வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பிறந்தது பெருநெருப்பு! பெரியார் என்று பெயர்!



காந்தியையும் காங்கிரஸையும் தன் வாழ்நாளின் கடைசிவரை எதிர்த்தவர்கள் இருவர். ஒருவர் தமிழர்களின் தன்மானத்தைத் தட்டியெழுப்பிய தந்தை பெரியார்; இரண்டாமவர் காலங்காலமாய் அடிமை நுகத்தடியைச் சுமந்து முதுகெலும்பு கூனிப் போயிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை நிமிர்ந்தெழச் செய்த அண்ணல் அம்பேத்கர். இன்று அம்பேத்கரைக் கூட இந்துத்துவ சட்டத்திற்குள் அடைக்க இந்து மதவெறி சக்திகள் முயன்று வரும் நேரத்தில் இந்துத்துவ சக்திகளால் எப்போதும் நெருங்க முடியா பெருநெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருப்பவர் நம் தந்தை பெரியார்.

"சுதந்திரம் என்பது இரண்டு ஆதிக்கச்சக்திகளுக்கு இடையில் நிகழ்ந்த அதிகாரப் பரிமாற்றம்தானே வேறொன்றுமில்லை" என்று முழங்கி சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்தவர். வாழ்நாள் முழுக்க ஒரு கலகக்காரனாகவே வாழ்ந்த மாமனிதன்.

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் பெரியார் அறிவிக்கிறார் இந்த நாட்டை இனி காந்திதேசம் என்று அறிவிக்கவேண்டும் என. ஏனெனில் அவரது எதிர்ப்பு காந்தியின் கொள்கைகளின் மீதுதானே தவிர வேறேதும் தனிப்பட்ட விரோதமில்லை; வாழ்நாள் முழுக்க பார்ப்பனீயத்தை எதிர்த்தே வாழ்ந்த மனிதன் ராஜாஜியின் மரண ஊர்வலத்துக்கு சுடுகாடுவரை நடந்தே செல்கிறார்.

ஏனெனில் அவர் பெரியார்; அவர்தான் பெரியார்!

என்றாவது தமிழர்தேசம் அமைந்தால் நாம் பெயர்வைப்போம் அதற்கு "பெரியார்தேசம்" என!

அப்படி என்ன கிழித்துவிட்டான் அந்த தாடிக்கிழவன் என்கிறீர்களா?

அடிமைத்தனம் எந்த விதத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதையே தம் வாழ்நாள் கடமையாகச் செய்தவர்; அவர் பேசாத, எதிர்க்காத அடிமைத்தனம் உண்டா?

இன்றும் இளைய தலைமுறையினர் 90 சதம் பேருக்கு பெரியார் என்றால் கடவுள் எதிர்ப்பாளர் என்றுதான் அறிமுகம் ஆகிறார்.

ஆனால்....

பறையடிப்பதற்கும், முடிவெட்டுவதற்கும், ஆடு மேய்ப்பதற்கும் அடியாள் வேலை பார்ப்பதற்கும், சேற்று வயலிலும் வீட்டு ஏவல்களிலும் குனிந்த முதுகு நிமிராமல் இருப்பதற்கும் மட்டுமே பழக்கப்பட்டிருந்த பெருந்திரளான ஒடுக்கப்பட்ட மக்கள் நிஜமான மனிதர்களாய் நெஞ்சு நிமிர்த்தக் காரணமாயிருந்த தமிழகத்தின் ஒரே போராளி பெரியார்.

இன்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசுப்பணிகளிலும் அதிகாரவர்க்கங்களிலும் வலம் வரக் காரணமும் அவரே.

'இப்படிச் சொன்னால் இவர்கள் ஆதரவு போகுமோ? அப்படிப் பேசினால் அவர்களை இழப்போமோ? இந்தக் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தால் நமது பிம்பம் கரைந்து போகுமோ?' என்றெல்லாம் தயங்கித் தயங்கிப் பேசுவோர் மத்தியில் தான் நம்பும் எதையும் எந்த இடத்திலும் மறைக்காமல் முழங்கிய சத்தியசீலன் பெரியார்.

