொடுத்துக்கிறேனேடி சிங்கி!

என்னாது! முத்தமா? யோவ்! பட்டப்பகல்ல வேலவெட்டிய பாக்காம பேசுற பேச்சாய்யா இது? வெக்கங்கெட்ட மனுசா! மொதல்ல நீ எடத்த காலி பண்ணு. போ போ

முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி! காம
மட்டுப் படாவிடில் மண்ணோட முட்டடா சிங்கா

ஏண்டி சிங்கி! ஆனைக்குட்டிங்க மேரி இருக்குதுங்களே ஒன்னோட மாருங்க! என்னோட தலையால முட்டிப் பாக்கணும்னு தோணுதுடி! முட்டிப்பாக்கவா?

இந்தாய்யா! இந்த இழுவயெல்லாம் எங்கிட்ட ஆவாது. ஒனக்கு அரிப்பெடுத்தா தோ இருக்கு பாரு மண்ணுமுட்டு! அதுல போயி முட்டிக்க போ!

சேலை உடைதனைச் சற்றே நெகிழ்க்கவோ சிங்கி! சும்மா
நாலுபேர் முன்எனை நாணம் குலையாதே சிங்கா

ஏண்டி சிங்கி! சீலைத்துணிய இம்புட்டு இறுக்கமாவா கட்டுவ? இந்தா பாரு, தோலு எப்பிடி செவந்திருக்கு! நான் வேணா கொஞ்சம் லேச தளத்தி வுடவாடி?

ந்தே! அந்தாண்ட போ மொதல்ல! நாலு மக்கமனுசங்க இருக்குற எடத்துல என் மானத்த வாங்குறதே ஒனக்கு வேலையா போச்சு

பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி! மனப்
போதம் வருடிப்போய்ப் பூனையைக் குத்தடா சிங்கா

அடியே என் சிங்காரி! என்னால இதுக்கு மேல தாங்காது! நீயும் ஊரு ஒலகம்லாம் சுத்தி வந்துருப்பே! வாடி, உன்னோட காலை மெதுவா புடிச்சி வுடுறேன். அப்புறமா ஆகவேண்டிய 'முக்கிய'மானதை ஆரமிக்கலாம்.

யோவ்! ஒடம்புபூரா கொழுப்பேறித்தான் முறுக்கிக்கிட்டு திரியிற. ஒருத்தி ஊரெல்லாம் சுத்தி களைச்சிப்போயி வந்தா.... போயி அந்தால ஓடுது பாரு பூனை, அதப்புடிச்சி நீ பண்ண வேண்டிய 'காரிய'த்தை பண்ணிக்கோ!

நாக்குத் துடிக்குதுன் நல்வாயிதழுக்குச் சிங்கி! உன்றன்
வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா

உம்பேச்சே இம்புட்டு இனிப்பா இருக்கே! உன்னோட நாக்கும், எச்சியும் எம்புட்டு இனிப்பா இருக்கும். கொஞ்சூண்டு சாப்டு பாத்துக்கிறேனேடி செல்லம்! என் சிங்கி!!

என்னாய்யா இது புதுசா இருக்கு! ஒனக்கு எப்பவும் கள்ளுதானேய்யா ருசியா இருக்கும். இன்னிக்குத்தான் தேடுறியாக்கும் என்னோட நாக்கை? நீ வேணும்னா தர்றதுக்கும் வேண்டாம்னா போறதுக்கும் நான் ஆளு இல்ல ஆமா. முடியாது முடியாது

ஒக்கப் படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி! பருங்
கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா

அடியேய் சிங்கி! ஏண்டி என்னை இப்டி சூடேத்திக்கிட்டு இருக்குற? சரி சரி வா! நல்ல மறைவா ஒரு பாத்துட்டு வாரேன். கொஞ்ச நேரம் படுத்து தூங்கிட்டு போவலாம்.

அய்யே! தூங்க கூப்புடுற மூஞ்சை எங்களுக்குத் தெரியாது? தூங்கலாம் அப்டீனு கூப்டுவே. அப்டி இப்டி கூத்தாடி எல்லாக் 'காரிய'த்தையும் பண்ணிடுவ. எங்களுக்குத் தெரியாது ஒன்னோட பவுசு?! ஒழுங்கு மரியாதையா மொதல்ல சோத்துக்கு வழி பாரு மாமா. போயி கொக்குப் புடிச்சி அடிச்சி ஆக்குறதுக்கு ஒரு எடத்தைப் பாரு மொதல்ல

வித்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி! அது
சந்தேக மோவுன் தலைப்பேனைக் கேளடா சிங்கா

எப்பிடிப் பேசிப் பாத்தாலும் மடங்க மாட்றியேடி! ஏண்டி, ஒருவேள என்னாலதான் உன்னை மடக்க முடியலையா இல்ல எவனுக்கும் மடங்காத ராட்சசியா. சொல்றி சிங்கி!

யோவ்! என்னைப் பத்திதான் ஊரு ஒலகத்துக்கே தெரியுமேய்யா. இந்தா.. அடுத்தாப்புல எதைச் சொன்னா கவுருவான்னு தலையச் சொறிஞ்சிட்டே நிக்கிறியே. ஒந்தலையில இருக்குற பேனைக் கேட்டுப்பாரு. அது சொல்லும்யா என்னோட பவுச!

தென்னா டெல்லாமுனைத் தேடித்திரிந்தேனே சிங்கி! அப்பால்
இந்நாட்டில் வந்தென்னை எப்படி நீகண்டாய் சிங்கா

ஏண்டி இப்டி இரக்கமில்லாம பேசுற? நானும் உன்னைத்தேடி தெக்கத்திச்சீம பூரா தேடித்தேடி களைச்சிப்போயிதானேடி வந்துருக்கேன்?

சரி அதெல்லாம் கெடக்கட்டும். அப்பறம் எப்டிய்யா என்னைக் கண்டுபுடிச்ச?

நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி! மணிப் 
பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா

தோ இருக்காரு பாரு திருக்குற்றாலநாதர்! அவர்ட்ட வேண்டிக்கிட்டேண்டி. எப்டியாவது என்னோட ஆள எனக்கு கண்ணுல காட்டிடுன்னு!

அய்ய! ரொம்பத்தான் ஆசையா அலைஞ்சிருக்க போல! சரிசரி வாய்யா! அதான் என்ன கண்டுபுடிச்சிட்டல்ல. போயி மறுக்கா கும்புட்டுட்டு வந்துடுவோம்

பாடிக்கொள் வாரெவர் ஆடிக்கொள் வாரெவர் சிங்கி! நீதான்
பாடிக்கொன் டாற்போதும் ஆடிக்கொள் வேனடா சிங்கா

சரிடி என் தங்கம்! சாமிய யாரு பாடுறது? யாரு பாட்டுக்கு ஆடுறது?

இந்தா... நீ ஆடி ஒரு கழுதையும் பாக்காது. நானே ஆடுறேன். நீ பாடுய்யா

பார்க்கப் பொறுக்குமோ பாவியென் ஆவிதான் சிங்கி! முன்னே
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறார்களோ சிங்கா!

அடிப்பாவி மவளே! ஏற்கனவே நான் ரொம்ப சூடா இருக்கேண்டி. இதுல நீ ஆட வேற போறேன்னு சொல்ற. நீ ஆடுறதைப் பாத்தா எனக்கு அடக்கிக்கிட்டு இருக்க முடியாதேடி! செத்தே போயிடுவேண்டி.நான் என்ன பண்ணுவேன்?!

ஏய்யா பொழப்பு கெட்ட மனுசா! ஆக்கப் பொறுத்த நீரு ஆறப் பொறுக்க மாட்டீரோ?! இருய்யா, பூசையெல்லாம் முடிச்சிட்டு, அப்புறமா வீட்டுக்கு போயி நெதானமா எல்லா 'காரிய'த்தையும் பாக்கலாம்
**************************************
அடுத்தாப்புல ஒரு டவுனு பொண்ணு.வசந்தவல்லின்னு பேரு. ரொம்ப பவுசா நாகரீகமா வளந்த பெரியதனக்காரரு வூட்டுப்பொண்ணு! குற்றாலநாதர் கோயில் வீதியில பந்து வெளையாண்டுட்டு இருக்கா. அவளைப் பாக்குறாரு கவிஞரு. ஒடனே கவிதை கரைபொரண்டு ஓடுது. அவளை வர்ணிக்கிறாரு பாருங்க! யாத்தேய்....

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்செயம் என்றாட- இடை 
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட-இரு 
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட- மலர்ப் 
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!

"நல்லா கலரா செவசெவன்னு செவந்த கைய்யில போட்ருக்குற அந்த வளவியெல்லாம் இருக்கே அதெல்லாம் கலின் கலின் னு சத்தம் போடுறது "வெற்றி!வெற்றி"னு கூப்பாடு போடுறாமேரியே இருக்கு! இவ பாட்டுக்குக்கு எதப்பத்தியும் ரோசன இல்லாம குதிச்சிக் குதிச்சி வெளையாடுறாளே, எவ்ளோ பெரிய மாருங்களை வெச்சிக்கிட்டு இருக்கா.. இந்த ஆட்டம் போட்டாக்கா சின்னூண்டு இடுப்பு ஒடிஞ்சி போனாலும் போயிடுமேன்னு அவ கால்ல கெடக்குற சிலம்பும், தண்டையும் பொலம்பிகிட்டே ஆடுதுங்க. இவளோட மாருங்க இருக்கே! அது ரெண்டும் அசப்புல அவ வெச்சிக்கிட்டு வெளையாடுற பந்து மாதிரியே இருக்குங்க. அதுங்களோட திரட்சியான வடிவத்துக்கு அந்த பந்துதான் போட்டியா, எதிரியா இருக்கும்போல அப்டி ஒரு அழகு! ஆனா யார்ட்ட போட்டி போடுறது?! பந்து தோத்துடுது. அதான் அந்த கொடும்பகையான பந்தை தோக்கடிச்ச கர்வத்துல அவளோட மாருங்களும் குதிச்சி வெளையாடுது. பூமாலைமேரி இருக்குற வசந்தவல்லி பந்தாடுனதைப் பாத்தா இப்டியெல்லாம் தோணுதுய்யா! இது மட்டுமா... இன்னம் இருக்குங்காணும்!"

அடுத்த பாட்டு

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக் - குழல் 
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி 
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிசை திண்டாட - மலர்ப் 
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!

"அவளோட காதுல போட்ருக்குற தோடுஜிமிக்கி இருக்கே, அதுங்க அவளோட கண்ணு ரெண்டுமேலயும் பொரண்டு பொரண்டு ஆடுதுங்க. அது எப்டிய்யா தோடுஜிமிக்கி கண்ணுக்கு வந்திச்சின்னு கேக்குறீங்களா? அவ கண்ணு ரெண்டும் அவ்ளோ பெரிசுய்யா. காது வரைக்கும் நீண்டுருக்கு. சொம்மா ஆறடி நீளத்துக்கு மேகம் மேரி விரிஞ்சி கெடக்குதுல்ல கன்னங்கரேல்னு அவளோட கூந்தல்! அதுல அவ வெச்சிருக்கிற பூவுல இருக்குற வண்டுங்கல்லாம் அவ போடுற ஆட்டத்துல கூந்தல்ல இருந்து எந்திரிச்சி ஓடுதுங்க. அதப் பாத்துட்டு மம்முதன் வில்லுல நாணா இருக்குற வண்டெல்லாம் கலைஞ்சி ஓடுதுங்களாம். அவளோட சின்னஞ்சிறு இடை தளந்து தளந்து ஆடுதாம், ஏன்? நம்ம அழக பாத்துட்டு இந்த ஒலகம் என்ன பாடு படுதோன்னு கவலையில ஆடுதாம். சொம்மா பூ கணக்கா அப்டி பந்து வெளையாண்டுட்டு இருக்கா நாம் ஈரோயினு!"

அதுக்கடுத்த பாட்டு

இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மனம் 
முந்திய தோவிழி முந்திய தோகரம் முந்திய தோவெனவே - உயர் 
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிய 
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரிபொற் பந்து கொண்டாடினளே!

