வியாழன், 26 ஆகஸ்ட், 2010

எழுதுறதெல்லாம் எழுத்தில்ல!


மனுஷனுக்கு எப்பவுமே ஏதாச்சும் ஒரு போதை தேவைப்படுது. எவ்வளவோ வெதத்துல... எனக்கு அப்பப்போ ஒவ்வொரு போதை கெறங்கடிக்கும்... கொஞ்ச நாள் கம்ப்யூட்டர் கேம்ஸ்... கொஞ்ச நாள் யாஹூ மெஸஞ்சர்ல "hi/hw r u/ asl pls", அப்புறம் கொஞ்ச நாள் சும்மா வெறுமனே ஒக்காந்து யூடியூப்ல பாட்டு கேக்குறது அப்டீன்னு...

கொஞ்சநாளுக்கு முன்னாடி... திடீர்னு உங்கள மட்டமல்லாக்கத் தள்ளி நடுநெஞ்சுல ஏறி நங்குநங்குன்னு மிதிச்சா அந்த வலி எப்டி இருக்கும்?... அந்த மாதிரி ஒரு அடி... வலிய மறக்க என்னடா வழின்னு தவிச்சப்போ நீதான் நல்ல கிறுக்கனாச்சே.. ப்ளாக்ல வந்து ஏதாச்சும் கிறுக்குடான்னாரு கேஆர்பி செந்திலண்ணன். திடுதிடுன்னு எந்திரிச்சு கிறுக்க ஆரம்பிச்சா  இருவத்திமூணு நாள்ல இருவத்திமூணு பதிவு...

ரெண்டு நாளா ஒரு எழவும் தோணல... ஏதாச்சும் எழுதியே ஆகணும்னு வரிஞ்சிகட்டி ஒக்காந்தா... நேத்து ஒக்காந்தவாக்குலயே தூங்கித் தொலச்சிட்டேன். இன்னிக்காவது ஏதாவது எழுதிப்புடணும்னு ஒக்காந்தேன்... சட்டில இருந்தாத்தானே ஆப்பையில வரும்?

சரி சுளுவா ஒரு கவிதையாச்சும்  கிறுக்கலாம்னு யோசன பண்ணி எழுதி கேஆர்பிக்கு மெயில் போட்டு நிர்த்தாட்சண்யமா விமர்சனம் பண்ணுங்கன்னு சொன்னேன்.

எந்த அம்மா வலிக்குறமாதிரி அடிச்சிருக்கா? "கொஞ்சம் கொஞ்சம் திருத்துங்க" அப்டீன்னு  மெல்லமா சொல்லிட்டு போய்ட்டாரு. ஆனா எனக்குள்ள ஏதோ நெருடிட்டே இருந்திச்சு. கொஞ்சநேரம் கழிச்சு பாலபாரதி ஆன்லைன்ல வந்தப்போ சும்மா பேச்சு கொடுத்து பாத்தேன்.

அவரு ஒரு லிங்க் அனுப்பி இத படிச்சி பாருங்க நல்லாருக்கும்னு சொன்னவொடனே ஓப்பன் பண்ணி பாத்தா...

http://madrasdada.blogspot.com/2010/08/blog-post_22.html

விமலாதித்தமாமல்லன் எவ்ளோ அழகா பாடம் நடத்துறாரு! தெகச்சி போயிட்டேன்! அப்புறம் கவிதையாவது ஒண்ணாவது...

ஒருவரி எழுதியிருக்காரு பாருங்க...

//எல்லா விஷயங்களும்  சுயத்திற்காகவே  செய்யப்படுகின்றன. சுயத்தை திருப்த்திப்படுத்த. சுயத்தை முன்னிருத்த அல்ல.//

யப்பா... மனுஷன் மூஞ்சிக்கு நேரா வந்து கண்ணாடிய தூக்கி புடிக்குறான் பாருங்க!

நான் படிச்சத யாராவது இன்னும் ரெண்டு பேர் படிச்சுப் பாத்தா போறும்.... இன்னிக்கு என்னோட பதிவுக்கு விடிமோட்சம்!

சொறிபுடிச்சவன் கையும் இரும்பு புடிச்சவன் கையும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க...

அதனால நான் எப்பவோ கிறுக்குன கவிதை ஒண்ணு... கடேசியா..(சத்தியமா ஹைக்கூ இல்லீங்க!)

இருவர் கரங்களும்
பின்னிக்கொள்ள
மெல்ல நடப்போம்
நீ நதியாக
நான் கரையாக

11 பேரு கிடா வெட்டுறாங்க:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

எழுத்து வசமாயிடுச்சு முத வரியில இருந்து கடசி வரி வரைக்கும் சுளுவா இழுத்துட்டு வந்துடுச்சு...

கவிதை ;) அப்போ இடையில் இருக்கும் நீர் வாழ்க்கையா? நதியில் தண்ணியிருக்குறப்போ வருத்தப்படுவாங்களா? நதி நீர் வற்றிடுச்சுன்னா சந்தோசமா இருப்பாங்களா? பதில் என்ன? இல்லை இது நடக்காத ஒண்ணா?

