வெள்ளி, 15 ஏப்ரல், 2011

அஸ்வத்தாமாக்கள் சாவதில்லை!

அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற்றாமையின் சுவாலையும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.




'துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. நான் தனியனானேன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உபயோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குருஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனும் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?'



அது குருஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் படுகளம். எங்கும் மரண ஓலம் மட்டுமே எஞ்சி இருந்தது. குருஷேத்திரம் எனப்படும் ஸமந்தபஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குளக்கரையில் துரியோதனன் வீழ்ந்துகிடந்தான். ராஜ்யக் கனவுகள் கலைந்து மரணத்தில் சாயை கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் கவியத் துவங்கி இருந்தது. துரியனின் உதடுகள் வெடித்துக் கிடந்தன. இமைகள் கிறங்கி இருந்தன. துரியனின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியனின் உதடுகளில் தடவினான்.



"துரியா! என் அரசே! என் தோழனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்டளை இடு" பதற்றத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.



துரியன் மெல்ல இமை திறந்தான்.



"அஸ்வத்தாமா! எல்லாரும் மாண்டார்களா? என் பந்துமித்திரர் எவரேனும் எஞ்சி இருக்கிறார்களா? தர்மத்தின் பக்கம் நின்று என் ராஜ்யம் காக்க நான் முன்னெடுத்த போர் முடிந்ததா? குந்தியின் புத்திரர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபாரத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர்த்திருக்கிறேன்?"



"இல்லை துரியா! இன்னும் யுத்தம் பாக்கி இருக்கின்றது. உன் கட்டளைக்காகத்தான் காத்திருக்கிறேன். ஒரு சொல்... பாண்டவரின் வம்சத்தை வேரறுத்து வருகிறேன். இந்த யுத்தத்தின் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைகள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!"



துரியன் முகத்தில் உயிரின் மலர்ச்சி துளிர்த்தது. சற்றே உடலை அசைத்து எழுந்தான். பிளக்கப்பட்ட தொடையின் வாதையில் அவன் முகத்தில் வேதனையின் ரேகைகள். தன் குருதி கலந்த குளத்து நீரள்ளி அஸ்வத்தாமனின் கைகளில் தெளித்தான். "இக்கணம் முதல் கௌரவசேனையின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா. வஞ்சம் முடித்து வா! உன் வரவுக்காய் என் மூச்சு காத்துக் கொண்டிருக்கும்"



அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான்.



இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொள்கிறது. அது தன் கர்ப்பப்பையில் எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்கிறது. அதன் கதகதப்பில் அனைத்தும் துயில் கொள்கின்றன. ஆனால் நிராசையின், துயரத்தின், தனிமையின், துரோகத்தின் தகிப்பை, வெக்கையை உணர்ந்தவர் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்கள் இமைகள் மூடா நெடுங்கதவமாகி இரவை விழுங்கிச் செரித்துவிட முயன்றுகொண்டே இருக்கின்றன. அவர்களின் துக்கம் பெரும் ஓலமாகி தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது.



அஸ்வத்தாமன் அந்த இரவில் விழித்திருந்தான். பாண்டவர் பாசறையில் புகுந்தான். எதிர்த்தவர், உறங்கியவர் என வேறுபாடற்று இருக்க இமைகளை மூடிக்கொண்டே தன் ஆயுதங்களைப் பிரயோகித்தான். எங்கும் எழுந்த மரணஓலம் அவனை உன்மத்தனாக்கி இருந்தது. மானுடத்தின் ஆதிச் சுவையான வன்முறையை, குருதிச் சுவையை அவன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு தலை வீழும்போதும் அவன் கரங்களுக்குள் புதிய ஜீவன் பாய்ந்தது. அவன் புலன்களனைத்தும் பரிபூரண விழிப்பில் இருந்தன. அவை மரணத்தின் விளையாட்டை உணர்ந்து கிளர்ந்தன.



அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நடத்திய வேட்டை குரூரமாக இருந்தது.



'அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ...'



அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலைகள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண்ட அஸ்வத்தாமா காற்றினும் கடிதாய் விரைந்தான்.



"துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலைகளைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித்தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசியில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!"



பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற்றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட்டுகின்றன. இறுதிப்புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புலன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக்கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய்விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடுங்குகிறான்.



துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழுத்து வருகின்றது.



"மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்களின் தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்றுவருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட்டாயே!"



வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல்லை.



அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். 'பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?' மடங்கி அழத் தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ணன்.



"அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன்னும் ஏன் வஞ்சத்தோடு திரிகிறாய்! நீ பிராமணன்... கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும் பார்... மகாபாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிராசையும், தனிமையும், துரோகமும் பீடிக்கப்பட்டோர்! அதோ பார்! ஏகலைவனை... உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கும் பித்தனாய்த் திரிந்து கொண்டிருப்பதை... இன்னும்... இன்னும் துக்கத்தாலும், துரோகத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனைபேர்... அம்பை தொடங்கி,சிகண்டியும், அரவானும், கர்ணனும்... இதோ உத்தரை முடிய... வேண்டாம் அஸ்வத்தாமா... உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கிவைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்துவிடும்."



அஸ்வத்தாமா கைகூப்பினான். "இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத்தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ்வத்தாமா இறந்தான் என்று பொய்யுரைத்து குருத் துரோகத்தின்மூலம் என் தந்தையைக் கொன்றார்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமகனான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபாணியான கர்ணனைக் கொன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரியனை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்... இன்னும் பாரதயுத்தமெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சிசெய்து வந்திருக்கின்றது. கிருஷ்ணா! இனி நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். நான் போகிறேன் கிருஷ்ணா! இன்னும் சொல்கிறேன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் இறப்பதில்லை. அவர் கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. அதன் ஒலியில் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத்துக்கும் கதவடைத்துப் போடட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்"



அஸ்வத்தாமா காற்றோடு கரைந்துபோனான். யுகாந்திரங்களைத் தாண்டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ்சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான்.



அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவில்லை!

4 பேரு கிடா வெட்டுறாங்க:

பெயரில்லா சொன்னது…

அஸ்வத்தாமாக்கு இதை விட கொடுமையானத் தண்டனை வேறு உண்டோ?குறித்த நேரத்தில் சாகாமல் வாழ்வதுப் போல் ஒரு சோகம் வேறு ஏது?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிரஞ்சீவிகளில் ஒருவன் அஸ்வத்தாமா அல்லவா? அவனுக்கு ஏது மரணம்??
சாக வேண்டிய நேரத்தில் மரண்த்தைத் தழுவக்கூட கொடுத்து வைக்க வேண்டும் போல.

ஹேமா சொன்னது…

மகாபாரதத்தின் ஒரு சிறுபகுதி.அஸ்வத்மனுக்கு இறப்பேயில்லையா !

Sivakumar சொன்னது…

கோபாலா..கோபாலா..எல்லாம் உன் திருவிளையாடல்.

Related Posts with Thumbnails