"இந்தமேரி கெட்ட ஆட்டம் போடுறாளே... இவ மகாலட்சுமியா இல்ல ரதியா இல்ல தேவலோக ரம்பையா இல்ல யாராச்சும் மோகினியா! என்னமா மின்னல் மேரி ஆடுறாய்யா!! இவ மனசுதான் அவ்ளோ வேகமா முன்ன போயி ஆடுதா? இல்ல அவளை முந்திக்கிட்டு கண்ணு ரெண்டும் ஆடுதா? இல்ல நெசமாமே கையாலதான் ஆடுறாளா? ஆட்டத்துக்கு பேர்போன அந்த கூத்தபெருமானே, அதாம்யா மூணாம்பிறைய தலையில வெச்சிக்கிட்டு ஆடுவாரே அவரு! நல்லா பொருத்தமாத்தான் அவரு கோயிலு இருக்குற தெருவுல நம்ம ஈரோயினு அம்சமா பந்து வெளையாடுறா. பொற்பந்துன்னா பொன்னாலான பந்து இல்ல. அம்புட்டு கனத்தை பூ மேரி இருக்குற இவ எப்டி சொமப்பா! இவ கைய்யி பட்டு அந்த பந்து தங்கம் மேரி தகதகன்னு மின்னுது. அந்த பந்த வெச்சிட்டு ஆடுறா இவ!"

ஹும்ம்! இந்தமாதிரி தேன்சிந்தும் பாட்டையெல்லாம் விட்டுப்புட்டு, காக்காவலிப்பு வந்தவன் மாதிரி வெட்டிவெட்டி பாடுற, ஆடுற பாட்டுக்களை ரசிக்கவேண்டிய நெலைமைக்கு ஆளாயிட்டோம்!

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

நாய்வாய் எச்சில்


தனித்த வெய்யிற்பொழுதில்
கருகிப்போன புற்களை
மென்று தீர்க்கிறது பசு...

காசுகள் குலுங்கா
திருவோட்டுடன்
காலணிகள் தேவையற்ற
கட்டைக்கால் பிச்சைக்காரன்
பசிமரத்த வயிற்றோடு...

வலியைப் பிடுங்கிப்போடும்
பிரயத்தனத்தில்
நாய்வாய் எச்சிலாய்
வழிகிறதென் காதல்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கொங்கை முகங்குழைய... (வயதுவந்தோர் மட்டும்)



காமம்...! ஒற்றை வார்த்தையைச் சுற்றிச் சுழல்கிறது ஒழுக்கம்சார் உலகம்! காமம் என்பது வெறும் நுகர்வாய் மாற்றப்பட எதிர்விளைவாய் வெடிக்கின்றன பண்பாட்டு குண்டுகள். ஒரு பூவின் மலர்ச்சியாய் இயல்பாய் இருக்கப்பட வேண்டியது செயற்கையாய் ஊதிப் பெருக்கப்பட்டு வாழ்வின் கணந்தோறும் நிறைத்து மூச்சுமுட்ட வைக்கின்றது.

காமம் என்ற சொல் மனதில் காட்சிப்படுத்தப்படுகையில் பல திசைகளில் பாயத்துவங்குகின்றது நினைவெனும் காட்டுக்குதிரை!

காமத்திலிருந்துதான் கடவுளுக்கான பயணம் துவங்குகிறது என்கிறார் ஓஷோ. காமத்தைக் குட்டையாக்கித் தேக்கிவைக்கப்பட்ட கற்பனைகள் அழுகி நாற்றமெடுக்க சாக்கடையாய் வாழப் பழகிவிட்ட நாமோ அவரை வெறும் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம். திராவிடர்களின் ஆதிக் கலாச்சார மரபிலிருந்துதான் காமம்சார்ந்த தாந்த்ரீக விஷயங்களை உள்ளடக்கி அதர்வணவேதம் படைக்கப் பட்டது.

தந்த்ரா என்று ஒரு ரகசிய மார்க்கம் பௌத்தத்தின் ஒரு பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டது. காமத்திலிருந்து கடவுளுக்குச் செல்லும் பயணத்தின் தேடல்களை உள்ளடக்கிய தந்த்ரா இன்றும் பலரால் வியாபார நோக்கமாக மாற்றப்பட்டு வெறும் காமநுகர்வினை வர்ணக் காகிதங்களில் கட்டித் தரும் காமதேனுவாகிவிட்டது.

"Chastity is nothing but lack of opportunity" என்று வேடிக்கையாய் சொல்வார் பெர்னாட்ஷா.காமம் தவறென்று கற்பிக்கப்பட்டு பாலியல் வறட்சிக்குள் தள்ளப்பட்ட சமூகம், ரகசியமாய் "ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று புதிய வேதம் பாடிக் கொண்டிருக்கின்றது.

காமம்பாடும் இலக்கியங்களும், காமம் சொட்டும் கலைக் கோயிலகளும் செழித்திருந்த காலம் போய் கழிவறைக் கிறுக்கல்களே இலக்கியமாய்க் கற்பிதம் செய்யப்படுகின்றது.

எனக்கு ஒரு கதை நினைவிலாடுகின்றது;

ஒரு துறவியும் அவரது சீடனும் ஆற்றைக் கடக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளை. ஆற்றிலோ வெள்ளம் தலைக்குமேலே போகின்றது. நீந்திக் கடக்கலாம் என்று முடிவெடுக்கும்போது ஒரு இளம்பெண்ணின் குரல். துறவியைப்பார்த்து அவள் சொல்கிறாள் "சுவாமி! எனக்கு நீந்தத் தெரியாது. தயைசெய்து என்னையும் அக்கரை சேர்ப்பீர்களா?" அக்கரை சேர்க்கிறேன் பேர்வழி என்று  இளம்பெண்கள்மீது அக்கறை காட்டும் இக்காலத் துறவி அல்ல அவர்; நிஜமாகவே அவர் துறவி! சற்று யோசித்தவர் சரி எனச் சொல்லி அவளையும் சுமந்துகொண்டு நீந்தி அக்கரையில் இறக்கிவிட்டு வழியனுப்புகிறார்.

சிறிதுதூரம் சீடன் மௌனமாகக் குருவைத் தொடர்கிறான். பின் மெதுவாய்த் தயங்கித் தயங்கிக் கேட்கிறான் "குருவே! தாங்களோ துறவி! தாங்கள் ஒரு இளம்பெண்ணை சுமந்து வந்தது சரியா?" என்று.

மெல்லப் புன்னகைத்த குரு சொல்கிறார் " நான் அவளை அப்போதே இறக்கிவிட்டேனே? நீ இன்னுமா சுமந்து வருகிறாய்?!" என்று.

இப்படித்தான் நாமும் கணந்தோறும் காமத்தைக் கற்பனையில் சுமந்து திரிகிறோம்.

காமத்தை இயல்பாய் அதன் அழகு மிளிரப் பாடிய தமிழ் இலக்கியங்கள் கணக்கிலடங்கா.

பெரும்பாலோர் ஆணின் காமத்தை செய்வினையாகவும் (active), பெண்ணின் காமத்தை செயப்பாட்டுவினை(passive) ஆகவுமே வர்ணிக்கையில் புகழேந்திப்புலவர் நளவெண்பாவில் தமயந்தியின் காமத்தை செய்வினை (active) யாக வர்ணிக்கிறார்:

நளன் மிகப்பெரும் வீரன்! இருளைக் கிழித்துப்பாயும் மின்னல்போலப் பாய்ந்துசெல்லும் வேலைக் கொண்டவன்! போர்க்களத்தில் வீரமாய்க் களமாடும் நளனின் விம்மித்து அகன்ற மார்புகளின் மீது வனப்புமிக்க கொங்கைகளை மோதி கண்கள் தனது கூந்தலின்மேலும், நளனின் உயிர்மீதும், நீண்டு விரிந்துபோய்த் தன் செவிமீதும் அலைமோதக் காதல் பெருக்கிக் கலவிச் சண்டை செய்கின்றாளாம் தமயந்தி!

"குழைமேலுங் கோமான் உயிர்மேலுங் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள – இழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்
வல்லோடுங் கொங்கை மடுத்து."


அடுத்த பாடல் இன்னும் அழகு! என் மனதில் என்றும் நீங்காத ஒரு பாடல்!

நளனுடைய படை யானைப்படை. களங்களில் மிகுந்த பிளிறல் சத்தங்களோடு போரிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும். ஆனால் நளனுடைய அதிகாரமெல்லாம் போர்க்களங்களில் மட்டும்தான். பள்ளியறையில் நடக்கும் போரில் தமயந்தியின் போர்க்கருவிகளே ஆட்சி செய்கின்றனவாம். என்ன மாதிரியான கருவிகள்?! குங்குமமும், சந்தனமும் குழைத்துப் பூசப்பட்ட வளமையான கொங்கைகள்! காதுவரை நீண்டு பார்வையிலேயே காதலனை விழுங்கிச் செரித்துப்போடும் கண்கள்! அவளது வளையல்கள் எழுப்பும் கிண்கிணி நாதம்தான் இங்கு போர்முரசு!

பகைவர்களை எப்போதும் கொல்லும் யானைப்படைவேந்தனோடான கலவிப்போரில் அவனுடைய மார்புகளோடு மோதி அவளின் கொங்கைகள் குழைகின்றன! காரிருளாய் அவிழ்ந்து கலைந்து விரிகிறது அவள் கூந்தல்! போர்முரசாய் ஒலிக்கின்றன அவளது வளையல்கள்! காமத்தில் சிவந்த அவளது கண்கள் நீண்டு அலைபாய்கின்றன!

"கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கயற்கண் ஓடிச் செவிதடவி – அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து."


செயற்கையாய்க் குப்பிகளில் அடைக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் போன்றதல்ல காமம்! அது ஒளி புக முடியாக் காட்டுக்குள் பூத்திருக்கும் ஒற்றைப்பூ! நுகரத் தேவை, நீண்டு நெடிதான தேடல்....! துடைத்துவிட்டுத் தூக்கியெறியும் காகிதமல்ல... எல்லாம் ஒடுங்கிப் போய் மனம் அசைவற்றுப் போகும் உள்ளொளிப் பயணம்! "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்பது கடவுளுக்கல்ல.... காமத்திற்கே பொருந்தும்.

தென்றலின் மென்மையாய்த் துவங்கும் காமத்தின் பயணம் சூறைக்காற்றாய் மாறி சாத்திரக் கட்டுகளை சாய்க்கவேண்டும். பொருதிய உடல்களில் மூச்சு மட்டுமே மெல்ல ஓடிக் கொண்டிருக்க வேண்டும். மூடிய இமைகளுக்குள்ளிருந்து வழிய வேண்டும் காதலின் வெள்ளத்தில் முங்கு நீச்சல் அடித்துக் கரையேறிய நிறைவு! அணைத்திருக்கும் கரங்களுக்குள் ஒருவருக்கொருவர் உயிர் ஒடுங்கிக் கொள்ளவேண்டும்.

முத்தமிட்டுத் தீராமல் மோதிக்கொண்டே இருக்கும் கடலலைபோல் நானும் தேடிக்கொண்டே இருக்கின்றேன் நான் உள்ளொடுங்கும் தருணங்களை!

எத்தனை தேக்கியும் விழிகளுக்குத் தப்பிக் கொண்டே இருக்கின்றது குருடன் கண்ட சிற்பமாய்! கழுத்தறுபட்ட ஆட்டினின்று கொப்புளிக்கும் குருதியாய்ப் பொங்கிக் கொண்டே இருக்கின்றது தீராக்காமம்!

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

அஸ்வத்தாமாக்கள் சாவதில்லை!

அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற்றாமையின் சுவாலையும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.




'துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. நான் தனியனானேன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உபயோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குருஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனும் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?'



அது குருஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் படுகளம். எங்கும் மரண ஓலம் மட்டுமே எஞ்சி இருந்தது. குருஷேத்திரம் எனப்படும் ஸமந்தபஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குளக்கரையில் துரியோதனன் வீழ்ந்துகிடந்தான். ராஜ்யக் கனவுகள் கலைந்து மரணத்தில் சாயை கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் கவியத் துவங்கி இருந்தது. துரியனின் உதடுகள் வெடித்துக் கிடந்தன. இமைகள் கிறங்கி இருந்தன. துரியனின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியனின் உதடுகளில் தடவினான்.



"துரியா! என் அரசே! என் தோழனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்டளை இடு" பதற்றத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.



துரியன் மெல்ல இமை திறந்தான்.



"அஸ்வத்தாமா! எல்லாரும் மாண்டார்களா? என் பந்துமித்திரர் எவரேனும் எஞ்சி இருக்கிறார்களா? தர்மத்தின் பக்கம் நின்று என் ராஜ்யம் காக்க நான் முன்னெடுத்த போர் முடிந்ததா? குந்தியின் புத்திரர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபாரத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர்த்திருக்கிறேன்?"



