"சொல்கிறார்கள்:
'கிளியின் கூட்டைத்
திறந்துவிடு'
முரண்படுகிறேன்...
'உடைத்துவிடு'.
- காசி ஆனந்தன்
'கிளியின் கூட்டைத்
திறந்துவிடு'
முரண்படுகிறேன்...
'உடைத்துவிடு'.
- காசி ஆனந்தன்
2006 இல் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப்போர் மெல்ல மெல்ல அதன் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் அது பெரியளவு சலனத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஈழத்தின் கிழக்குப்பகுதி சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்ப்ட்டு பிறகு "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில் வடக்கு மாகாணத்தின் மீதான ஆக்கிரமிப்புப்போர் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலுங்கூட தமிழகம் எவ்வித சலனங்களும் இன்றியே இருந்தது. பூநகரி வீழ்ந்த 2008 ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் ஈழத்தின் பொதுமக்கள் உயிரிழப்பு பற்றிய தகவல்கள் ஊடகங்களின் வாயிலாக தமிழக மக்களைப் பரவலாகச் சென்றடையத் தொடங்கின.
பூநகரித் தளம் வீழ்ந்தபோது நான் மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்களோ என்ற ஐயம் எனக்குள் தலைதூக்கத் துவங்கியது. ஆனால் 2000 மாவது ஆண்டில் ஆனையிறவுப் பெருந்தள முற்றுகைப்போரில் புலிகள் காட்டிய கற்பனைக்கெல்லாம் விஞ்சிய வீரம் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தது. பூநகரியில் புலிகளின் பின்வாங்கல் யுத்தோபாயத் தந்திரங்களின் பாற்பட்டது என உறுதியாக நம்பத் தொடங்கினேன். பூநகரி வீழ்ந்த மிகச்சில வாரங்களுக்குள்ளாகவே கிளிநொச்சி முற்றுகை தொடங்கியது.
மிகக் கடுமையான ராணுவ முற்றுகைக்கு மத்தியில் மேதகு பிரபாகரன் அவர்களது மாவீரர்தின உரையாற்றல் நிகழ்ந்தது. அவரது மாவீரர்தின உரையை உலகமே உற்றுநோக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான் கவனித்தவரை ஏராளமான இளைஞர்கள் அந்த வருடத்தைய மாவீரர்தின உரையை மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். நானே எனது நண்பர்கள் சுமார் 20-30 பேருக்கு பிரபாகரனது 2008 ஆம் ஆண்டு மாவீரர் உரையினை இணையதளம் மூலமாக அனுப்பி வைத்திருந்தேன்.
அந்த சமயங்களில் என் சொந்த கிராமத்தில் இருந்து தினசரி 5 தொலைபேசி அழைப்புக்களாவது எனக்கு வரும்... "டேய் மாப்ள... என்னடா ஆச்சி இன்னைக்கி? நம்மாளுவ ஏதாச்சும் அடிச்சானுவளா? எப்படியும் நம்மாளுவ செயிச்சிருவானுவள்லடா? ஒனக்கு எப்டிடா தோணுது?" அவர்கள் குரலில் ஒரு எதிர்பார்ப்பும் பரிதவிப்பும் இருக்கும். உரையாடலின் இறுதியில் நிச்சயம் ஒரு வாசகம் இருக்கும். "நீ வேணா பாரேன் மாப்ள... நம்மாளுவ லேசுப்பட்டவனுவோ இல்ல... கண்டிப்பா ஏதோ ஒரு ஐடியாவோடத்தாண்டா இருக்கானுவோ! திருப்பி அடிக்கிற அடியில சிங்களப்பயளுவோ கொழும்பு போயித்தான் எட்டிப்பாப்பானுவோ" இப்படியாக...
நம்பிக்கையின் ஆறுதலும், பரிதவிப்பின் ஆற்றாமையுமாக நாட்கள் நகரத் தொடங்கின. பூநகரித் தளத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாளொன்றுக்கு சுமார் 18 மணி நேரங்களை நான் இணையத்திலேயே கழிக்கத் தொடங்கினேன். ஆயிற்று... புத்தாண்டின் துவக்கத்திலேயே கிளிநொச்சி வீழ்ந்தது என்ற செய்திகள் இணையத்தில் மின்னத் தொடங்கிய சில விநாடிகளிலேயே அந்த எழுத்துக்கள் மெல்ல என் விழிகளில் இருந்து மறையத் தொடங்கின... வழிந்து கொண்டிருந்த நீர்ப்படலம் என் விழிகளில் இருந்து காட்சியை மறைக்கத் தொடங்கியது. என் கிராமத்தில் இருந்து அலைபேசிய நண்பன் கதறி அழத் தொடங்கினான். என்னால் பேச இயலவில்லை. அன்று இரவு என் மனம் பல்வேறு திசைகளில் அலைபாய்ந்திருந்தது.
போரின் நேரடி பாதிப்புகள் ஏதுமற்ற எங்களுக்கே இப்படியென்றால் போரின் வலியுணர்ந்த ஈழத்தின் சகோதரர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இப்போது கற்பனை செய்து பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தீ... ஒவ்வொன்றும் புதுப்புது வெடிகுண்டாய்... மக்கள் பிணங்களாய் கொத்துக் கொத்தாய் சாயும் வலிசுமந்த செய்திகளைத் தாங்கிய தமிழகத்தின் தினசரிகளைத் தொடவே அச்சமாக இருந்தது.
