செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-3: நகரம்

எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும் விநாடிமுள்ளாய் ஒரு வட்டத்துக்குள் திரும்பத்திரும்ப சுழன்று ஓடவைத்துக் கையில் பணம் என்ற சாட்டையுடன் மனிதர்களைக் கண்காணித்தபடியே இருக்கிறது நகரம்.

நகரமும் ஒரு காடுதான். "வேட்டையாடு; இல்லையேல் வேட்டையாடப் படுவாய்" என்ற கானக மந்திரத்தை உச்சாடனம் செய்தால்தான் வாழ்க்கைக்கு 'உத்திரவாதம்' என்ற வரத்தைத் தரும் நவீனக் கடவுளர் வாழும் காடு

வண்ணக் கனவுகளோடு நுழையும் ஒருவனை கறுப்பு-வெள்ளை யதார்த்தத்தைக் காட்டி அவன் கண்களை நிறக்குருடு ஆக்குவது நகரத்துக்கு பிடித்தமான விளையாட்டு

காரின் கண்ணாடிக்கு உள்ளே குளிர்பதனத்தில் கோக் குடித்து கைக்குட்டையால் வியர்வை ஒத்தும் கனவான்களுக்கும், கார் கண்ணாடிக்கு வெளியே அனுமதி இல்லாமலேயே அழுக்குத்துணியால் கண்ணாடி துடைத்து காசுக்கு இறைஞ்சும் கால்சட்டை சிறார்களுக்கும் ஓரவஞ்சனையின்றி இடமளிக்கும் நகரத்தின் சாலைகள்.

நகரவாழ்க்கை நகரா வாழ்க்கையாகவெ இருந்தாலும் அதன் போதை மட்டும் நடுத்தர மக்களுக்கு அலுக்கவே செய்யாது; விட்டில் பூச்சிகளுக்கு விளக்கொளி போல!

புசித்தலுக்கும் புணர்தலுக்கும் இங்கு ஒதுக்கப்படுவது ஐந்தைந்து நிமிடங்கள்தான்; இவ்விரண்டிற்குமான இடைவெளியில் இங்கு நகரப் பேருந்துகளின் சக்கரங்களுக்கடியில் நசுங்கிப்போகின்றன நாலைந்து மணிநேரங்கள்.

கலாச்சாரவேர்களை கரையான்களுக்குக் கொடுத்துவிட்டு ஜிகினாப் பூக்களுக்குள் காதல்வாசம் தேடும் நவீன இளைஞர், இளைஞிகள்;

இந்து பேப்பரின் எடிட்டருக்கு கடிதமெழுதும் பத்திகளில் மட்டுமே மனச்சாட்சியை மணியாட்டவைக்கும் நடுத்தர வயசுப் பெரிசுகள்;

அலாரத்தை அணைத்துவைப்பதில் துவங்கி, பாத்திரபண்டங்களைக் கழுவியடுக்குவதுவரை குட்டிப் புயலாய்ச் சுழன்று கடைசியில் தூக்கி வீசப்படும் ஈரத்துணிபோல படுக்கையில் சொத்தென விழும்போது ஆடை களையும் கணவன்மார்களுக்கும், பேருந்தில் உரசும் காவாலிகளுக்கும் இடையில் கசங்கிப்போகும் வேலைக்குப் போகும் பெண்கள்;

கணிணிப்பெட்டிகளோடு மட்டுமே கதைபேசி மானுடத்தின் மகத்தான பருவங்களை இழந்துநிற்கும் சின்னஞ்சிறிசுகள்.

என பலப்பல நிறங்களில் பலவித முகங்கள்; ஆனாலும் அனைத்து முகங்களிலும் பூதக்கண்ணாடி வைத்து தேடவேண்டியதாய் இருக்கிறது பொலிவையும் புத்துணர்வையும்!

"இருந்து என்ன செய்வது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன செய்வது
இருந்து தொலையலாம்"

என்ற கல்யாண்ஜியின் கவிதைக்கு அருஞ்சொற்பொருளாய் இருக்கின்றது நகரமாந்தர் வாழ்க்கை.

வாழ்க்கைதேடி நகரம் வரும் மனிதரில் பெரும்பான்மையோரிடம் மூச்சு மட்டுமே மிச்சமிருக்கிறது, உயிரோடிருப்பதன் அடையாளமாய்!

எனினும், தோலுக்கடியில் புண்கள் நாற்றமெடுத்தாலும் மேலுக்கு பவுடர்பூசி வண்ணவிளக்கொளியில் மாயம்காட்டும் ஆட்டக்காரிகள் போல, என்றும் இழந்துவிடுவதில்லை நகரம் தன் கவர்ச்சியை...

இந்தக் கவிதையில் 'நகர'த்தின் முகத்தை வரிகளால் வரைகிறார் அ.கார்த்திகேயன்

"சொல்லும் படியாய் இல்லை
பலருடைய வாழ்க்கை

சொல்லத் தகுந்ததாய் இல்லை
சிலருடைய வாழ்க்கை

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
கழிகிறது
இன்னும் மிச்சமுள்ளவர்களின்
வாழ்க்கை"

4 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

நகரம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது என்றாலும்
பிடிக்கவில்லை நகரத்தின் இருப்பை..

ஹேமா சொன்னது…

நகரத்தில் வாழ்ந்தால்தான்
வாழ்வை வாழ்வதாகச் சொல்கிறார்கள் சிலர் !

parthasarathy சொன்னது…

மிக நன்று
உங்கள் வருத்தம் தெரிகிறது
பெண்களின் குறை எழுதிய நீங்கள் , ஒன்றை கவனியுங்கள் ,அவர்களுக்கு நகரத்தில் இதை விட பெரிய கொடுமைகள் நடக்கிறது
கிராமங்களை பற்றி கூட கொஞ்சம் எழுதுங்கள் , இப்போது கிராமங்கள் நகரங்களை தண்டி செல்கின்றது

எல் கே சொன்னது…

வி ரா, நகரத்தில் உழன்று கொண்டிருக்கும் பலரின் நிலை இதுதான். இது உங்கள் சிறந்தப் பதிவுகளில் ஒன்று

Related Posts with Thumbnails