"இல்லை துரியா! இன்னும் யுத்தம் பாக்கி இருக்கின்றது. உன் கட்டளைக்காகத்தான் காத்திருக்கிறேன். ஒரு சொல்... பாண்டவரின் வம்சத்தை வேரறுத்து வருகிறேன். இந்த யுத்தத்தின் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைகள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!"



துரியன் முகத்தில் உயிரின் மலர்ச்சி துளிர்த்தது. சற்றே உடலை அசைத்து எழுந்தான். பிளக்கப்பட்ட தொடையின் வாதையில் அவன் முகத்தில் வேதனையின் ரேகைகள். தன் குருதி கலந்த குளத்து நீரள்ளி அஸ்வத்தாமனின் கைகளில் தெளித்தான். "இக்கணம் முதல் கௌரவசேனையின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா. வஞ்சம் முடித்து வா! உன் வரவுக்காய் என் மூச்சு காத்துக் கொண்டிருக்கும்"



அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான்.



இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொள்கிறது. அது தன் கர்ப்பப்பையில் எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்கிறது. அதன் கதகதப்பில் அனைத்தும் துயில் கொள்கின்றன. ஆனால் நிராசையின், துயரத்தின், தனிமையின், துரோகத்தின் தகிப்பை, வெக்கையை உணர்ந்தவர் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்கள் இமைகள் மூடா நெடுங்கதவமாகி இரவை விழுங்கிச் செரித்துவிட முயன்றுகொண்டே இருக்கின்றன. அவர்களின் துக்கம் பெரும் ஓலமாகி தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது.



அஸ்வத்தாமன் அந்த இரவில் விழித்திருந்தான். பாண்டவர் பாசறையில் புகுந்தான். எதிர்த்தவர், உறங்கியவர் என வேறுபாடற்று இருக்க இமைகளை மூடிக்கொண்டே தன் ஆயுதங்களைப் பிரயோகித்தான். எங்கும் எழுந்த மரணஓலம் அவனை உன்மத்தனாக்கி இருந்தது. மானுடத்தின் ஆதிச் சுவையான வன்முறையை, குருதிச் சுவையை அவன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு தலை வீழும்போதும் அவன் கரங்களுக்குள் புதிய ஜீவன் பாய்ந்தது. அவன் புலன்களனைத்தும் பரிபூரண விழிப்பில் இருந்தன. அவை மரணத்தின் விளையாட்டை உணர்ந்து கிளர்ந்தன.



அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நடத்திய வேட்டை குரூரமாக இருந்தது.



'அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ...'



அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலைகள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண்ட அஸ்வத்தாமா காற்றினும் கடிதாய் விரைந்தான்.



"துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலைகளைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித்தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசியில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!"



பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற்றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட்டுகின்றன. இறுதிப்புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புலன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக்கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய்விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடுங்குகிறான்.



துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழுத்து வருகின்றது.



"மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்களின் தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்றுவருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட்டாயே!"



வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல்லை.



அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். 'பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?' மடங்கி அழத் தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ணன்.



"அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன்னும் ஏன் வஞ்சத்தோடு திரிகிறாய்! நீ பிராமணன்... கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும் பார்... மகாபாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிராசையும், தனிமையும், துரோகமும் பீடிக்கப்பட்டோர்! அதோ பார்! ஏகலைவனை... உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கும் பித்தனாய்த் திரிந்து கொண்டிருப்பதை... இன்னும்... இன்னும் துக்கத்தாலும், துரோகத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனைபேர்... அம்பை தொடங்கி,சிகண்டியும், அரவானும், கர்ணனும்... இதோ உத்தரை முடிய... வேண்டாம் அஸ்வத்தாமா... உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கிவைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்துவிடும்."



அஸ்வத்தாமா கைகூப்பினான். "இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத்தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ்வத்தாமா இறந்தான் என்று பொய்யுரைத்து குருத் துரோகத்தின்மூலம் என் தந்தையைக் கொன்றார்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமகனான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபாணியான கர்ணனைக் கொன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரியனை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்... இன்னும் பாரதயுத்தமெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சிசெய்து வந்திருக்கின்றது. கிருஷ்ணா! இனி நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். நான் போகிறேன் கிருஷ்ணா! இன்னும் சொல்கிறேன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் இறப்பதில்லை. அவர் கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. அதன் ஒலியில் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத்துக்கும் கதவடைத்துப் போடட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்"



அஸ்வத்தாமா காற்றோடு கரைந்துபோனான். யுகாந்திரங்களைத் தாண்டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ்சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான்.



அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவில்லை!

வியாழன், 14 ஏப்ரல், 2011

சதுரங்கராணி



நானும் நீயும்
சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தோம்
நெடுங்காலமாகவே
வெள்ளைக்காய்கள் எப்போதும்
உனதாகவே...
சீறிப்பாயும் ராணிக்காயினை
உபயோகப்படுத்த
எப்போதும்
தெரிவதில்லை எனக்கு
குறுக்கில் பாயும் பிஷப் காய்கள்
உன் விரல்களில்...

உன் ஒவ்வொரு முத்தத்திலும்
வெட்டுப்பட்டனர் சிப்பாய் தொடங்கி
ரூக் வரை

நீ செக் சொன்னபோது
உறைந்துபோன
எனது காலத்தின்
உள்ளிருந்து
எழுதிக் கொண்டிருக்கிறேன்
இந்தக்கவிதையினை

கடந்து செல்கிறாய்
மெல்லிய புன்னகையுடன்
சதுரங்கங்களின் ராணியென!

களங்களை இழக்கலாம்; யுத்தத்தை அல்ல!



ஒருவழியாக முடிந்தேவிட்டது பதினான்காவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள். இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும் நம்மை ஆளப்போவது நரிகளா இல்லை ஓநாய்களா என்று தெரிந்துகொள்ள! இந்த சட்டப்பேரவைத்தேர்தலின் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் சரி. அடுத்த ஐந்தாண்டுகளில் உண்மையான இன உணர்வும், மொழிப்பற்றும் கொண்டவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய ஒரு கண்ணோட்டம் :

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்று ஒரு பழமொழி உண்டு. தமிழுணர்வாளர்கள் பல்வேறு திசைகளில் சிதறிக்கிடப்பதை துரோகிகளும் எதிரிகளும் தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டனர். அனைத்துத் தமிழுணர்வாளர்களாலும் மதிக்கப்படும் தலைவரான வைகோ இந்தத் தேர்தல் களத்தில் அப்புறப்படுத்தப்பட்டார். ஈழச்சொந்தங்களை அரவணைத்திருக்கவேண்டிய திமுக கட்சி இன்று இனவுணர்வு, சுயமரியாதை எல்லாம் இழந்து எந்த காங்கிரஸை வேரறுக்க அந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ அந்த காங்கிரஸின் பாதாரவிந்தங்களே சரணம் என்று சரணடைந்துவிட்டது. பாலிவினைல் போர்டுகளின் புகைப்படங்களில் மட்டுமே மீசை முறுக்கித்திரியும் திருமாவளவனும் திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸின் முகாமுக்குள் அடைக்கலமாகிவிட்டார்.

பார்ப்பனத்தாரகை ஜெயலலிதா சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் திடீர் 'ஈழத்தாயாக' அவதரித்துப் பார்த்தார். அந்தத் தேர்தலுக்குப்பின் அந்த அவதாரம் பல்லிளித்துப்போனது. ஆனாலும் துரோகிகளை ஒழித்துக்கட்டினால் எதிரிகளுக்கு முகம் கொடுப்பது எளிதாக இருக்கும் என்ற வியூகத்தில் ஒரு பகுதி தமிழுணர்வாளர்கள் இந்தத் தேர்தலிலும் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். "பிரபாகரனைத் தூக்கில் போடு" என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயாவை ஆதரிப்பதுதானா தமிழுணர்வு என்று எதிர்த்தரப்பு கேலிபேசத் தொடங்கியது. தாங்கவியலா மனவலியுடனேயே தமிழுணர்வாளர்கள் திமுகவை வீழ்த்தும் ஆயுதம் ஜெயாதான் என்ற யதார்த்தக்கசப்பை விழுங்கிக்கொண்டு களத்தில் நின்றனர்.

ஆகக்கூடி தேர்தல் தேர் தெருவெல்லாம் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தேவிட்டது. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இனி வழக்கம்போலவே பழைய காட்சிகள் புத்தம்புது ஈஸ்ட்மென் கலரில் மீண்டும் அரங்கேற்றம் செய்யப்படும். மீனவர்கொலைகளும், தமிழர்களின் வாழ்வியல் சூறையாடப்படுதலும் சிந்துபாத்தின் கன்னித்தீவுக்குப் போட்டியாக தினம்தினம் தொடரும். ஆள்வோரின் 'அலகிலாத் திருவிளையாடல்களில்' நாளொரு ஊழலும், பொழுதொரு லஞ்சலாவண்யமும் நடந்தேறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இந்தத் தேர்தலில் தமிழுணர்வு, இனப்பற்று இவற்றை முன்னிறுத்திப் போராடிய தமிழுணர்வாளர்களுடைய பணி இனிதான் துவங்குகின்றது. கலை, பண்பாடு, அன்றாட வாழ்வியல் என எல்லாவகைகளிலும் நம்மைச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் கும்பலுக்கு ஒரு முடிவுரை எழுதும் பணி!

மறுமலர்ச்சி திமுகவானாலும் சரி, 'நாம் தமிழர்' இயக்கமானாலும் சரி, நெடுமாறன், தியாகு, தாமரை, பெரியார் தி.க, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சி, மே பதினேழு இயக்கம் என்று பல்வேறு பெயர்களில் பல்வேறு திசைகளில் பயணப்படும் தமிழுணர்வாளர்கள் இப்போதுமுதல் ஒருங்கிணைக்கப்படவேண்டும்.

இவர்கள் ஒவ்வொரு இயக்கத்தின் கொள்கைகளும், வழிமுறைகளும் முரண்படலாம். தேர்தல் அரசியலில் ஈடுபடும் இயக்கமாக ஒன்று இருக்கும்; தேர்தல் மறுப்பு அரசியல் செய்யும் இயக்கமாக ஒன்று இருக்கும்; பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புரை செய்வதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமாக ஒன்று இருக்கும்; மார்க்சிய அரசியலைப் பேசுவதாக ஒன்று இருக்கும்; பெரியாரையும், மார்க்சையும் இணைத்துச் செயல்படும் இயக்கம் ஒன்று இருக்கும்; இன அழித்தொழிப்புக்கு ஆளான ஈழச் சொந்தங்களின் இழிநிலைக்கு நியாயம் கேட்பதாக ஒன்று இருக்கும்!

ஆறுகள் பிறக்கும் இடமும், நிலமெல்லாம் செழிக்கச்செய்து பயணப்படும் பாதைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் ஒன்று சேர்வது ஒரே கடல்தான். இயக்கங்களின் கொள்கைகளும், நடைமுறைகளும், போராட்டமுறைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இவர்களின் முதலும் முக்கியமுமானதான இலக்கு தமிழர் வாழ்வு, தமிழர் நலன் என்பதாகவே இருக்கின்றது. ஆனால் நெல்லிக்காய் மூட்டையாக சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழுணர்வாளர்களும் ஒரு கூட்டமைப்பின்கீழ இணையவேண்டும். ஒரு இயக்கம் இன்னொன்றுக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லை. ஆனால் பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயல்திட்டம் அமைத்துச் செயல்படவேண்டும்.

இன்றைய நாடாளுமன்ற சனநாயக அரசியலில் தேர்தலின்மூலம் அதிகாரத்துக்கு வருவது என்பது தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது. மக்களின் அங்கீகாரத்துக்கு அதுவே சிறந்த மற்றும் ஒரே வழியாக இருக்கின்றது. எனவே அனைத்துத் தமிழுணர்வாளர்களின் கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் யாராலும் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கவேண்டும்.