கற்பு, காதல் போன்ற கருத்தாக்கங்கள் எல்லாம் கடைக் கத்திரிக்காயைவிட மதிப்பு வாய்ந்ததில்லை என்று சொல்லும் நெஞ்சுரம் அவருக்கு மட்டுமே சொந்தம்.
"பெண்களும் ஆண்களைப்போல் உடையணியவேண்டும்; கிராப்பு வெட்டிக்கொள்ள வேண்டும்; தாலி என்பது அடிமைச்சின்னம்" என்று இன்று போய்த் தெருவில் சொல்லிப்பாருங்கள். குறைந்தது இரண்டு கற்களும், ஒரு ஜதை செருப்பும் நிச்சயம்! ஆனால் மக்கள் மாக்களாய் உலாவந்த அந்தக் காலத்திலேயே மேடைபோட்டு முழங்கியவன் அந்த தாடிக்கிழவன்!

எந்தவகையில் அடிமைத்தளை இருந்தாலும் அதை உடைத்தெறிவதையே வாழ்நாள் கடமையாகக் கொண்ட மாமனிதன்.

சிறுநீரகங்கள் செயலிழந்து செல்லுமிடமெல்லாம் மூத்திரக் கலயத்தையும் சேர்த்துச் சுமக்க வேண்டி இருந்தாலும் அசராமல் தன்பணியாற்ற தமிழ்நாடு தோறும் வலம்வந்த செயல்வீரன் பெரியார்.

பெரியார் என்ற ஒற்றை வார்த்தை தமிழ்ச் சமூகத்தின் முகவரியையே மாற்றியமைத்தது. அந்த மந்திரச் சொல்லில் சொரணை ஏற்றப்பட்டு துள்ளியெழுந்த வீரர் கூட்டத்திற்கு புறமுதுகிட்டு ஓடின பார்ப்பனீய, அடிமைத்தனம் பரப்பும் பேய்கள்.

நண்பர்கள் வாய்ப்பிருந்தால் பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.

பெரியார் பற்றி முழுதும் எழுதுமளவு என் வார்த்தைகளில் வீரியமில்லை.

எனவே பாவேந்தரின் பாடலுடன் பெரியார் பிறந்த நாளான இன்று எம் தமிழ்ச் சமூகத்தின் அறிவு ஆசான் தந்தை பெரியாரை நினைவு கூர விரும்புகிறேன்.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.


- பாரதிதாசன்

20 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

தன் வாழ்வின் மொத்தமும் அடிமைத்தளையை அறுக்கவும், மூட நம்பிக்கைகளை வேரறுக்கவும் பயன்படுத்திய ஆசான் பெரியார்...

பெரியாரை பற்றிய புரிதலுக்கு நாம் நிறைய படித்திருக்க வேண்டும்...

இன்றைக்கு அவரின் வாரிசாக சொல்லிக் கொள்பவர்களில் பெரியார் திராவிட கழகத்தினர் தவிர மற்ற அனைவரும் அவரை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்..

கலையகம் கலை ஒருமுறை இப்படி பின்னூட்டம் இட்டிருந்தார்...

"பெரியார் திடலில் இரண்டு சமாதிகள் உண்டு. ஒன்று பெரியாருக்கும். இன்னொன்று அவரின் கொள்கைகளுக்கும் என்று... இதுதான் உண்மை ..."

ஜோதிஜி சொன்னது…

ராசா சொகமாயிருக்கீங்களா?

அந்தப்பக்கம் சக்தியைப் பார்த்த பயத்துல இந்தப் பக்கம் நெருப்ப பத்தவச்சாச்சோ??

ஜோதிஜி சொன்னது…

"பெரியார் திடலில் இரண்டு சமாதிகள் உண்டு. ஒன்று பெரியாருக்கும். இன்னொன்று அவரின் கொள்கைகளுக்கும் என்று... இதுதான் உண்மை ..."


செந்தில் எங்க ராசா இருக்கே. நூறு முத்தங்கள்.......................

ஆயிரத்தில் ஒருவன் சொன்னது…

கற்பு, காதல் போன்ற கருத்தாக்கங்கள் எல்லாம் கடைக் கத்திரிக்காயைவிட மதிப்பு வாய்ந்ததில்லை என்று சொல்லும் நெஞ்சுரம் அவருக்கு மட்டுமே சொந்தம்.

