ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கொங்கை முகங்குழைய... (வயதுவந்தோர் மட்டும்)



காமம்...! ஒற்றை வார்த்தையைச் சுற்றிச் சுழல்கிறது ஒழுக்கம்சார் உலகம்! காமம் என்பது வெறும் நுகர்வாய் மாற்றப்பட எதிர்விளைவாய் வெடிக்கின்றன பண்பாட்டு குண்டுகள். ஒரு பூவின் மலர்ச்சியாய் இயல்பாய் இருக்கப்பட வேண்டியது செயற்கையாய் ஊதிப் பெருக்கப்பட்டு வாழ்வின் கணந்தோறும் நிறைத்து மூச்சுமுட்ட வைக்கின்றது.

காமம் என்ற சொல் மனதில் காட்சிப்படுத்தப்படுகையில் பல திசைகளில் பாயத்துவங்குகின்றது நினைவெனும் காட்டுக்குதிரை!

காமத்திலிருந்துதான் கடவுளுக்கான பயணம் துவங்குகிறது என்கிறார் ஓஷோ. காமத்தைக் குட்டையாக்கித் தேக்கிவைக்கப்பட்ட கற்பனைகள் அழுகி நாற்றமெடுக்க சாக்கடையாய் வாழப் பழகிவிட்ட நாமோ அவரை வெறும் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம். திராவிடர்களின் ஆதிக் கலாச்சார மரபிலிருந்துதான் காமம்சார்ந்த தாந்த்ரீக விஷயங்களை உள்ளடக்கி அதர்வணவேதம் படைக்கப் பட்டது.

தந்த்ரா என்று ஒரு ரகசிய மார்க்கம் பௌத்தத்தின் ஒரு பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டது. காமத்திலிருந்து கடவுளுக்குச் செல்லும் பயணத்தின் தேடல்களை உள்ளடக்கிய தந்த்ரா இன்றும் பலரால் வியாபார நோக்கமாக மாற்றப்பட்டு வெறும் காமநுகர்வினை வர்ணக் காகிதங்களில் கட்டித் தரும் காமதேனுவாகிவிட்டது.

"Chastity is nothing but lack of opportunity" என்று வேடிக்கையாய் சொல்வார் பெர்னாட்ஷா.காமம் தவறென்று கற்பிக்கப்பட்டு பாலியல் வறட்சிக்குள் தள்ளப்பட்ட சமூகம், ரகசியமாய் "ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று புதிய வேதம் பாடிக் கொண்டிருக்கின்றது.

காமம்பாடும் இலக்கியங்களும், காமம் சொட்டும் கலைக் கோயிலகளும் செழித்திருந்த காலம் போய் கழிவறைக் கிறுக்கல்களே இலக்கியமாய்க் கற்பிதம் செய்யப்படுகின்றது.

எனக்கு ஒரு கதை நினைவிலாடுகின்றது;

ஒரு துறவியும் அவரது சீடனும் ஆற்றைக் கடக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளை. ஆற்றிலோ வெள்ளம் தலைக்குமேலே போகின்றது. நீந்திக் கடக்கலாம் என்று முடிவெடுக்கும்போது ஒரு இளம்பெண்ணின் குரல். துறவியைப்பார்த்து அவள் சொல்கிறாள் "சுவாமி! எனக்கு நீந்தத் தெரியாது. தயைசெய்து என்னையும் அக்கரை சேர்ப்பீர்களா?" அக்கரை சேர்க்கிறேன் பேர்வழி என்று  இளம்பெண்கள்மீது அக்கறை காட்டும் இக்காலத் துறவி அல்ல அவர்; நிஜமாகவே அவர் துறவி! சற்று யோசித்தவர் சரி எனச் சொல்லி அவளையும் சுமந்துகொண்டு நீந்தி அக்கரையில் இறக்கிவிட்டு வழியனுப்புகிறார்.

சிறிதுதூரம் சீடன் மௌனமாகக் குருவைத் தொடர்கிறான். பின் மெதுவாய்த் தயங்கித் தயங்கிக் கேட்கிறான் "குருவே! தாங்களோ துறவி! தாங்கள் ஒரு இளம்பெண்ணை சுமந்து வந்தது சரியா?" என்று.

மெல்லப் புன்னகைத்த குரு சொல்கிறார் " நான் அவளை அப்போதே இறக்கிவிட்டேனே? நீ இன்னுமா சுமந்து வருகிறாய்?!" என்று.

இப்படித்தான் நாமும் கணந்தோறும் காமத்தைக் கற்பனையில் சுமந்து திரிகிறோம்.

காமத்தை இயல்பாய் அதன் அழகு மிளிரப் பாடிய தமிழ் இலக்கியங்கள் கணக்கிலடங்கா.