தமிழினத்தின்மேல் காலங்காலமாகத் தொடுக்கப்பட்டுவரும் பண்பாட்டு அழிப்புத் தாக்குதலை, இப்போது பார்ப்பனீயத்தோடு சேர்ந்து உலகமயமாக்கலும், ஏகாதிபத்தியங்களும் மிகத்தீவிரமான அளவில் செய்து வருகின்றன. எதிரிகளின் ஒருங்கிணைவு வலுவாக இருக்கின்றது. அதற்கெதிரான விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழனிடமும் ஏற்படுத்தவேண்டும். எமது கலைகளும், வாழ்வியலும், குன்றாத பண்பாட்டுவளங்களும் மீட்டெடுக்கப்பட்டு செழுமைப்படுத்தப்பட வேண்டும்.

நாள்தோறும் நம்முன்னே நிற்கின்றன புதிய புதிய போராட்டங்கள்! எதிர்கொள்ளும் வலிமையும், நட்புச் சக்திகளுடனான ஒருங்கிணைப்பும் இல்லாவிட்டால் நாம் இனிவரப்போகும் காலங்களிலும் 'புல்லுக்கு மட்டுமே நீர்பாய்ச்ச' வேண்டிய பரிதாபகரமான நிலையில் இருப்போம்.

தோழர்களே! இந்தத்தேர்தலில் தமிழுணர்வாளர்களின் போராட்டம் விழலுக்கிறைத்த நீரென மாறலாம்! வெற்றியின் பலன்களை வீணர்கள் ருசிக்கலாம்! ஆனால்...

இரண்டாம் உலகப்போரின்போது வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன வாசகத்தை நான் நினைவுபடுத்துகிறேன்...

"நாம் களங்களை இழக்கலாம்! யுத்தத்தை அல்ல!"

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்



புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்

பதின்பருவச்
சுயமைதுனங்களின் இறுதியில்
எப்போதும்
எட்டிப் பார்க்கும்
துளி கண்ணீர்

"படத்தோட இருவது ரூவா"
"படமில்லாம பத்து ரூவா"
ரோட்டுப் புத்தகங்கள்...
கதைகளின் நீதி
"தவறுக்கு வருந்துகிறேன்"...

"புள்ளிராஜா"க்களின்
பயமுறுத்தல்களிலும்
ஆணுறை வாங்க அச்சத்திலும்
காற்றில் பீய்ச்சப்பட்டு
கழிந்துபோயின கல்லூரிக்காலங்கள்

'வாலிப வயோதிக
அன்பர்களை'த் தேடும்
விடுதி வைத்தியர்களும்

'அது மிகப் புனிதமானது'
கட்டுரைகளின் நாயகர்களும்

காம்புகள் மட்டும் மூடப்பட்ட
"கவர்ச்சி தப்பில்லை" பேட்டிகளும்

கனவுகளின் சன்னல்களைத்
திறப்பதுவும் மூடுவதுமாய்....

பிறிதொருநாள்...

அரையிருட்டின் ஐந்தாம் நிமிட
இறுதியில்
தோன்றியது

இந்தக் கவிதையை எழுத...

புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்...

திங்கள், 11 ஏப்ரல், 2011

வாங்களேன் கொஞ்சம் அரட்டை அடிக்கலாம்...


Merchant of venice


நான் ஒன்றும் நிரம்பப்படித்த மேதாவியோ, படைப்பாற்றல் மிக்க இலக்கியவாதியோ அல்லன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில முத்துச் சிதறல்களைக் கண்டு அவற்றின் மின்னற்கீற்றுகளில் மனதைப் பறிகொடுத்து மயங்கி நிற்கும் எளியவன். எனக்குக் கவிதை பிடிக்கும். காதலியின் முத்தம் போல, கவிதைகளில் கிறங்கப் பிடிக்கும். சின்னச்சின்ன கற்பனைகளில், கவிதைக்கீற்றுகளில் வாழ்வெனும் புதையல் ஒளிந்திருக்கின்றது என்றெண்ணி மகிழப் பிடிக்கும். எனக்குப் பிடித்த, என்னைக் கிறுக்குப் பிடிக்கவைத்த சிற்சில கவிதை வரிகளைப் பகிர்வதுடன் எனது தமிழ்மண நட்சத்திரவாரத்தைத் துவங்கலாம் என்று நினைக்கிறேன்

1) என் எட்டாம் வகுப்புத் தமிழாசிரியர் பக்கிரிசாமி அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது இராமாயணம் பற்றி வேடிக்கையாகச் சொல்வார் "எலேய்! ராமாயணம் ஒண்ணும் பெரிய புண்ணாக்கெல்லாம் இல்ல. அந்தக்காலத்துல பயலுவ நம்மள ஏமாத்த கட்டிவுட்ட கதெதாண்டா அது, சுருக்கமா ரெண்டே வரில சொல்றேம்பாரு ராமாயணக்கதெய... ராமன் பொண்டாட்டிய ராவணன் தூக்கிட்டுப் போனான்; அடிச்சிப்புடிச்சி அனுமாரு கொண்டுவந்தான். அவ்ளோதாண்டா". தீவிர பெரியாரிஸ்ட்டான அவர் வாயில் புகுந்து எழும் புராணப்பாத்திரங்களுக்கு உயிர் மட்டும் இருந்திருந்தால் எத்தனைமுறை வேண்டுமானாலும் 'நாண்டுகிட்டு' செத்துப்போகும்.

கொஞ்சம் விவரம் புரிந்தபிறகு ஒருசில கம்பராமாயணப்பாடல்களைப் படித்தபோது கம்பனில் மயங்கிநின்றேன். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது பொய்மொழியன்று!


"அஞ்சிலே ஒன்று" எனத்துவங்கும் பாட்டில்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்  தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றுவைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் "

பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவின் மைந்தனான அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான விசும்பின் வழியே பஞ்சபூதங்களில் ஒன்றான கடலைத்தாவி, பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாதேவியைக்கண்டு, தென்னிலங்கை நாட்டில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தான். அவன் நம்மைக் காப்பான் என்பது பொருள்.

இந்த வார்த்தைச் சித்துவிளையாட்டு உங்களை மயக்குகிறதா இல்லையா?

இன்னொரு பாடல்! இராம இராவணப்போரின் இறுதிநாள். இராமனது அம்பால் இராவணன் துளைக்கப்பட்டு களத்திலே வீழ்ந்து கிடக்கிறான். இராவணன் மாவீரன். முன்னொரு காலத்தில் அவன் தவம் செய்தபோது சிவன் தன்முன்னே தோன்றவில்லை என்பதற்காக கைலாய மலையையே அப்படியே பெயர்த்து தன் தோள்களில் தூக்கிய பலசாலி. பிறன்மனைமேல் கொண்ட காதலால் வீழ்ந்தவன். அவனை ஊடுருவிச் சென்ற இராமனது அம்பு அவனது உயிரை மட்டும் குடிக்கவில்லையாம்! வேறென்ன செய்கிறது? ஒரு எள் இருக்கின்ற மிகச்சிறிய இடம் கூட மிச்சம் வைக்காமல் அவன் உடலைத் துளைத்திருந்த இராமபாணமானது அவன் உடலின் உட்புகுந்து தேடிப்பார்க்கிறதாம்! எதை? சீதைமேல் அவன்கொண்ட காதல் அவனுக்குள் எங்காவது மிச்சம் இருக்கின்றதா என்று அலசி ஆராய்ந்து பார்க்கிறதாம்!

இப்போது இந்தப்பாடலைப் படித்துப் பாருங்கள்!

"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறோ !
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி "

2) எனக்கும் வாழ்க்கைக்கும் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது ஒரு சூதாட்டம். அவ்வப்போது வெல்வதும், தோற்பதுவுமாக நடக்கும் இந்த ஆட்டத்தின் ருசியில் ஊறிப்போய்க் கிடக்கிறது மனது. சூதாட்டத்தின் ஜோக்கராக என்னையே மாற்றிக் கொள்கிறது வாழ்க்கை சில பொழுதுகளில். எதனைப் பெறுவதற்காக இந்த ஆட்டத்தை நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்? என் எல்லா உடைமைகளையும் பணயம் வைக்கச்சொல்லி என்னைத் தூண்டுவது எது? "ஆட்டக்களத்தில் கேள்விகளுக்கு இடமில்லை. யுத்தம் செய் அல்லது செத்துப்போ" என்று கொக்கரிக்கிறது வாழ்க்கை. நானும் அதையே வேண்டுகிறேன் "வெற்றியின் ருசி தெரியாமல் வெறுமனே மூச்சு விடுவதால் மட்டுமே என் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. எனக்குத் தேவை வெற்றியின்பின் மகுடம் சூட்டும் கரங்களே! கண்ணீர் துடைக்க அல்ல!" என்று யுத்தபேரிகை முழக்குகிறேன்.

மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்! உங்கள் நாடி நரம்புகளில் எதோ ஒரு உத்வேகம் பாய்கிறதல்லவா?

உரியதைக் கொடு
************************

நான் வெற்றி பெற இயலாது
என்பதே
உன் முடிவானால்

வாழ்க்கையே
என்னைத் தோற்கடித்து விடு

திட்டவட்டமாக
யாவரும் அறியும்படி
என் தோல்வியை உரத்துச் சொல்

ஒரு மூட்டைப் பூச்சியை
நசுக்குவது போல
நசுக்கித் தடவு

விழுங்கி
வாயைத் துடைத்துக் கொண்டு போ
உன்னிடம் எனக்கென்ன வருத்தம்?

ஆனால்
தயவு செய்து கொடுக்காதே
ஆறுதல் பரிசுகளை மட்டும்

ஏதோ கிடைத்ததே
என்று போக
இது பிரார்த்தனையல்ல
சண்டை

3) பல வருடங்களுக்கு முன்னர் என் ஆங்கில ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் ஷேக்ஸ்பியரின் 'மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்' நாடகத்தின் ஆங்கிலம், தமிழ் இரண்டு பதிப்புகளையும் கொடுத்து என்னைப் படிக்கச் சொல்லி இருந்தார். தமிழாக்கத்தில் ஒரு கவிதை என்னை கட்டிப்போட்டது.

ஷைலாக் என்னும் வட்டித்தொழில் செய்யும் யூதன் தனது எதிரியான ஆண்டனியோ என்பவன் தனக்குத்தர வேண்டிய தொகைக்குத் தாமதமானதால் வழக்குமன்றம் செல்கிறான். அவனது வாதங்களாக அவன் சொல்லும் வசனம் அது. வில்லன் பாத்திரமாக இருக்கும் ஷைலாக் தனது தரப்பு நியாயங்களைப் பட்டியலிடும்போது ஒரு யூதனாக தான் எவ்வாறெல்லாம் , அவமானப் படுத்தப் படுகிறேன், எவ்வாறெல்லாம் ஒடுக்கப்படுகிறேன் என்று அடுக்குகிறான்:

"நானொரு யூதன். ஒரு யூதனுக்கு கண்கள் இல்லையா? எனக்கும் உம்மைப்போல கைகளும், கால்களும், அங்கங்களும், உணர்ச்சிகளும், விருப்புவெறுப்புகளும், பந்தபாசங்களும் இல்லையா? நீங்கள் உண்ணும் அதே உணவைத்தான் நானும் உண்கிறேன். உங்களைக் காயப்படுத்தும் அதே ஆயுதங்கள் என்னையும் காயப்படுத்தும். உங்களைப்போலவே எனக்கும் நோய்களும் வரும். உங்களைக் குணப்படுத்தும் மருந்து என்னையும் குணப்படுத்தும். உங்களுக்காக வருகின்ற வசந்தகாலமும், கோடையும் எனக்கும் சேர்த்தே வருகின்றன. என் உடலைக் குத்தினால் உம்மைப்போலவே எனக்கும் ரத்தம் கசியும். உம்மைச் சிரிக்கச் செய்பவை என்னையும் சிரிக்கச் செய்யும். நீவிர் விஷம் ஊட்டினால் நான் சாகத்தான் செய்வேன். ஏனெனில் நானும் உம்மைப்போலவே மனிதப்பிறவியே! நீங்கள் எம்மைத் துன்புறுத்தினால் நான் பழிவாங்கக்கூடாதா? நானும் உம்மைப்போல் ஒரு மனிதனே! உமக்குப் பொதுவான எல்லாம் எனக்கும் பொதுவாகவே இருக்கின்றன..." என்று ஷைலாக்கின் வாதங்கள் நீள்கின்றன.