Unknown சொன்னது…

ஜோதிஜி அண்ணே .. இப்பதான் மைசூரில் இருந்து வந்தேன்... இன்னும் மூன்று நாட்களுக்கு சென்னைதான் ...

ssk சொன்னது…

கொள்கைகளை யாரோ வந்து பாத்து காக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாமே. நீங்களும் நானும் அந்த கொள்கைகளை சரி என்று மதிக்கும் வரை அய்யாவினுடைய கொள்கைகள் இன்றும் தேவை. அப்படி ஒன்றும் எளிதாக சமாதிக்கு போய் விடாது. நம் இனத்தில் உள்ள ஓரிருவர் இப்படி சொல்லியே, நம் இனத்தின் ஒற்றுமையை சுத்தமாக கெடுத்து விட்டனர். எதுவும் தெரியாமலே ஏளன படுத்தி பேசு வதில் நாம் வல்லவர்கள். அதனாலே தமிழரை எல்லா இடங்களிலும் எளிதாக பிரிக்க முடிகிறது. முடித்த வரை நம் இனத்தவரின் பெருமைகளை உயர்த்தி எழுதுங்கள். எழுத வருகிறது என்பதற்காக குறைகளையே எழுதி கொண்டிருக்க வேண்டாம்.

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

ssk said...
கொள்கைகளை யாரோ வந்து பாத்து காக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாமே. நீங்களும் நானும் அந்த கொள்கைகளை சரி என்று மதிக்கும் வரை அய்யாவினுடைய கொள்கைகள் இன்றும் தேவை. அப்படி ஒன்றும் எளிதாக சமாதிக்கு போய் விடாது. நம் இனத்தில் உள்ள ஓரிருவர் இப்படி சொல்லியே, நம் இனத்தின் ஒற்றுமையை சுத்தமாக கெடுத்து விட்டனர். எதுவும் தெரியாமலே ஏளன படுத்தி பேசு வதில் நாம் வல்லவர்கள். அதனாலே தமிழரை எல்லா இடங்களிலும் எளிதாக பிரிக்க முடிகிறது. முடித்த வரை நம் இனத்தவரின் பெருமைகளை உயர்த்தி எழுதுங்கள். எழுத வருகிறது என்பதற்காக குறைகளையே எழுதி கொண்டிருக்க வேண்டாம்.
September 17, 2010 11:08 PM//////



நம் இனம் , இதைத்தான் பெரியார் வெறுத்தார் , அதை சொல்லும் நீங்கள் எப்படி பெரியாரை மதிப்பவர் ஆவீர் . பெரியாரை பாராட்டும் முன் அவரை படியுங்கள் , விந்தைமனிதனை விமர்சிக்கும் முன் அவர் எழுத்தையும் கூர்ந்து கவனியுங்கள் , அவர் எழுதுவது பெரியாரை பற்றி தெரியாதவர்களுக்காக , உங்களை போன்று " நிறைய " தெரிந்தவர்களுக்காக அல்ல

மதுரை சரவணன் சொன்னது…

அருமை . பெரியாரைப் பற்றி பெரிய தகவல்களை சிறிய அளவில் நிரம்ப்த் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

சுதர்ஷன் சொன்னது…

அருமையாக கூறியுள்ளீர்கள் .. அவர் மீது எப்போதும் மரியாதை உண்டு ..

ஹேமா சொன்னது…

பெரியாரைப் பற்றிய தகவல்களை விரும்பிப் படிப்பேன்.நிறைவான பதிவு.நன்றி விந்தையாரே.

ஜோதிஜி சொன்னது…

செந்தில் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றும் உங்கள் வாழ்க்கையை நினைத்து ஆச்சரியமாக இருக்கு. உங்களுடைய பெரிய திட்டங்கள் ஈடேற வாழ்த்துகள். அவசரம் இல்லை. 27 ந் தேதி அவஸ்யம் தமிழ்மணம் வாருங்கள். ராசா உனக்கும் தான்...........

என்னன்னு கேட்கக்கூடாது. தமிழ்மணம் பார்க்கவும்.

என்னது நானு யாரா? சொன்னது…

"பெண் ஏன் அடிமையானாள்?" நான் படித்திருக்கிறேன் நண்பா! மற்றவர்கள் அதனை படிக்க வேண்டி இருப்பின், இங்கே கொடுத்திருக்கும் லிங்கில் கிடைக்கிறது.

http://www.periyar.org/html/dl_books.asp

கருத்துக்கள் அருமை! எல்லோருக்கும் பயனளிக்கும் விதமாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் + நன்றிகள்!

பெயரில்லா சொன்னது…

//என்றாவது தமிழர்தேசம் அமைந்தால்//

This is the reason everyone beating you guys...

