புதன், 22 செப்டம்பர், 2010

அஸ்தமிக்கும் விடியல்கள்



நிர்வாணமாய்ப் படுத்திருந்த அவளது ஒரு கால் அவன்மேலே கிடந்தது. உதடுகளில் குறுஞ்சிரிப்பு. கனவில் ஏதோ கண்டு சிரிக்கிறாள் போலும்!மூடியிருந்த இமைகளில் வழிந்திருக்கும் அசாத்திய நிம்மதி... மெல்ல புருவங்களை வருடினான். மூக்கை லேசாக நிமிண்டிவிட்டு வகிட்டில் உதடுபதித்தான். ஃபேன் காற்றில் பறந்துகொண்டிருந்த கூந்தல் இழைகளை லேசாய் ஓரம் ஒதுக்கி மீண்டும் பார்க்கையில் அப்படியே தூக்கி மார்போடு இறுக்கி அணைத்துக்கொள்ளும் ஆசை எழுந்தது. வேண்டாம்... சிணுங்குவாள்! கொஞ்சம் முன் பெரும் இரைச்சலோடு அருவியாய் விழுந்து புரண்டோடும் காட்டாறாக இருந்தவள் இப்போது அமைதியாய் அசைவின்றி நகரும் நதிபோல....

வெளியே வைகாசி மாத நிலவு காய்ந்து கொண்டிருந்தது. மனம் ஏனோ ததும்பியது. ஒரு சிகரெட்...? லேசாக அவள் காலை எடுத்துக் கீழே வைத்தான். அரைத்தூக்கத்திலேயே கைகளை நீட்டி இறுக்கிக் கொண்டு " எங்கடா போற? போகாத....".  "இல்லடா செல்லம்...அஞ்சு நிமிஷம் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்" பொய் சொல்லி சிகரெட் பாக்கெட் எடுத்துக் கொண்டு வந்து மொட்டைமாடிச் சுவர்சாய்ந்து பற்றவைத்தான்.

வைகாசி நிலவு.... புத்த பூர்ணிமா..! ஹம்மா... ராகுல்ஜியோட 'பௌத்தத் தத்துவவியல்' தானே கடைசியாகப் படித்தது? முழுதாய் மூன்று வருஷம் ஆகிவிட்டது கனமான புத்தகங்கள் படித்து.... "முத்தம் தரவா?!" என்ற ஒற்றை வார்த்தையில் துவங்கிய காதல் பயணம், அப்புறம் சென்னையில் சொந்தமாய் அலுவலகம், அவளும் சென்னைக்கு வர யாரும் அறியாமல் சேர்ந்தே வாழும் ஏற்பாடு. முன்போல் இல்லை மனம். எப்போதும் அவளது ஃபோனுக்காய் ஏங்கும் பொழுதுகள் மறைந்து அமைதியாய் காதலை ரசிக்கத் துவங்கி இருக்கின்றது. வார்த்தைகள் தேவையா என்ன?!

தூங்கவேண்டும். காலையில் தண்ணீர் பிடித்து பால்வாங்கி தேநீர் போட்டு அவளை எழுப்பி, அடுப்பில் இட்லிப்பானை வைத்து... சிரிப்புத்தான் வந்தது... ஊரில் இருக்கும்போது தன் உள்ளாடையைக் கூடத் தோய்த்ததில்லை. மீண்டும் கன்னம் வருடி முத்தமிட்டான். சீக்கிரம் கடன் அடைத்துக் கல்யாணம் செய்யவேண்டும்!
நாளைக்கு வரும் க்ளையண்ட் மட்டும் நம்பக்கம் சாய்ந்துவிட்டால் போதும்... ஆறே மாதம்....
********************************************
"ஷட்"... என்ன மனிதன் இவன்? மணி மூன்றாகிறது. காலையில் ஏர்போர்ட்டில் ரிஸீவ் செய்யும்போது மணி ஏழரை. நாளும் அப்படித்தான் போல! வந்திருக்கும் சப்பைமூக்கு சீனப்பயல் அநியாயமாய்க் கடுப்பேற்றுகிறான். வேறு வழியில்லை. இவனை.. இவனை நம்பித்தான்.... பசி வேறு. இவன் எப்போது டாகுமெண்ட்ஸ் சரிபார்த்து... அக்ரிமெண்ட் போட்டு? என்னென்ன எழவு உதைக்கப் போகிறதோ? சடசடவென மண்டிய எரிச்சலில் எட்டாவது சிகரெட் காலி!