"Hath
not a Jew eyes? hath not a Jew hands, organs,
dimensions, senses, affections, passions? fed with
the same food, hurt with the same weapons, subject
to the same diseases, healed by the same means,
warmed and cooled by the same winter and summer, as
a Christian is? If you prick us, do we not bleed?
if you tickle us, do we not laugh? if you poison
us, do we not die? and if you wrong us, shall we not
revenge? If we are like you in the rest, we will
resemble you in that. If a Jew wrong a Christian,
what is his humility? Revenge. If a Christian
wrong a Jew, what should his sufferance be by
Christian example? Why, revenge. The villany you
teach me, I will execute, and it shall go hard but I
will better the instruction"

அன்று யூத இனம்! இன்று தமிழினம்! இனத்தால், மொழியால் தமிழனாய் இருக்கும் ஒரே பாவத்துக்காக ஈழத்தில் அழிக்கப்படும் தமிழினத்திற்கு இந்த வரிகளைப் பொருத்திப் பாருங்கள்! தானாடாவிட்டாலும் தன் சதையாடவில்லையா நமக்கு? வாழ்வுரிமை அனைத்தும் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட ஓர் இனத்துக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

குறைந்தபட்சம் நம்மால் ஆகக்கூடியது சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலைகளுக்குப் பங்காளியாய் நின்றிருந்த காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து வேரறுப்போம். பதவி சுகத்தில், அதிகாரப் பசியில் , ஆனிப்பொன் மஞ்சத்தில் மல்லாந்திருப்பதற்காய் இன அழித்தொழிப்புக்கு காங்கிரஸின் காலை நக்கித் துணைநின்ற திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!

திங்கள், 4 ஏப்ரல், 2011

நான்...கிரிதரன்! - 1


ட்ரம்மில் அடுத்த லோடு தோல்களை ஏற்றிக் கொண்டிருந்தான் முரளி. சுறுசுறுப்பான பையன். மதியம் ஒரு மணியில் தொடங்கி இரவு மணி இரண்டு ஆகியும் துறுதுறுவென்று வேலை செய்துகொண்டிருக்கிறான். எனக்கு கண்கள் இரண்டும் கோவைப்பழமாகச் சிவந்து எரிந்துகொண்டிருந்தன. தொடர்ந்து முப்பத்தி ஆறு மணி நேரமாக ரூமுக்கே போகாமல் கண்டினியூவஸ் ஷிப்ட். மதியம் தின்ற அரை வேக்காட்டு லெமன் சோறு செரிக்காமல் வயிற்றோடு யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது.

ஓரமாய் வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். கொஞ்சம் என் முன்கதைச் சுருக்கத்தைச் சொல்லி விடுகிறேன்.

அது சென்னையின் ஒதுக்குப்புறமாக குரோம்பேட்டைப் பகுதி நாகல்கேணியில் இருந்த ஒரு சின்ன லெதர் ஃபேக்டரி. பதப்படுத்தப்பட்ட தோல் அதாவது ரா மெட்டீரியலை பர்ச்சேஸ் செய்து அதன் அடுத்தகட்ட ப்ராசஸை மட்டும் எடுத்துச் செய்யும் ஒரு ஜாப் வொர்க் யூனிட். இரவு பகல் இருபத்திநாலு மணிநேரமும் மூன்று ஷிப்டுகளை ஓட்டினால்தான் போட்ட முதல் கைக்குத் திரும்ப வரும். அரசாங்கத்தின் பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டின் கிடுக்கிப்பிடிகளால் தோல்பதனிடும் தொழில் நசித்துப் போய்க் கொண்டிருந்த காலகட்டம்.

நான் கிரிதரன். தஞ்சை மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, முட்டிமோதி ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் லெதர் டெக்னாலஜி படித்துமுடித்து இப்போது ஆயிரத்தி எண்ணூறு ரூபாய் சம்பளத்துக்கு இந்தக் கம்பெனியில் ட்ரெய்னீ டெக்னீஷியனாகச் சேர்ந்து நாற்பத்தியிரண்டு நாள்களாகின்றன.வீட்டில் இருந்து வாங்கிவந்த எட்டாயிரம் ரூபாயை வைத்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்து நானும் என் நண்பனும் தங்கி இருக்கிறோம்.

இருபத்தியிரண்டு வயதில் எனக்கு வாழ்க்கை புரிய ஆரம்பித்திருக்கிறது. எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என் பெற்றோர் எனக்கு வறுமையைக் காட்டியதில்லை. ஓரளவு மதிப்பெண்களுடன் வாணியம்பாடியின் அந்த தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் லெதர் டெக்னாலஜி சேர்ந்தபோது என்னை பயமுறுத்திய இரண்டு விஷயங்கள் ஆங்கிலம், மிக சகஜமாய்ப் பழகும் பெண்கள். இரண்டுமே எனக்குக் கைவரும்போது நான் இறுதியாண்டில்! பிடிவாதன், மூர்க்கன், நினைத்ததை எப்பாடுபட்டாவது அடையவேண்டும் என்ற வெறியுடையவன். ஐந்தரை அடி உயரம், கருப்பு நிறம், லேசான திக்குவாய். இதுதான் நான்.என்னைப்பற்றி இன்னும் நீங்கள் போகப்போகத் தெரிந்து கொள்வீர்கள்.

ஜெனரல் ஷிப்ட் என்றுதான் பேர். எட்டுமணிக்குப் போனால் ரூமுக்குத் திரும்ப இரவு பதினோரு மணியாகிவிடும். மடிப்புக் குலையாத உடுப்புடன் வேலை, பல ஆயிரங்களில் சம்பளம் என்றெல்லாம் கனவுகளோடு எஞ்சினியரிங் காலேஜுக்குள் நுழைந்த நாட்கள் மனதில் புகைபடிந்த பழைய புகைப்படம் போல் ஆகிவிட்டன. கம்பெனிக்குள் நுழைந்தவுடனேயே மாற்று உடுப்புக்களை போட்டுக்கொண்டு அன்றைய லோடினை ட்ரம்மில் ஏற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்யவேண்டும். ட்ரம்மில் ஓட்டுவதற்கான கெமிக்கல்களை செலக்ட் செய்து அவற்றை தனித்தனி பக்கெட்டுகளில் ஊற்றி மிக்ஸ் செய்து ட்ரம்மில் ஏற்றப்பட்ட தோலுடன் கலந்துவிட்டு, அடுத்தடுத்து க்வாலிட்டி கண்ட்ரோலுக்காகக் காத்திருக்கும் தோல்களைப் பார்க்க ஆரம்பித்தால், முடிப்பதற்குள் ட்ரம் ஓடி முடிந்திருக்கும். இறக்கி அவற்றைக் காயவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். மீண்டும் அடுத்த லோடு, அடுத்த ட்ரம், கெமிக்கல்கள்.

நான் படித்த லெதர் டெக்னாலஜி துறையில் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்த காலகட்டம். எப்படியோ முட்டிமோதி இந்த கம்பெனியில் வேலையில் சேர்ந்தாகிவிட்டது. இப்படியே இன்னும் இரண்டு வருடங்களை ஓட்டினால் அடுத்தடுத்து சின்னச்சின்னதாக வளர்ச்சிகள், அடுத்தடுத்த கம்பெனி... முப்பது வயதை நெருங்கும்போது ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்தாயிரத்தைத் தொடும் சம்பளம்... யோசிக்கவே அயர்ச்சியாய் இருந்தது. எத்தனை கனவுகள்! எல்லாம் கசங்கிப்போய் இன்று இந்தக் கம்பெனியில்..... படிப்பதற்காக வாங்கிய மூன்று லட்சம் ரூபாய் கடனும், அதற்கான வட்டியும் நினைவுகளில் வந்துவந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றது

எனக்கு வாய்த்த ஷிப்ட் சூப்பர்வைசர் ஆனந்தன் என்கிற சனியனின் டார்ச்சர் வேறு. தலையில் கருங்கல்லைத் தூக்கிப்போட்டுவிடலாமா என்று தோன்றும். சுமார் இருபது பேர் வேலைபார்க்கும் இந்த கம்பெனியில் அவன் கண்ணுக்கு நான் மட்டும்தான் உறுத்துகிறேன் போல! டிப்ளமோ படித்துவிட்டு சூபர்வைசராக இருக்கும் அவன் வேலைக்கு டிகிரி படித்த நான் சவாலாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்று இல்லைதான். கூடுதலாக இன்னொரு காரணமும்....

பத்மினி!

நாட்டுக்கட்டை, நாட்டுக்கட்டை என்பார்களே, இவளைப்பார்த்தால் அதன் முழு அர்த்தமும் விளங்கும். கருந்தேக்கு மரத்தில் கடைந்தெடுத்த சிற்பம்போல் இருப்பாள். இருபது வயது. கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆகிறது. புருஷன் குடிகாரன். இரண்டு பாட்டில் சாராயம் இருந்தால் பெற்ற தாயாரைக்கூட விற்றுவிடுவான். பத்மினியின் இரவுகள் கண்ணீரில் மிதந்தன.

நான் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த நான்காம் நாளில் பத்மினி என்னை அவளுக்குள் உறிஞ்சிக்கொண்டாள். அவள் தாபத்திற்கு நானா, இல்லை என் காமத்துக்கு அவளா என்று தெரியவில்லை. ஸ்டோர் ரூமிலும், மொட்டைமாடி இரவுகளிலும், அவளது ஒதுக்குப்புறக் குடிசையிலும் முப்பது சொச்சம் நாட்கள் கரைந்து காணாமல் போயின.

சிகரெட்டை காலின்கீழ் நசுக்கி உள்ளே நுழைந்தேன்.

என்னைப் பார்த்தவுடன் ஏதோ எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பத்மினி அருகே வந்தாள்.

ஒரு சின்ன பக்கெட்டில் அந்த லோடுக்குத் தேவையான கெமிக்கல்களை எடுத்து பத்மினியிடம் நீட்டினேன். பக்கெட்டை வாங்குவதற்குப் பதிலாய் புடவை முந்தானை விலகி அருகில் வந்து "என்ன இன்னைக்கு கண்டுக்கவே மாட்டேன்கிறீங்க?" என்று லேசாய் உரசினாள். சட்டென அவளைத் தள்ளி விட்டேன். அவள் முகம் சுருங்கியது. சட்டென அவள் முகம் வாடியதைப் பார்த்து.. “முப்பது மணி நேரம் தொடர்ந்து வேலை பாத்திட்டிருக்கேன்.. புரியாம உரசுறியே.."

"புரிஞ்சிதான் உரசினேன்..." என்று முணுமுணுத்துக்கொண்டே அவள் நகர...
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்

கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து இன்றுவரை எனக்கு இருந்த ஒரே வடிகால் பத்மினிதான். என் கோபம், வெறி, மன அழுத்தம் எல்லாவற்றையும் இவள் உடலில்தான் இறக்கி வைக்கிறேன். அன்புக்கும் பகிர்தலுக்கும் ஏங்கும் ஜீவன். கிடைத்தவுடன் கன்றுக்குட்டிபோல துள்ளிக்குதிக்கிறாள். 'அவளைப்போய்த் திட்டி...ச்சே...'

அடுத்தடுத்து ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்து முடித்து நிமிர்ந்தேன். இன்னும் அரைமணிநேரம் ஓய்வெடுக்கலாம். 'சரி...பத்மினியையாவது சமாதானப்படுத்தலாம்' என்றெண்ணி...

"பத்மினி... எனக்கு டீ எடுத்துட்டு வா" என்றேன்

டீ கொண்டுவந்தவளோடு பேசிச் சிரித்துக் கொண்டே ஊதிக்குடிக்கத் தொடங்கினேன்.

"என்னடி மூஞ்செல்லாம் இன்னிக்கு ரொம்ப பளபளப்பா இருந்திச்சி. புருஷன் செமையா கவனிச்சானோ!" என்று அவளை வம்பிழுத்தேன்.

"அவன் கிழிச்சான். நாலு கிளாஸ் சாராயத்தை எறக்குனா அவனுக்கு எது எங்க இருக்குன்னே தெரியாது... அப்புறம் என்னத்தைப் பண்ணி...."

லோடு ஆர்டருக்கு வெளியே போயிருந்த ஷிப்ட் சூபர்வைசர் ஆனந்தன் உள்ளே நுழைந்தான். பத்மினியை மடக்க முயன்று தோற்றதால் ஏற்கனவே அவனுக்கு இருந்த இயலாமையின் எரிச்சல் இப்போது எங்கள் இருவரையும் சேர்ந்து பார்த்ததில் அவனுக்கு அதிகமாகி இருக்கவேண்டும்

"ஏய் கிரி இங்க வா."