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

மூடப்பழக்கவழக்கங்கள் எல்லாவற்றின் வேர்களையும், அதைவைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த, இருக்கிற சுரண்டல் பேர்வழிகள் பக்தியோடு இணைத்துவிட்டதால்.... விசவித்துகளை மேலும்பரவாமல் செய்ய அதன் வேர்களை அறுக்க பெரியார் ஆன்மீகத்தை வசைபாடவேண்டிய தேவை இருந்தது.

நல்ல விசயங்களை எல்லோரிடமும் பகிர்வது சிறப்பு. பெரியார் பிறந்த நாளில் அதை நீங்கள் செய்து உள்ளீர்கள்.நன்றி.

தமிழ் ஓவியா சொன்னது…

//இந்துத்துவ சக்திகளால் எப்போதும் நெருங்க முடியா பெருநெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருப்பவர் நம் தந்தை பெரியார்.//

மிகச் சரியாக படம் பிடித்துள்ளீர்கள்.

சிறப்பான கட்டுரை

Bibiliobibuli சொன்னது…

//என்றாவது தமிழர்தேசம் அமைந்தால்//
//This is the reason everyone beating you guys...//

OH!!

Thanks for sharing your thoughts about Periyaar, Rajaraman

Robin சொன்னது…

//வாழ்நாள் முழுக்க பார்ப்பனீயத்தை எதிர்த்தே வாழ்ந்த மனிதன் ராஜாஜியின் மரண ஊர்வலத்துக்கு சுடுகாடுவரை நடந்தே செல்கிறார்.// Great!

vinthaimanithan சொன்னது…

@ கேஆர்பி

பெரியார் தி.க பற்றி நீங்கள் சொன்னதே என் கருத்தும் அண்ணா!

@ஜோதிஜி

ஜி... என்னது சக்தி... புரியல

@ஆயிரத்தில் ஒருவன்

என்ன சொல்ல வர்றீய தல?

@ ssk

அய்யா, அய்யாவின் வழியைப் பின்பற்றும் தாங்களா நம் இனத்தைக் குறைகூறக் கூடாது என்பது? குறைகளை உரத்துச் சொல்லி சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்துத் திருத்தியவர் அல்லவா நம் அய்யா! இன்று பெரியார் திடலைச் சொந்தம் கொண்டாடுவோரின் தொண்டுகளைப் பற்றித் தெரிந்துதான் என்னைப் போன்றோர் மன வெதும்புகிறோம். தன் சொத்து அனைத்தையும் கழகத்துக்கே எழுதிவைத்த அய்யா எங்கே? தனக்குப் பிறகு வாரிசுக்கு மகுடம் சூடத் துடிக்கும் 'தலைவர்'கள் எங்கே? குறைகளைச் சொல்லாமல் ஜிங்ஜிக் போடச் சொல்கிறீர்களா?

இனப்பெருமை பேசிப்பேசி விளங்காமல் போவதை ஒருபோதும் விரும்பியவர் இல்லை நம் அய்யா.

@ அர. பார்த்தசாரதி

நன்றி நண்பா புரிதலுக்கு!

@ மதுரை சரவணன்

நன்றி சரவனன்

@ S.Sudharshan

நன்றி நண்பரே

@ ஹேமா

நன்றிங்க

@ என்னது நானு யாரா?

லிங்க் கொடுத்ததற்கு நன்றி நண்பரே

@ Anonymous

வாங்க அநானி... ஏன் முகம் காட்ட அஞ்சும் கோழையா நீர்? என்னய்யா தெரியும் உமக்கு ஒடுக்கப்பட்ட இனத்தின் வலி பற்றி? முகமூடியை விட்டுவிட்டு வாரும்! அப்புறம் கிழிக்கிறேன் உம்ம கொண்டைய நார்நாரா! முகமூடிகளுக்கு பதில் சொல்வது வெறும் காற்றில் கத்தி வீசுவதற்குச் சமம் என்பதால் உம்மோடு இதற்குமேல் பேசப் பிரியப்படவில்லை

@ enthisai

வாங்க வக்கீல் சார்... நன்றிகள் பல

@ தமிழ் ஓவியா

நன்றி தோழர்.... முதல் வருகைக்கும்

@ ரதியக்கா

"Oh" ல தெரியுதுக்கா உங்க ஆத்திரமும், எதையும் பேசவியலா தவிப்பும்.... என்ன சொல்றதுன்னு தெரியல... இது நரிகளின் காலம்

@ Robin

நன்றி ராபின்

Ravichandran Somu சொன்னது…

பெரியார் பற்றி நல்ல பகிர்வு... வாழ்த்துகள்!

Related Posts with Thumbnails