ஞாயிறு, 20 மார்ச், 2011

காங்கிரசை தோற்கடிப்போம் #DefeatCongress in #TNae11...


எல்லா அரசியல் கட்சிகளுமே மக்கள்நலன், தேசநலன் போன்றவற்றைத் தலைமுழுகிவிட்டு ஆட்சி, அதிகாரம், பதவிசுகம், பணபேரம் என மூழ்கிக் கிடந்தாலும் காங்கிரஸ் கட்சிமட்டும் எப்போதும் ஒரு தனித்தன்மையுடனேயே வலம் வருகின்றது. கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையை ஐ.நா சபை முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்திக் காப்போம் என்றுகூறி கபளீகரம் செய்தலில் இருந்து துவங்குகிறது சுதந்திரத்துக்குப் பிறகான காங்கிரஸின் லீலைகள். தேசநலன் என்ற பெயரில் வடகிழக்கு மாகாணங்களின் நலன்களை பலிகொடுத்ததன் மூலம் தனது கொடுங்கரங்களை தேசமெங்கும் நீட்டியது. ராணுவ ஒடுக்குமுறையின்கீழ் கட்டமைக்கப்படும் எந்த தேசியமும் தேசத்தினை அமைதியாக வாழவிட்டதாக சரித்திரமே இல்லை. நாடெங்கும் வன்முறை தலைவிரித்தாட மறைமுகமாகப் பங்காற்றி ராணுவத்திற்கென பெரும்பகுதி வளங்களைச் செலவழித்து உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேசத்தினை ஓட்டாண்டியாக மாற்றியதே ஐம்பதாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சாதனை.

தமிழகத்தை எடுத்துக்கொண்டாலும்கூட இதுவரையிலும் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான காவேரி, முல்லைப்பெரியார், பாலாறு போன்றவற்றிலும், கச்சத்தீவு மற்றும் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினைகளிலும் எதிலுமே காங்கிரஸ் ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டதில்லை.

(சிறுகுறிப்பு : காமராஜர் ஆட்சிதான் அதைச் செய்தது; இதைச் செய்தது! என்று வாய்ஜாலக்குகளைக் காட்டுவது காங்கிரஸ்காரர்களின் ரத்தத்தில் ஊறிய விஷ(ய)ம்! ஆனால் காமராஜர் அந்த இயக்கத்தில் ஒரு விதிவிலக்கு. அப்படிப்பட்ட காமராஜரையே அவரது இறுதிக்காலத்தில் தலையால் தண்ணிகுடிக்க வைத்த மகானுபாவர்கள்தான் இந்த காங்கிரஸ்காரர்கள். தனது இறுதிக்காலத்தில் காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ்காரனாக அல்ல; ஸ்தாபன காங்கிரஸ்காரனாகவே இறந்தார். இந்த விஷயங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் ஞாபகமறதியின் பாற்பட்ட அலாதி நம்பிக்கையில் மூடிமறைத்துவிட்டு 'காமராஜர்' ஆட்சி என்று பசப்புவார்கள்.)

இறுதியாக ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக ஒன்றரைலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவிக்க சிங்கள அரசுக்கு துணையாக மட்டுமன்றி, அந்த பச்சைப்படுகொலைகளில் மறைமுகப் பங்கெடுப்பாளர்களாகவும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது என்பதை சமீபத்தைய விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரியப்படுத்தியுள்ளன.

தமிழினத்தையே கருவறுத்த காங்கிரஸ் கட்சி, தமிழ்மீனவன் தனது கெண்டைக்கால் ரோமத்துக்குச் சமம் என்று அலட்சியமாய்ப் புன்னகைக்கும் காங்கிரஸ் கட்சி, இதோ மீண்டும் ஒருமுறை நமது ஞாபகமறதிமீது அதீத நம்பிக்கை வைத்து ஓட்டுகேட்டு வீதிகளில் பவனி வரத் தொடங்கிவிட்டது.

தலைப்பாகைப் பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேசாவிட்டால் சீக்கியன் விரட்டி விரட்டி அடிப்பான்! தெலுங்கானா உரிமைப்போராட்டத்தில் அயோக்கியத்தனம் செய்தால் தெலுங்கன் துரத்தித் துரத்தி வெட்டுவான் என்கிற பயம் இருந்ததால்தான் அந்தந்த மாநிலங்களிலெல்லாம் காங்கிரஸ் பூனை வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்தது. இங்கும் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இல்லாமல் துரத்தப்பட்டால்தான் தமிழனுக்கும் சூடி,சொரணை மிச்சமிருக்கிறது என்பது காங்கிரஸ் புத்திஜீவிகளின் மண்டையில் உறைக்கும்.

வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் பாடம் கற்பிக்காவிட்டால் 'என்ன செய்தாலும் தமிழ்நாட்டானுக்கு உறைக்காது' என்கிற திமிர் ஊறிப்போய்விடும்.

ட்விட்டரில் ஏற்கனவே #defeatcongress என்று செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இணையத்தில் காங்கிரஸை எதிர்க்கும் அதேசமயம் வீதிகளிலும் இறங்குவோம்.

இணையநண்பர்கள் நேற்று மாலை தி.நகரில் ஒன்றுகூடி இது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டோம். அதுபற்றிய தெளிவான இடுகை ஒன்றை கேஆர்பி.செந்தில் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.நண்பர்களின் பங்களிப்பை இன்னும் எதிர்பார்க்கிறோம்

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு காங்கிரஸும் அவசியமற்றவை நண்பர்களே! விரட்டுவோம் காங்கிரஸை திருத்தணிக்கு அப்பால்!

4 பேரு கிடா வெட்டுறாங்க:

பெயரில்லா சொன்னது…

//விரட்டுவோம் காங்கிரஸை திருத்தணிக்கு அப்பால்!//
நல்ல முயற்சி...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ஆந்திராவிலும் ஆப்புத்தான்..

Unknown சொன்னது…

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு காங்கிரஸும் அவசியமற்றவை நண்பர்களே! விரட்டுவோம் காங்கிரஸை திருத்தணிக்கு அப்பால்

ராஜவம்சம் சொன்னது…

நல்ல விசயம் தான் நண்பா அதே நேரத்தில் இதனால் யாருக்கு லாபம் என்று நினைத்தீர்களா?

மறைமுகமாக ஜெ வுக்கு ஆதரவு அளிப்பது போல் ஒரு தோற்றம்.

இருந்தாலும் விசயம் உண்மையாக இருப்பதால் ஒரு ஓட்டு போட்டிருக்கேன்.

தமிழ்பாலா சொன்னது…

தமிழ் இன உணர்வு உள்ள எவரும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.ஈழத் தமிழர்கள் எண்ணிறந்த பேர்கள் இறந்துபோனதற்கு காங்கிரசும் ஒருவகையில் காரணம்தான் என்பதால் காங்கிரசுக்கு [0] பூஜ்யம் என்று நாம் போட்டால் தான் தமிழரின் மனக்குமுறல் என்ன என்று காங்கிரசு ஆட்சியாளர்களுக்குப் புரியும் ,தமிழக மக்கள் புரியவைப்பார்கள்!

Related Posts with Thumbnails