ரூமுக்குள் கூப்பிட்டவனை எரிச்சலாய் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

"எத்தனாவது லோடு ஓடிட்டு இருக்கு"

"மூணாவது லோடு இப்பத்தான் சார் ஏத்தியிருக்கேன். இன்னும் டூ அவர்ஸ் ஆகும்"

"வேலையப் பாக்காம என்ன அவகிட்ட புடுங்கிகிட்டு இருக்கே? எப்ப பாத்தாலும் கைல புடிச்சிக்கிட்டே திரிவியோ?"

எனக்கு சுர்ரென்று ஏறியது. கையில் இருந்த டீ தம்ளரை அவன் முகத்தில் விசிறினேன். சுடச்சுட அலறினான்.

"ங்கோத்தா. சூபர்வைசர்னா அந்த வேலைய மட்டும் புடுங்கு போதும். என் வேலைய நான் ஒழுங்கா செய்யலன்னா அத மட்டும் கேளு. நான் எவகிட்ட படுக்கிறேன், எவகிட்ட இளிக்கிறேன்னு மாமா வேலை பாக்குற வேலையெல்லாம் வேணாம். போடா நீயும் உன் கம்பெனியும்"

சூபர்வைசர் ரூமை விட்டு வெளியே வந்த என்னை பத்மினி திகிலாய்ப் பார்த்தாள். என் பேகை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்.

(பயணம் தொடரும்...)

வியாழன், 31 மார்ச், 2011

விலக்கப்பட்ட கல்லே வீட்டுக்கு மூலைக்கல்லாயிற்று ( வைகோ பற்றிய பார்வை)


தமிழக அரசியல்களம் முன்னெப்போதையும் விட பல விசித்திரக்காட்சிகளைக் கண்டு வியந்து நிற்கிறது.  தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக்கூட்டணியல்ல, வெறும் கொள்ளைக்கூட்டணியே என்பதை பிரதான அரசியல்கட்சிகள் அனைத்துமே மெய்ப்பித்து அம்மணமாகி நிற்கின்றன. ஒருபுறம் "காங்கிரஸ் செய்வது நியாயமா?" என்று வீராவேசத்துடன் முழங்கி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக ஓர் ஓரங்க நாடகத்தை நடத்தி திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, தன்மானம் என்கிற எல்லாவற்றையும் உதறிப் போட்டுவிட்டு பதவி என்னும் கோவணத்துக்காக அலைகிறார் 'கலைஞர்' கருணாநிதி.

தன்னை நம்பி உடனிருக்கும் கூட்டணிக்கட்சிகளைக்கூட துச்சமாகத் தூக்கியெறிந்து என்றுமே தானொரு தான்தோன்றித்தனமான, அகங்காரம் பிடித்த தற்குறித்தனமான தலைவிதான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே இரவில் டிஸ்மிஸ் செய்தும், சுப்பிரமணியசாமிக்கு மகளிர் அணி 'ஷோ' காட்டியதும், இன்னபிற அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்களையும், சர்வாதிகாரத்தையும் கைக்கொண்டு இன்னும் மிச்சமிருக்கும் 'மைசூர் திவான் பங்களாவில் அரண்மனை வைத்தியம் பார்த்தவரின் பேத்தி' என்கிற 'கெத்'தில் நிற்கிறார் ஜெயலலிதா.

இந்த இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் மாற்றாக வேறு யாரும் இல்லையே என்று புழுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு தற்காலிக வடிகாலாய் வந்து சேர்ந்தார் விஜயகாந்த். நீண்ட நெடுங்காலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு மல்லுக்கட்டியதில் அலுத்துப்போய் அவ்வப்போது சுகன்யாக்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டதும் சலித்துப்போய் இறுதியாக அவர் கரைசேர்ந்த இடம் அரசியல். மாமண்டூரில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைத் துவங்கி 'தூய்மை'யான பொதுவாழ்வுக்கு அடித்தளம் போட்டுக்கொண்டு நுழைந்தார். பக்கத்தில் பிரேமலதாவையும், அவர்தம் இளவலார் சுதீஷையும் வைத்துக்கொண்டே கூச்சநாச்சமின்றி கருணாநிதியின் குடும்ப அரசியலை எதிர்த்து கொஞ்சகாலம் லாவணி பாடவும் செய்தார். எத்தனைகாலம்தான் 'சுட்டி சுட்டி உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி' என்று பாடிக் கொண்டிருப்பது?! தனி ஆவ்ர்த்தனமெல்லாம் இனி கவைக்குதவாது என்றுசொல்லி மூட்டையைக் கட்டிக்கொண்டு போயஸ் கார்டனுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டார்.

இவர்களில் இருந்து எந்த வகையில் மாறுபடுகிறார் அல்லது எந்தெந்த வகைகளில் ஒன்றுபடுகிறார் வைகோ என்கிற அரசியல்வாதி?

மறுமலர்ச்சி திமுக என்ற கட்சியைத் துவங்கிய போதிலிருந்தே அந்தக்கட்சிக்கான சவக்குழியை கூடிய சீக்கிரம் வெட்டிவிட வேண்டும் என்கிற குறிக்கோளில் 'ஓடமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்கு' போல அல்லும் பகலுமாக அயராது பணி செய்துவரும் கருணாநிதி, 'பகையாளிக் குடியை உறவாடிக் கெடு' என்கிற வித்தைகளையெல்லாம்கூட செய்து பார்த்தார். 2001 தேர்தலிலும், 2006 தேர்தலிலும் அவர் ஆடிய சதுரங்கத்தில் வெட்டுப்படும் குதிரையானார் வைகோ.

தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்தக்கட்சியும் சமரசங்களைத் தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலையில் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறு வழியின்றி போயஸ் தோட்டத்தில் சரண்புக வேண்டிய இழிமைக்கும் தள்ளப்பட்டார். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று தேவை என்று இன்றைய நிலையில் ஏற்பட்டிருக்கிற ஒரு வெற்றிடம் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருக்கவில்லை.

தனித்து நின்றே தனது கட்சியைக் காபந்து செய்ய வேண்டும் என்பது பெரியளவில் மக்களிடம் செல்வாக்கு இல்லாத நிலையில் சாத்தியமில்லை. மேலும் கட்சியில் அவருடன் இருந்த சாறுண்ணிகளும், ஒட்டுண்ணிகளுமான எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்களின் 'காயசண்டிகை'ப் பசிக்கும் தீனி போட வேண்டிய கட்டாயம்.

எனவே கூட்டணி அரசியல் சகதியில் அவரும் தாராளமாகப் புழங்கியவர்தான்... மறுக்கவில்லை. அவரது வார்த்தைகளிலேயே சொல்லப்போனால் காட்டாற்று வெள்ளத்திலே சந்தன மரங்களும் அடித்துச் செல்லத்தான் படும் என்கிற தமிழக அரசியல் சூழலில் கரையொதுங்க வேண்டிய நிர்ப்பந்தங்களிலும் அவருக்கென்று சில தனித்தன்மைகள் இருந்தன. மற்றெந்த அரசியல் தலைவர்களிடமும் இல்லாத அந்தத் தன்மைகள்தான் இன்று அவரைத் தனித்துக் காட்டி இருக்கின்றன.

1) முதலானதும் தலையாயதுமானது வாரிசு அரசியலை இதுவரை வைகோ முன்னெடுக்கவில்லை. அவரது பிள்ளைகளான துரைவையாபுரியையும், கண்ணகியையும், தடா சட்டத்தில் சிறைவாசமிருந்த தம்பி ரவிச்சந்திரனையும் இதுவரை கட்சிக்கு பட்டாதாரர்களாக மாற்றவில்லை.

2) இதுவரை மத்திய அரசில் பங்கேற்று மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்குபோதெல்லாம் அவற்றைப் புறம்தள்ளி தனது சகாக்களுக்கே பதவியைத் தாரைவார்த்தவர் வைகோ.

3) கூட்டணிக்கேற்றவாறு கொள்கைகளை மாற்றிப்பேசும் வழக்கமும் அவரிடமில்லை. இதுவரை புலிகள் ஆதரவுக் கொள்கையையோ, சேது சமுத்திரத் திட்டத்தின் பாலான தமது உறுதிகளையோ மாற்றிக்கொள்ளவில்லை.

4) ஸ்டெர்லைட் ஆலைப்பிரச்சினையில் எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் இன்று அவரது அரசியல் எதிகாலத்துக்கு சவாலாக வந்தபோதிலும் கூட தனது உறுதியை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்று ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் அந்த நிர்வாகத்தால் செய்யப்பட்ட நிலையில் இன்றளவும் சட்டரீதியாக அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர் வைகோ ஒருவர் மட்டுமே.

5) முல்லைப்பெரியாறு அணைக்கட்டு தொடர்பான போராட்டங்களிலும் முன்னிற்பவர் வைகோ மட்டுமே.

6) நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார்மயமாக்க முயற்சிகள் நடந்தபோது அதனைத் தடுத்து நிறுத்திய காரணகர்த்தாக்களில் வைகோ முக்கியமானவர்.

இப்போது அரசியல்களத்தில் அவமானப்பட்டு நிற்கும் நிலையில், இருபெரும் திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கி இருக்கின்றது.

வைகோவின் அரசியல் இப்போது துவங்குகிறது எனக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்தலுக்குப் பிறகும் அவரிடம் மிச்சமிருக்கும் தொண்டர்கள் இனி எக்காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பலாம்.

இந்த தொண்டர் பலத்தை வைத்து அவர் தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையைத் துவங்கிட வேண்டும் என்பதே தமிழுணர்வாளர்களின் எதிர்பார்ப்பு. சரியான திசையில் பயணிப்பாரா வைகோ?

"வீடுகட்டுவதற்கு வேண்டாம் என்று விலக்கிவைக்கப்பட்ட கல் மூலைக்கு தலைக்கல்லாயிற்று" என்கிறது விவிலியம்..(மத்தேயு சுவிசேஷம் 21)

பின்குறிப்பு : இந்தக் கட்டுரை ஆக்கத்திற்கு பெருமளவு துணைபுரிந்த என் இனிய நண்பரும், என் வாழ்வில் பகிர்தலுக்கும், புரிதலுக்குமாக இருக்கும் மிகச்சில சுமைதாங்கிகளில் ஒருவருமான கா.அன்புவேலுக்கு என் நன்றிகள்

செவ்வாய், 29 மார்ச், 2011

திசைமறந்து திரியும் பறவையொன்றின் புலம்பல்கள்...


அலங்காரங்களின்றி 
எழுத நினைத்தேன்
ஒரு கவிதையை
கண்ணீராலும் துக்கத்தாலும்...
வழியும் கண்ணீரில்
காகிதக் கப்பலாய் என் காதல்...


வரிகளைத் தேடும் 
வலிமையில்லை


பின்னொரு பொழுதில்


திசைமறந்து திரியும் 
பறவையொன்றின் புலம்பல்களைக்
கோர்த்து
எழுதத் துவங்கினேன்
ஒரு கவிதையை.
குஞ்சுகளைத் தொலைத்த 
குருவியொன்று
ஒப்பாரி வரிகளுக்கு
ஒப்பனை செய்ய முன்வந்தது...


எழுதி முடித்த கவிதையில்
மிதந்து கொண்டிருந்தன
கனவுகளின் சடலங்கள்

வியாழன், 24 மார்ச், 2011

கொஞ்சம் ரசிக்க... கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர்....


கவிதை எழுதி ரொம்பநாளாச்சேன்னு கை அரிச்சி ஒக்காந்திருந்தேன். இன்னிக்குன்னு பாத்து கூகிள் பஸ்ஸுல கவிதை மழையா பொழிஞ்சிட்டு இருந்தாரு அண்ணன் கேஆர்பி.செந்தில். அவரோட கவிதைய பாத்தவொடனே அப்பிடியே எதிர்க்கவிதை பொங்கிடுச்சி! எதிர்க்கவிதை போட்டுட்டு பொசுக்குன்னு வந்துரலாம்னு பாத்தா "என்ன கைய புடிச்சி இழுத்தியா"ன்னு இழுத்து வெச்சி வம்பளந்தாரு நண்பர் பலாபட்டறை சங்கர். மனுசன் பின்னி பெடலெடுத்துட்டாரு. கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர் அப்டீன்னு மூணுமணி நேரம் போனதே தெரியல

நண்பர்களும் நாங்க அடிச்ச கூத்தை ரசிக்கணும்ல! அதான் இந்தப் பதிவு

krpsenthil kumar - Buzz - Public

சொல்லிவிட்டு பெய்வதில்லை
எப்போதும் மழை ..
அது காதலைப்போல்
வரமாய் வரும் ..