ஒவ்வொரு தமிழனுக்கும் ஈழம் தொடர்பான ஆதங்கம் இருந்தது. இந்தப்போர் நின்றுவிடக் கூடாதா என்று ஒவ்வொரு வீட்டிலும் ஏக்கம் ததும்பி இருந்தது. தமிழர்களின் நெஞ்சில் இருந்த அந்த ஆதங்கமும் ஏக்கமும் மிக எளிதாய் ஒரு பெரும் போராட்டமாய், புயலாய் மாற்றப்பட்டிருக்க முடியும். ஆனால் தமிழகத்தின் காட்சி ஊடகங்களின் துரோகமும் சுயநலமும் ஈழப்போராட்டத்தின் மற்றெந்த துரோகத்தையும்விட எள்ளளவும் குறைந்ததல்ல. தினகரன் அலுவலக எரிப்பையும், அதற்கு முன் கலைஞரின் கைதையும் மணிக்கு நூறுமுறை ஒளிபரப்பி ஆதாயம் தேடிக்கொண்ட சன் டிவி ஈழம்பற்றி மறந்தும்கூட மூச்சு விட மறுத்தது. இன்றளவும் சன் டிவியின் துரோகம் அதற்கான தண்டனையை அனுபவிக்காமலேயே இருந்து வருகின்றது. சன்னின் அயல்நாட்டுப் பார்வையாளர்களில் பெரும்பான்மையான ஈழத்தமிழர்களில் எத்தனை பேர் சன் டிவியையும் அதன் சினிமாத் தயாரிப்புக்களையும் புறக்கணித்திருக்கின்றனர்? 'எந்திரனு'ம் இன்னபிற சன் வெளியீடுகளும் இலங்கையிலும் ஏனைய அயல்நாடுகளிலும் ஈழத்தமிழர்களால் ஆதரிக்கப்பட்டுத்தானே வெற்றியடைந்திருக்கின்றன? சன் மட்டுமல்ல ஜெயா, விஜய், ராஜ் உள்ளிட்ட அத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகளுமே ஈழம் தொடர்பான செய்திகளைப் புறக்கணித்தே வந்தன. சன் டிவி ஆளுங்கட்சி ஊடகம். அதன் புறக்கணிப்பு இயல்பானதே. 'ஈழத்தாய்' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜெயா டிவி ஏன் புறக்கணித்தது? நடுநிலைத் தொலைக்காட்சி எனப்பீற்றிக்கொள்ளும் விஜயும் ராஜும் ஏன் புறக்கணித்தன? ஜெயலலிதாவுக்கு ஈழத்தின் மேல் என்றும் பெரிதாய் அக்கறை ஏதும் இருந்ததில்லை. மாறாக ஒரு வெறுப்புத்தான் நிரம்பி இருந்தது. அது பார்ப்பனீயத்தின் வெறுப்பு. இதே பார்ப்பனீய உயர்சாதி வெறுப்பு பின்னாளில் வ்ட இந்திய ஊடகங்களின் மூலமாக மே மாதம் மூன்றாம் வாரத்தில் அப்பட்டமாக பல்லிளித்தது.
இதோ தனக்குள் ஒரு எரிமலையினைச் சுமந்தபடி விடிகிறது ஜனவரி 29. மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் வளாகத்தில் மிகத் தெளிவான ஒரு மரணசாசனத்தை விநியோகித்தபடி ஈழத்தின் தீயை தன்மேல் சுமந்து எரியத் தொடங்கினான் முத்துக்குமார். ஒற்றைத் தீக்குச்சிக்காய்க் காத்திருந்த தமிழக இளைஞர்கூட்டம் சட்டெனப் பற்றிக்கொள்ளத் தொடங்குகின்றது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய இளைஞர்படை பொங்கி வழியும் அணையென ததும்பிக் கொண்டிருந்தது. ஒரு செங்கல் உருவப்பட்டால் போதும். இந்திய அரசின் துரோக சாம்ராஜ்ய மாளிகை சீட்டுக்கட்டுபோல சரிந்துவிழத் தொடங்கும் வேளையில் வழக்கம்போல தமிழக அரசியல் நரிகள் ஊளையிடத் தொடங்கின.
தனது உடல் ஆயுதமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முத்துக்குமாரின் கனவுக்கும் சேர்த்தே மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த துரோகத்தைப்பற்றிய மிகத்தெளிவான கட்டுரையை இயக்குனர் ராம் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார் பாருங்கள்... முத்துக் குமாரனின் இறுதி ஊர்வலம் - எனது சாட்சியம் - இயக்குநர் ராம்.
முத்துக்குமாரின் உடலம் எரிந்துபோன எட்டாம்நாள் என் அலுவலகத்துக்கு வந்தான் பதினெட்டு வயது நிரம்பிய இளமீசை அரும்பிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். அவனது விழிகளில் இருந்தது தமிழரின் எதிர்காலம்...
(... பயணம் தொடரும்)