'அவள் சாப்பிட்டிருப்பாளா?'

"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..." செல்ஃபோன் சிணுங்க...

"என்னடா குட்டிமா...."

...............

"ம்ம்ம்... சாப்டேன்.. நீ?"

...............

"உனக்கு வேற வேலைக்கழுதையே இல்லையா? வைடி... ஈவினிங் கால் பண்றேன்"

...............

" ஏண்டி புரிஞ்சிக்கவே மாட்ற... காலைல இருந்து நாயா அலைஞ்சுட்டு இருக்கேன்... ஃபோன வை"

.................

" சொன்னா கேளுடி.. உசிர வாங்காத. சாயங்காலம் கூப்பிடு... பை"
**********************************************
"ப்ளீஸ்டா! ஒரு ரெண்டு நிமிஷம் கேளேன் நான் சொல்றத..."

...............

" நீ ஒரு மண்ணும் பண்ணவேண்டாம். சாயங்காலம்லாம் பேசமாட்டேன்.... போடா"

ஃபோனை நங்கென்று வத்தவள் கண்ணில் நீர் முட்டியது. 'எவ்ளோ காலமாச்சு? மணிக்கணக்கா பேசுவான்... இப்போ எப்போ பண்ணினாலும்.... அப்புறம் பேசுறேன்... ச்சை... அலுத்துப் போயிடுச்சா என்ன?'

எல்லா வேலையும் அவன்தான் செய்யிறான்... டீயில இருந்து டிஃபன் வரைக்கும்.... ஆனா ஆசையா ரெண்டு வார்த்தை ஃபோன்ல பேசினா குறைஞ்சா போயிடும்? இனி கால் பண்ணினாத்தானே!

"என்னம்மா சும்மா யோசிச்சிட்டு இருக்கீங்க? எத்தனை கால்ஸ் போயிருக்கு?"

"இல்ல மேடம்... ஸாரி.. இதோ பண்ணிட்டே இருக்கேன்"

...........

...........

...........

"ஹலோ! குட் ஈவினிங் சார். நான் பி.கே.ஜே ஃபினான்ஷியல் கன்சல்டன்சில இருந்து ஜனனி பேசுறேன். எங்க ஹாலிடே ரிஸார்ட்ஸ் சம்பந்தமா நேத்து கால் பண்ணி இருந்தேன். அதான் கூப்டேன் சார்..."

"ஹேய் ஜனனி! நேத்துல இருந்தே இந்த ஸ்வீட் வாய்ஸ் மறுபடியும் எப்போ கேக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஸ்வீட் சர்ப்ரைஸ்பா......."

..............


..............



..............

***************************************************************************

7 பேரு கிடா வெட்டுறாங்க:

ஹேமா சொன்னது…

விந்தையாரே...இப்படித்தான் நிறம் மாறும் மனிதர்கள் நடுவில் நாங்களும் நிறத்தோடு !

நேசமித்ரன் சொன்னது…

நல்லாத்தானே எழுதிட்டு இருந்தீங்க ?

காமராஜ் சொன்னது…

எழுத்து நடை நல்லா இருக்கு.

Unknown சொன்னது…

இதுதான் எதார்த்தம்.. இங்கு இப்படிதான் மனிதர்கள் வாழ்கிறார்கள்.. இதில் ஆண், பெண் வேறுபாடில்லை...

எல் கே சொன்னது…

அனைவரும் இப்படித்தானோ ???

பத்மா சொன்னது…

வாழ்க்கை ஓட்டத்தில் சிலசமயம் இப்படித்தான்

Unknown சொன்னது…

vinthai in muthu said,
sirukathai padithen.nee ippadi kaalam kadandha kavithaikalai mattum kanatha idhayathudan solla vaithu vittaney kutti?

Related Posts with Thumbnails