இப்போதும் பெய்கிறது
பெருமழை அவ்வப்போது,
உடன் நனைய
நீதான் இல்லை...

உடைந்து அழும் கண்களின்
உப்பு
மழையில் கலந்து
கடலெல்லாம் உப்பாச்சு..

10 people liked this - subramanian rajaraman, Karthik L (LK), ४१ தோழி १४, எஸ். கே, ஓம் அருணையடி ஓம் and 5 others

nesamitran online - ஆஹா ...

இந்த நரகத்தில் நான் மட்டும் உழலுவதோன்னு கடலெல்லாம் உப்பாக்குறான்யா/கடலளவு அழுகுறான்யா கவிஞன் :)11:54 am

subramanian rajaraman -

எதிர்கவுஜ எழுதி நாளாச்சு... அதுனால

கண்ணு ரெண்டும் கொளமாச்சு
கடலெல்லாம் உப்பாச்சு
காஞ்சி போன நெலமெல்லாம்
கழனியா மாறிப்போச்சு

கொஞ்ச மழை பேஞ்சாலும்
கூதலில ஒன் நெனப்பு
கோரமழை பேயிறப்போ
கொமரி உன்னை காங்கலியேEdit12:42 pm

ஷங்கர் Shankar - எதிருக்கு எதிர்

வானம் பார்த்த பூமியிலே
பெஞ்ச மழை ஈரத்துல
விளைச்ச கீர காசக் கொண்டு
பெத்த புள்ளை பட்டணம் போயி
காதலிக்கான கண்ணீருல
கடலெல்லாம் உப்பாச்சுன்னு
கவித ஒன்னு எழுதினானே
பாடுபட்டு அனுப்பிவெச்ச
ஆத்தாளோட வேர்வை
கரிக்காத காரணமென்ன
ராஜாராமா கரிக்காத காரணமென்ன?12:56 pm

subramanian rajaraman -

ஆத்தாவோட வேர்வையெல்லாம்
ஆனிப்பொன் தங்கமய்யா
அவ மனசு பூக்கணும்னு
அச்சுவெல்ல மருமவன்னு
ஆறு கொளம் ஏரி கரை
அத்தனையும் வல போட்டு
ஆப்புட்டுது கன்னிமீனு
அசந்திருக்கும் நேரத்துல
வலையறுத்து பாஞ்சதென்ன
வாழ்க்கையெல்லாம் மாஞ்சதென்ன

வானமெல்லாம் பூத்திருக்க
வறண்ட நெஞ்சு இருட்டடிக்க
எசப்பாட்டு நாம்படிக்க
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா
சங்கரனே
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா?Edit1:09 pm (edited 1:10 pm)

ஷங்கர் Shankar -

Yes Sir
Yes Sir
Three Bags Full! :))1:11 pm

subramanian rajaraman -

 புரியலயே?Edit1:15 pm

ஷங்கர் Shankar -

இக்கட்டான நிலைமைல மாட்டிக்கிட்டா இப்படி சொல்லிட்டு எஸ்கேப்பாகறது என் ஃபார்முலா! :))))))1:16 pm

subramanian rajaraman -

அடடா.. அப்பிடியே கொஞ்சநேரம் கண்டினியூ பண்ணினா எடுத்து பதிவா போட்ரலாம்னு பாத்தேனே? :)Edit1:17 pm

ஷங்கர் Shankar -

பத்து மாசம்தான் சொமந்து
ரத்தம் வத்தப் பால் கொடுத்து
குத்தம் கொற இல்லாம
நான் வளத்த என் புள்ள

பத்து நாளு முன்னாடி
பளபளன்னு சேலகட்டி
பல்லக் காட்டி வந்தவ
பறிச்சிட்டுத்தான் போனாளே

சுள்ளி சொமந்த தலையிலே
கள்ளி வந்து போட்ட மண்ணு
கொள்ளி வரை மறக்காதே

என்ன செய்வேன் ராஜாராமா
யார் தடுப்பா ராஜாராமா1:36 pm

subramanian rajaraman -

பெத்ததொரு தாயாரு
சித்தமெல்லாம் கலங்கி நிக்க
குத்தமென்ன நாஞ்செஞ்சேன்
சத்தமாக சொல்லுமய்யா

வாழக் குருத்தாட்டம்
வளந்திருக்கும் பொண்ணொருத்தி
வாக்கப்பட்டு வந்து நின்னா
வாண்டாமுன்னா சொல்லப் போறா

செல்ல மவன் வாழ்க்கையில
செல்வமெல்லாம் நெறஞ்சிருக்க
குத்து வெளக்கு ஒண்ணை
கொண்டுவந்தா கோவமென்ன

மாமியாரும் மருமவளும்
மனம் நெறஞ்சி கதைபேச
கொணவதியா வரணுமின்னு
கொண்டிருந்தேன் கனவு ஒண்ணு

கனவுல வெதச்ச வெத
கருகித்தான் போகுமின்னு
கண்டேனா பாவிமவன்
கசங்கித்தான் போனேனய்யா
சங்கரரே
கசங்கித்தான் போனேனய்யாEdit1:50 pm

ஷங்கர் Shankar -

அடியாத்தீ என்று சொல்லி
நாலு வெரலு மடக்கி
மோவாயி தாங்க நாம் பாத்த
படமொன்னு டிவியிலே
வந்துச்சே குடும்ப கொடுமையெல்லாம்
சொல்லிச்சே,

மரம்போல நாங்கிடந்து
மந்திகத கண்ட நேரம்
புத்தியில ஏறலியே
புள்ள இப்படி பண்ணுமின்னு

அந்திசாயும் நேரம்தானே
என் புள்ளையும் வந்தானே
கண்ணீரத் தொடச்சி
சொன்னானே குத்திக் கொன்னானே

பக்கத்து வீட்டு கோவால நான்
கட்டிக்கிட்டா போதுமம்மா
மருமவ தொல்லை ஏது
நீ கவலப்படவேணாம்மா

என்ன செய்வேன் ராசா ராமா
சொல்லு என்ன செய்வேன் ராசாராமா?2:12 pm

subramanian rajaraman -

அய்யய்யோ சங்கரரே
அபச்சாரம் அபச்சாரம்
ஆம்பளையும் ஆம்பளையும்
அணைச்சிக்கிடும் குடித்தனமும்
அடுக்குமா சாமிக்கும்?

வாலைக் கொமரிப்பொண்ணு
வரிசைகட்டி நின்னிருக்க
வந்த பொண்ணு போனா என்ன
வந்திடுவா அடுத்தொருத்தி

வாழ்க்கையில காதலெல்லாம்
வாசல் தாண்டிப் போனாலும்
வசந்தங் கெட்டு போவாதின்னு
வந்திடுச்சி புத்தி அய்யா

செவத்த தோலு பொண்ணொருத்தி
சிங்காரிச்சி வந்துநின்னா
சிலுத்துக்கிட்டு காதலிச்சேன்
செருப்படியும் வாங்கி நின்னேன்

அத்தமவ ஒருத்தி அழகான கருப்பட்டி
சித்தமதிர வைக்கும் செலமாரி நின்னிருக்கா
கத்துங் குயிலோச கானம் சொக்கவைக்கும்
கருத்த பொண்ணுகூட வாழ்க்க இனிச்சிருக்கும்Edit2:30 pm (edited 2:31 pm)

ஷங்கர் Shankar -

தேலிக்கை சொல்லாலே
மனம் கேளிக்கை அடையும் நேரம்
துடுப்பாட்ட காணொளியை
காண மனம் விழையுதே

அன்பான கேஆர்பி
இனி கவித எழுதலேன்னு
முடிவேதும் எடுக்கும் முன்னே

இம்புட்டு நேரமா இழுத்திழுத்த
இந்தக் கத முடிச்சிக்கலாம்
நான் ஆவறேன் அப்பீட்டு
அதுவே நீங்களும் ரிப்பீட்டு!
யப்பா சாமி முடியல!
வெளிலதான் என்னா வெயிலு!
:)))))))))))2:32 pm (edited 2:33 pm)

subramanian rajaraman -

இழுத்துவெச்சி கதையளந்த
இனிய நண்பர் சங்கரரே
இப்போ போயி நாளைவாரும்
எசப்பாட்டு பாடிடலாம்

எசப்பாட்டு தான் கேக்க
இங்க வந்து காது தந்த
எல்லாரும் நலம்வாழ
எஞ்சாமி காத்திருக்கும்

திங்கள், 21 மார்ச், 2011

கச்சத்தீவும் நமதே! கீழைக்கடலும் நமதே!! #DefeatCongress


காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து எதிர்வரும் 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரஸை மண்ணைக்கவ்வச் செய்யவேண்டும் என்று சிலநாட்களுக்கு முன் நானும் அண்ணன் கேஆர்பி.செந்திலும் பதிவுகளை வெளியிட்டிருந்தோம். எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்ப்பதிவுலத்தினரின் ஒத்துழைப்பு கிட்டவில்லை என்றபோதிலும், எதிர்பாராத திசைகளிலிருந்து இணைய நண்பர்கள் மூலம் ஆதரவு குவிகின்றது.

நானும், அண்ணன் கேஆர்பியும் இது தொடர்பான மேலதிகச் செயற்பாடுகளையும், நடைமுறைத் தந்திரங்களையும் பற்றி தொடர்ந்து நண்பரும் பதிவருமான கும்மியுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு முன்னெடுப்பு செய்து வருகிறோம். நண்பர் கும்மி ஏற்கனவே தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான இணையநண்பர்களின் முன்னெடுப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். நேற்று மாலை தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை முடித்துவிட்டு, மேற்கொண்டு, வரும் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிப்பது தொடர்பான கலந்துரையாடலை நடத்தலாம் என்று கூறியிருந்தார். அது தொடர்பானவற்றைப் பேசிமுடித்தபின் தியாகராயநகரில் , 'மே பதினேழு' இயக்கமும், தமிழக மக்கள் உரிமைக்கழகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த "தமிழக மீனவர் படுகொலையும், மக்களை திசை திருப்பும் சதியும்" என்கிற கலந்துரையாடலில் கலந்துகொண்டோம்.

மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ் வெப்துனியா இணைய இதழ் ஆசிரியர் கா.அய்யநாதன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பா.புகழேந்தி(வழக்கறிஞர்), கச்சத்தீவு மீட்பு இயக்கம் சீதையின் மைந்தன், பாரம்பரிய மீனவர் சங்கம் மகேஷ் ஆகியோரின் உரைகளின் சாராம்சத்தைத் தொகுத்துத் தருவதன் முலம் இந்திய நடுவண் அரசு தமிழனிடம் காட்டிவரும் மாற்றாந்தாய் மனப்பான்மையும், ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் என்கிற காவாலிக்கட்சி தமிழக மண்ணுக்கும், மானவாழ்விற்கும், மனித உரிமைக்கும் செய்துவரும் பச்சைத் துரோகங்களையும் ஓரளவு எடுத்துக்காட்ட முடியும் என்று நம்புகிறேன்.

மேற்சொன்ன நண்பர்களின் உரைகளிலிருந்து :

எந்த ஒரு மக்கள்பிரச்சினையும் அதன் அளவில் தீவிரமடையத் துவங்கும்போது ஆளும் மத்திய அரசு தன் கைக்கூலிகளான உளவுத்துறையினர், எலும்புத்துண்டுகளுக்கு எச்சில் ஒழுக நிற்கின்ற, ஊடகதர்மம் பிறழ்ந்த பத்திரிகையாளர்கள், போலி முற்போக்கு அறிவுஜீவிகள் ஆகியோர் மூலம் மக்கள்பிரச்சினைகளில் புதிய கதையாடல்களை பரப்புரை செய்து போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்கின்றது. அதே போலத்தான் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து கொல்லப்படும் கொடுமைகள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாறிப்போவதைப் பார்த்த நடுவணரசு, மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர், தடைசெய்யப்பட்ட இருமடி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துகின்றனர், அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். "தமிழக மீனவர்கள் பேராசையால் எல்லை தாண்டுகின்றனர்" என்று கொஞ்சம்கூட மனச்சாட்சியும், கூச்ச உணர்வுமின்றி தமிழக முதல்வர் கருணாநிதி சில மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது ஞாபகம் இருக்கும் ( லட்சக்கணக்கான கோடிகளுக்கெல்லாம் தனது குடும்பம் ஆசைப்படுவது 'ஞாயமான' ஆசையாகவும், அன்றாட பிழைப்புக்காக மீனவன் எல்லை தாண்டிச் செல்வது 'பேராசை'யாகவும் அவருக்குத் தோன்றுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. கொட்டுவது எப்போதுமே தேளின் குணம்! கொட்டாது என்று எதிர்பார்ப்பது நமது மடமை!).