ஹேமா சொன்னது…

விமலாதித்தமாமல்லனின் எப்படி எழுதுவது என்கிறமாதிரியான பதிவை நானும் படித்தேன்.பக்கமிருந்து சொல்லித் தருவதுபோல ஒரு அனுபவம்.

உங்களாலும் அலுப்பில்லாமல் எழுத முடிகிறது மனிதரே !

Bibiliobibuli சொன்னது…

எவ்வளவு தான் எழுதியெழுதி மொழியே தீர்ந்துபோனாலும், வார்த்தைகளை தேய்த்துக்கொண்டாலும் வாழ்க்கையும், வலிகளும் எப்போதுமே மீதமிருக்கிறது என்பதை எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடித்த உங்கள் கவிதை வரிகள் நன்றாகவே பிரதிபலிக்கின்றன. பதிவுலகில் எழுத்து என்பதும் Self-Reflection தானே. இதை ஏன் "சுயதம்பட்டம்" என்று கொள்ளவேண்டும்?

Unknown சொன்னது…

இயல்பான எழுத்து நடை. தொடருங்கள் நண்பரே....

என்னது நானு யாரா? சொன்னது…

///மனுஷனுக்கு எப்பவுமே ஏதாச்சும் ஒரு போதை தேவைப்படுது. எவ்வளவோ வெதத்துல... எனக்கு அப்பப்போ ஒவ்வொரு போதை கெறங்கடிக்கும்.///

அடடா! என்னை போல் தானா நீங்களும்! இந்த போதை அது போகும் வரை சும்மா விடாது!

நீங்க அறிமுகம் செய்தவரை போய் பார்க்கிறேன்! தொடர்பில் இருங்க அப்பு!

vinthaimanithan சொன்னது…

@ப்ரியமுடன் வசந்த்

"நீங்கள் ஒருவருக்கொருவர் ஆடையாக இருங்கள்" அப்டீன்னு சொல்லுது குர்ஆன். பொருத்திப் பாருங்க தோழரே!

@ஹேமா

நன்றி தோழீ! நான் நேத்து படிச்சி அசந்து போயிட்டேன் மாமல்லனை!

@ரதியக்கா

வலிநிறைந்திருக்கும் மனச ஆற்றுப்படுத்தத் தானே எழுதிட்டு இருக்கேன். அதுனால என் பதிவுல இன்னும் கொஞ்சநாளாவது வலி ஊடுபாவித்தான் இருக்கும். அப்புறம் மாமல்லன் சுயதம்பட்டம் அப்டின்னு சொல்லலையே! சுயத்தை திருப்திப்படுத்த அப்டின்னுதானே சொல்றார்?

@கலாநேசன்

நன்றி நண்பரே!

@என்னது நானு யாரா?

எல்லாருமே அப்டித் தானுங்களே?!

dheva சொன்னது…

அனுபங்கள் கொடுத்த புரிதலாய் இருக்கிறது உன்னோட பதிவுகள் எல்லாமே... நின்று கவனிக்கப்படவேண்டிய எழுத்து.....உன்னிடம்...வாழ்த்துக்கள் பா!

vasu balaji சொன்னது…

கரையாக சரியா வருமா? அப்ப மத்த கரை யாரு. வில்லங்கமா போகுதே விந்தை:))

Bibiliobibuli சொன்னது…

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ............அப்பா இந்த விந்தைமநிதனுக்கு விளக்கம் சொல்லியே........

அப்பனே விந்தைமனிதா நான் என்ன சொன்னாலும் negative ஆகவே எடுத்துக்கொள்வீர்களா? சரி, "சுயத்தை திருப்திப்படுத்த". அது உங்கள் பதிவை மூடிவைத்துவிட்டு multitasking செய்துகொண்டே பதில் எழுதியதால் வார்த்தையை மறந்து இப்படி எழுதிவிட்டேன். ஆனாலும், நான் சொன்ன கருத்து பதிவுலகில் எழுதுவதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். வெறுமனே சுயத்தை திருப்திப்படுத்த என்று சொல்லாமல் self-reflection என்று ஏன் கொள்ளக்கூடாது என்று தான் கேட்டேன், Optimism!!!!!!??? நான் மாமல்லன் எழுதிய பதிவை படிக்கவில்லை.

எவ்வளளவு தான் வலி என்றாலும் வாழ வேண்டிய வாழ்க்கை மிச்சமிருக்கிறது என்று சொன்னேன். அதுவும் தப்பாப்பா?

எனக்கு பதிவுலகில் சனி இப்போ உச்சத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் கொஞ்சகாலம் கழித்து மீண்டும் வருகிறேன்.:))))))))))))))). Adios!!!!!!

vinthaimanithan சொன்னது…

அய்யய்யோ! ரதிக்கா... என்ன இவ்ளோ கோவம்? என்னாச்சு சனி, ஞாயிறுன்னுகிட்டு? லூசுல வுடுங்கக்கா! இப்போதைய என் self-reflection ல எழுதுறது கொஞ்சம் நெகட்டிவாத் தான்க்கா இருக்கும்.. என்ன பண்ணித் தொலக்கிறது?!

vinthaimanithan சொன்னது…

என்னோட அடுத்த பதிவ வேற எழுதிட்டு இருக்கேன் இன்னும் நெகட்டிவா? பயமா இருக்கே... :)

Related Posts with Thumbnails