பெரும்பாலோர் ஆணின் காமத்தை செய்வினையாகவும் (active), பெண்ணின் காமத்தை செயப்பாட்டுவினை(passive) ஆகவுமே வர்ணிக்கையில் புகழேந்திப்புலவர் நளவெண்பாவில் தமயந்தியின் காமத்தை செய்வினை (active) யாக வர்ணிக்கிறார்:

நளன் மிகப்பெரும் வீரன்! இருளைக் கிழித்துப்பாயும் மின்னல்போலப் பாய்ந்துசெல்லும் வேலைக் கொண்டவன்! போர்க்களத்தில் வீரமாய்க் களமாடும் நளனின் விம்மித்து அகன்ற மார்புகளின் மீது வனப்புமிக்க கொங்கைகளை மோதி கண்கள் தனது கூந்தலின்மேலும், நளனின் உயிர்மீதும், நீண்டு விரிந்துபோய்த் தன் செவிமீதும் அலைமோதக் காதல் பெருக்கிக் கலவிச் சண்டை செய்கின்றாளாம் தமயந்தி!

"குழைமேலுங் கோமான் உயிர்மேலுங் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள – இழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்
வல்லோடுங் கொங்கை மடுத்து."


அடுத்த பாடல் இன்னும் அழகு! என் மனதில் என்றும் நீங்காத ஒரு பாடல்!

நளனுடைய படை யானைப்படை. களங்களில் மிகுந்த பிளிறல் சத்தங்களோடு போரிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும். ஆனால் நளனுடைய அதிகாரமெல்லாம் போர்க்களங்களில் மட்டும்தான். பள்ளியறையில் நடக்கும் போரில் தமயந்தியின் போர்க்கருவிகளே ஆட்சி செய்கின்றனவாம். என்ன மாதிரியான கருவிகள்?! குங்குமமும், சந்தனமும் குழைத்துப் பூசப்பட்ட வளமையான கொங்கைகள்! காதுவரை நீண்டு பார்வையிலேயே காதலனை விழுங்கிச் செரித்துப்போடும் கண்கள்! அவளது வளையல்கள் எழுப்பும் கிண்கிணி நாதம்தான் இங்கு போர்முரசு!

பகைவர்களை எப்போதும் கொல்லும் யானைப்படைவேந்தனோடான கலவிப்போரில் அவனுடைய மார்புகளோடு மோதி அவளின் கொங்கைகள் குழைகின்றன! காரிருளாய் அவிழ்ந்து கலைந்து விரிகிறது அவள் கூந்தல்! போர்முரசாய் ஒலிக்கின்றன அவளது வளையல்கள்! காமத்தில் சிவந்த அவளது கண்கள் நீண்டு அலைபாய்கின்றன!

"கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கயற்கண் ஓடிச் செவிதடவி – அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து."


செயற்கையாய்க் குப்பிகளில் அடைக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் போன்றதல்ல காமம்! அது ஒளி புக முடியாக் காட்டுக்குள் பூத்திருக்கும் ஒற்றைப்பூ! நுகரத் தேவை, நீண்டு நெடிதான தேடல்....! துடைத்துவிட்டுத் தூக்கியெறியும் காகிதமல்ல... எல்லாம் ஒடுங்கிப் போய் மனம் அசைவற்றுப் போகும் உள்ளொளிப் பயணம்! "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்பது கடவுளுக்கல்ல.... காமத்திற்கே பொருந்தும்.

தென்றலின் மென்மையாய்த் துவங்கும் காமத்தின் பயணம் சூறைக்காற்றாய் மாறி சாத்திரக் கட்டுகளை சாய்க்கவேண்டும். பொருதிய உடல்களில் மூச்சு மட்டுமே மெல்ல ஓடிக் கொண்டிருக்க வேண்டும். மூடிய இமைகளுக்குள்ளிருந்து வழிய வேண்டும் காதலின் வெள்ளத்தில் முங்கு நீச்சல் அடித்துக் கரையேறிய நிறைவு! அணைத்திருக்கும் கரங்களுக்குள் ஒருவருக்கொருவர் உயிர் ஒடுங்கிக் கொள்ளவேண்டும்.

முத்தமிட்டுத் தீராமல் மோதிக்கொண்டே இருக்கும் கடலலைபோல் நானும் தேடிக்கொண்டே இருக்கின்றேன் நான் உள்ளொடுங்கும் தருணங்களை!

எத்தனை தேக்கியும் விழிகளுக்குத் தப்பிக் கொண்டே இருக்கின்றது குருடன் கண்ட சிற்பமாய்! கழுத்தறுபட்ட ஆட்டினின்று கொப்புளிக்கும் குருதியாய்ப் பொங்கிக் கொண்டே இருக்கின்றது தீராக்காமம்!

2 பேரு கிடா வெட்டுறாங்க:

எல் கே சொன்னது…

testing

நிகழ்காலத்தில்... சொன்னது…

காமம் என்பது அவசரகதியாக இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கறீங்க..

வாழ்த்துகள் நண்பரே

Related Posts with Thumbnails