ஆனால் மீனவர்களை அவர்களின் வாழ்வாதாரங்களிலிருந்து அப்புறப்படுத்துவது என்பது பன்னாட்டு முதலாளிகளிடம் தேசத்தைக் காட்டிக் கொடுப்பதற்கான அயோக்கியத்தனத்திற்கு மீனவர்களிடமிருந்து எவ்வித இடைஞ்சலும் வராமல் இருப்பதற்கான ஒரு யுக்தியாகவே மைய அரசால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனைப் புரிந்துகொள்ள முதலில் மீன்பிடித்தொழில் தொடர்பான சில தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கடல்பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்காக நார்வே அரசு இரும்பாலான சிறப்பு வலைகளைப் பயன்படுத்தத் துவங்கியது. மீனவர்கள் பயன்படுத்தும் சாதாரண வலைகள் கடலின் பாதி ஆழத்தோடு நின்றுவிடும். ஆனால் இப்படிப்பட்ட இரும்புவலைகள் கடலின் அடியாழம்வரை இறங்கிச்சென்று கண்ணிவெடிகளை அப்புறப்படுத்த உதவின. அதே சமயம் அந்த வலைகளில் மிக அதிகமான அளவில் மீன்களும் பிடிபட்டன். இந்த கூடுதல் உபயோகத்தைக் கண்டுகொண்ட மேலைநாடுகள்  தங்களுக்கான கடலுணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இவ்வகையான வலைகளை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தன. அளவுக்கு அதிகமாக இவ்வகை வலைகளைப் பயன்படுத்தியதால் இன்று மத்தியத் தரைக்கடல் பிரதேசமே மீன்வளம் இழந்து காணப்படுகின்றது. எனவே மேலைநாடுகள் தங்களது மீன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள புதிய கடல்பரப்புகளைத் தேர்வுசெய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின.

எனவே அவர்களின் பார்வை, வளம் மிகுந்த இந்தியக் கடற்பகுதியின் மீது திரும்பியது. இந்தியக் கடற்பகுதியில் குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக் நீரிணை பகுதிகளில் அவர்கள் மீன்பிடித் தொழிலை நடத்துவதற்கு பெரும் இடைஞ்சலாக உள்ளூர் மீனவர்களே இருப்பார்கள். அவர்களை மீன்பிடித்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால்...???

இந்தியாவில் இழுவைப்படகு மீன்பிடித்தொழில் :

மேலைநாடுகள் இருமடி வலைகளைப் பயன்படுத்த ஆரம்பித்த சிறிது காலம் கழித்து இந்தியக் கடல்பரப்பில் இருமடி வலைகளைப் பயன்படுத்துவதை இந்திய அரசே மீனவர்களுக்கு மானியங்களும் சலுகைகளும் கொடுத்து ஊக்குவிக்க ஆரம்பித்தது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இருமடி வலைகளையும் ட்ராலர்கள் எனப்படும் இழுவைப்படகுகளையும் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலைச் செய்ய மிகப்பெரும் அளவில் ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கடலுணவுத்தேவை வருடத்திற்கு ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் டன்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே அரசு மீனவர்களை மானியங்களும், சலுகைகளும் கொடுத்து ஊக்குவித்தது. ஆனாலும் மீன்வளம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு மீன்கள் குஞ்சு பொறிக்கும் பருவகாலத்தில் மட்டும் இருமடி வலைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமிழக மீனவர்களில் ஏறத்தாழ முப்பதுசத மீனவர்கள் மட்டுமே இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை நடத்தி வருகின்றனர். ஏனையோர் பாரம்பரிய மீன்பிடிப் படகுகளையே பயன்படுத்துகின்றனர்.

காலங்காலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின், நெடுந்தீவு, தலைமன்னார், யாழ்ப்பாணம் வரையிலும் சென்று மீன்பிடிப்பதும், இலங்கை மீனவர்கள் தமிழக எல்லையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதும் வழக்கமாகவே இருந்து வருகின்றது. இந்திய மீனவருக்குத் தேவையான மீன்கள் இலங்கைப் பகுதியிலும், இலங்கை மீனவருக்குத் தேவையான மீன்கள் இந்தியப்பகுதிகளிலும் பெருமளவு கிடைப்பதே இதற்குக் காரணம்.

புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் துவங்கியபின் சிங்களப்படைக்கு இயல்பாகவே தமிழக மீனவர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கத் துவங்கியது.தமிழக மீனவர்கள் மீதான அவர்களின் தாக்குதலும் பெருமளவில் நிகழ ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக்கொல்வதும், நடுக்கடலில் சித்திரவதை செய்வதும், அவர்களின் மீன்பிடிச் சாதனங்களை நாசப்படுத்துவதும் நின்றபாடில்லை.

கச்சத்தீவைக் கொடுத்த அயோக்கியத்தனம்:

இதற்கிடையில் கச்சத்தீவினை தாரைவார்த்துக் கொடுத்த அயோக்கியத்தனமும் சிங்களத்துக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. கச்சத்தீவானது பிரிட்டிஷார் காலத்திலும், அதற்கு முன்னும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான நிலமாக இருந்ததை பிரிட்டிஷ் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையில் ஆட்சி செய்த பண்டாரநாயகா குடும்பமும், இந்தியாவின் ஜவகர்லால்நேரு குடும்பமும் ஒன்றுக்கொன்று நட்பாக இருந்துவந்தன. நேருவுக்குப் பின்னரும் இந்த நட்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இந்திராவின் ஆட்சிக்காலத்தில், இலங்கையில் திருமதி.பண்டாரநாயக பிரதம மந்திரியாக இருந்துவந்தார். தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது செல்வாக்கு மக்கள்மத்தியில் குன்றியிருந்த நேரத்தில் இலங்கையில் பொதுத்தேர்தலுக்கான காலமும் வந்தது. மக்கள் மத்தியில் குறைந்துபோன தனது செல்வாக்கினை மீண்டும் உயர்த்திக்கொள்ள அவர் கச்சத்தீவினைப் பெற்று இலங்கையோடு இணைக்க முயற்சித்தார். அதற்குத்தான் ஏற்கனவே குடும்ப நண்பரான இந்திராகாந்தி இருக்கிறாரே?! சேதுபதி மன்னருக்கும், தமிழக மீனவர்களுக்கும் சொந்தமான கச்சத்தீவு இவர்கள் யாருடைய அனுமதியும் இன்றி சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஒரு (அ)சுபயோகத்தில் இலங்கைக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தாரைவார்க்கப்பட்டது. இது நடந்தது 28-06-1974-ல்.

இது தொடர்பான பாராளுமன்ற விவாதங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.என் தேவர், முகமது ஷெரீஃப் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று தெரிந்தும்கூட இந்திய அரசாங்கம் தமிழகத்துக்கு இந்த இரண்டகமான வேலையைச் செய்தது. இதற்கு தோதாக ஏற்கனவே கடல் எல்லையைக் குறிக்கும் வரைபடங்கள் திருத்தப்பட்டு, கச்சத்தீவானது இலங்கைக்குச் சொந்தம் என்று காட்டுமாறு வரைபடங்கள் மாற்றப்பட்டன.

கச்சத்தீவினைத் தாரைவார்க்கும் ஒப்பந்தம் எட்டாவது ஷரத்தின்படி இந்த ஒப்பந்தமானது அரசியல்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் இருவகைகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும். ஆனால் நாளது தேதிவரையிலுங்கூட இந்த ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படவோ, பாராளுமன்ற அவைகளில் ஒப்புதல் பெறப்படவோ இல்லை.

உதாரணமாக, நான் ஒருவரிடம் அவரது நிலத்தை கிரய ஒப்பந்தம் செய்து வாங்கிக் கொள்கிறேன் என்று கொள்வோம். அந்த ஒப்பந்தம் முறையாக குறிப்பிட்ட பதிவாளர்/சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டால்தானே அந்த கிரய ஒப்பந்தம் சட்டப்பூர்வமானதாக இருக்கும்? அப்படி பதிவு செய்யப்படவில்லையென்றால்...?

ஆக, ஒரு திருட்டுத்தனமான, அயோக்கியத்தனமான, தமிழக மக்களின் நலனை அழிக்கக்கூடிய ஒரு ஒப்பந்தம் இன்று வரையிலும் அரசியல் சாசனத்துக்கு விரோதமான முறையில் இருப்பதைக்கூட கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசின் காவாலித்தனத்தை என்னவென்று சொல்வது?

காலங்காலமாய்த் தமிழர்களுக்கு துரோகம் செய்துவரும் காங்கிரஸ் :

இப்படி பரம்பரை பரம்பரையாகவே காங்கிரஸ் கட்சியானது தமிழர்களுக்கு துரோகம் செய்தே வருகின்றது. இன்றும் சிங்களக் கடற்படை தமிழக மீனவனை சுட்டுக் கொல்வதற்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பது அதன் கள்ளமௌனத்தின் மூலமே வெட்டவெளிச்சமாகிறது.

தாங்கவொண்ணாக் கொடுமைகள் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து அவர்களை மாற்றுத் தொழிலை நோக்கி திசைமாற்றிவிட்டால், ஏற்கனவே அகோரப் பசியில் இருக்கும் பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களைக் கூப்பிட்டு ஆசை, ஆசையாக பந்தி வைக்கலாமே?

எல்லை தாண்டும் பிரச்சினை :

ஐக்கியநாடுகள் சபையின் வழிகாட்டுதல்களின்படி கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பவும், ஒருவேளை சந்தேகம் எழுந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் மட்டுமே செய்யவேண்டும். அதைமீறி அவர்களைக் காயப்படுத்துவதும், மரணம் ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்.

தனது சொந்த நாட்டு மீனவன் செத்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்ற ஆண்மைகெட்ட தேசத்துக்கு என்ன மயிர்பிடுங்கி இறையாண்மை இருக்க முடியும்? தன் பெண்டு, பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாத ஒரு குடும்பத்தலைவனை பேடி என்று சொல்லித்தான் எங்களுக்குப் பழக்கம்.

தம் மக்களை அநியாயமாகக் கொன்றுகுவிக்கக் கள்ளத்தனமாக துணைபோகும், கொன்று குவிக்கப்படுவதை விழிவிரிய வேடிக்கை பார்க்கும், தன் மக்களுக்குச் சொந்தமான சொத்தை திருட்டுத் தனமாக ஊரானுக்கு பட்டா போட்டுக்கொடுக்கும் காங்கிரச் கட்சியும், அரசும் நமக்குத் தேவைதானா?

தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும், உடலில் தமிழ்க்குருதி பாயும் ஒவ்வொருவனும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழ் இளைஞனும் குறைந்தது பத்து வாக்குகளையாவது காங்கிரஸுக்குப் போகாமல் தடுக்க வேண்டும்.
***************************************************

கூட்டம் முடிவடைந்த பின்னர் 'மே பதினேழு' இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியுடன் நானும் கேஆர்பி அண்ணனும் எமது இணைய நண்பர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது:

"தொகுதிக்கு பத்துபேர் இருந்தால்கூட போதும் தோழர். மிகத் தீவிரமான பிரச்சாரத்தின்மூலம் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸை மண்ணைக் கவ்வச் செய்யலாம். பத்து நூறாகவும், ஆயிரம், லட்சங்களாகவும் மாறும் நாள் தொலைவில் இல்லை. "நாம் தமிழர்" போன்ற இயக்கங்களுடனும் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம்"

என்றார் திருமுருகன்.

இன்னும் ஓரிரு நாட்களில் பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கம், தமிழ் தேசிய உணர்வுள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் இவர்களையும் சந்திக்க உள்ளோம். இணைய நண்பர்கள் மென்மேலும் களப்பணியாற்ற வரவேண்டுமாய் இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.

தொடர்புக்கு :

கேஆர்பி.செந்தில் - 8098858248
விந்தைமனிதன்( ராஜாராமன்) - 9500790916

" ஹே... பூதலமே! என் போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் அந்தப் போதினிலே"


Related Posts with Thumbnails