செவ்வாய், 31 ஜனவரி, 2012

லவ்வு கவுஜ..


விமலா கமலா
அமலா சுமலா
எல்லோருமே அழகிகள்தான்
எவளைக் காதலிக்கலாமென்று
யோசித்துக் கொண்டிருந்தவேளை
விமலா கெமிஸ்ட்ரி வாத்தியாரோடும்
கமலா கண்கள் கருவாயன் மேலும்
அமலா மட்டும் அப்பாசொல்படி
அம்மி மிதிக்க
சுமலாவிடம் கேட்டேன்
"சும்மா லவ் பண்ணலாமா?"
சுமலா சொன்னாள்
"டூ லேட். டு லெட் போர்டு கழற்றி
நாலு நாளாச்சு"

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் 4


ரொம்ப காலமாச்சுது என் ப்ளாக்கைத் தொறந்து. கூகிள் பஸ்ல டெண்டடிச்ச பொறவு ப்ளாக் பக்கம் வரவே மனசு தோணலை. கூகிள் பஸ் ஒரு குறும்புக் குழந்தை. சிலீர்னு சிரிக்கும்.. அப்பிடியே அசந்த நேரம் பாத்து வெரலைக் கடிச்சி வைக்கும்.. தோணிச்சின்னா நம்ம மேல ஒண்ணுக்கடிக்கவும் செய்யும். துறுதுறுன்னு ஓடியாடி எல்லாத்தையும் கலைச்சிப் போட்டுக் கெறங்கடிக்கும். அது ஒரு அனுபவம்டா சாமீ! திடீர்னு ஒரு நாளு குழந்தை திடீர்னு காணாமப் போயிடிச்சி. அழுவுற புள்ள வாயில குச்சிமுட்டாய சொருவுற மாதிரி கூகிள் ப்ளஸ்னு ஒன்னைச் சொருவிட்டானுங்க கூகிள் காரனுங்க. அப்டியே ஒரு மாதிரி சமாளிச்சி அட்ஜஸ்ட் பண்ணி ப்ளஸ்லயும் ஓட ஆரமிச்சாச்சின்னு வைங்களேன். நேத்திக்கு ஏதோ தேடப்போயி நம்ம பபாஷா ப்ளாக் பக்கம் மேய்ஞ்சிட்டு இருந்தப்ப "மூன்றாவது பெர்த்- உமா சீரிஸ் 3" ரிலே ரேஸ் கதை கண்ணுக்குப் பட்டிச்சி. ரெண்டு மூணு மாசம் முன்னாடி இருக்கும்னு நினைக்கிறேன். மணிஜியோட ஃபேவரைட் உமாவை வெச்சி ஒரு ரிலே ரேஸ் தொடர்கதை எழுதலாமேன்னு மணிஜி ஒரு ஸ்பார்க்கைக் கெளப்ப விதூஷ் தூபம் போட, விதூஷ், மணிஜி, பபாஷா, நேசமித்திரன், நம்ம பாரா சித்தப்பூ, மனசை அள்ளுறா மாதிரி கவிமழை பொழியிற லதாமகன், அப்புறம் நானு எல்லாருமா இந்த ரிலே ரேஸ் தொடரை எழுதலாம்னு ஒரு பேச்சி. நான் அப்டியே மறந்து தொலைச்சிட்டேன். மப்புல பேசுறது எது நம்மளுக்கு ஞாவகம் இருக்கு. இப்பப் பாத்தா அப்டியே ஆடி மாசக்காவேரி மாதிரி அலை அலையா பொரளுற கூந்தலை அசால்ட்டா ஒத்தக்கையால ஒதுக்கிக்கிட்டு அச்சு அசலா முன்னாடி வந்து நிக்கிறா உமா. "சம்முவம்..எட்றா வண்டிய"ன்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். இதோ "மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் 4".

மொதோ மூணு பார்ட்டும் படிக்க அப்டியே இங்கிட்டு போங்க..

விதூஷ் : மூன்றாவது பர்த் (உமா சீரிஸ் - ரிலே ரேஸ் கதை) 

மணிஜி: மூன்றாவது பர்த் ...உமா சீரிஸ் -2 

பலாபட்டறை ஷங்கர்: மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3. 

***********************************************************************************



..."ரகுநாதன்" என்றான் ஸ்வீட்டாக!

பெண்களிடம், அதுவும் என்னை மாதிரி அழகான பெண்களிடம் பேசும்போது மட்டும் ஆணின் குரல் அபாரக் குழைவைப் பெற்றுவிடுவது எனக்கு எப்போதும் ஆச்சர்யம்தான். அபூர்வமாக, குரலில் வேண்டுமென்றே கொஞ்சம் கடுமையை ஏற்றிக்கொண்டு பேசும் ஆண்கள்கூட 'தப்பித்துக் கொள்ளும்' மனோபாவத்தில் பேசுவதாக எனக்குத் தோன்றுவது அங்குமிங்கும் நான் அரைகுறையாகப் படித்த ஃப்ராய்டின் பாதிப்பால்கூட இருக்கலாம். எனக்கு மீண்டும் இந்த ரிலே ரேஸ் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் மணிஜி குறிப்பிட்ட "கன்னியர் தம் கடைக்கண்ணை காட்டி விட்டால் காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம் “ வரி ஓடத் துவங்கியது. முதல் அத்தியாயத்தைத் தொடங்கி என்னை மீண்டும் 'லைம்லைட்'டுக்குக் கொண்டுவந்த விதூஷுக்கு வேறு உடம்பு சரியில்லையாம். சென்னை போய் இறங்கிய பின் ஒரு தடவை நேரில் சென்று நலம் விசாரித்துவர வேண்டும்.

இப்போது முழுசாக அவனை நோட்டம் விட்டேன். ஆள் ஜம்மென்றுதான் இருக்கிறான். முகத்தில் ஒரு 'ஃப்ரீக் அவுட் பாய்'க்கான குறும்பும், தன்னம்பிக்கையானவன் என்பதற்கான வெளிச்சமும் சரிசமமாகப் பரவி இருந்தது. பெரும்பாலான பெண்களுக்கு இந்த மாதிரி மிக்ஸிங்கில் இருக்கும் ஆண்களை மிகவும் பிடித்துவிடும் இல்லையா? எனக்கும்தான்! அச்சச்சோ.. நீங்கள் விபரீதமாக எதையும் கற்பனை செய்து தொலைத்து விடாதீர்கள்.. நீங்கள் நினைப்பதுபோல இல்லை. அவ்வப்போது என்னைப் பார்த்து ஏதோ யோசிக்கிறான் போல!

வழக்கமாக என்ன யோசிப்பார்கள்?

"அழகான பெண்களுக்கு வாய்க்கும் புருஷன்மார்களெல்லாம் முன்வழுக்கையோடும், சரிந்த தொந்தியோடும் இருப்பார்கள்" என்றுதான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன். புருஷன் இடத்தில் தன்னை ரீப்ளேஸ் செய்துகொள்ளும் தற்காலிக சந்தோஷம்! அவ்வளவு ஈஸியா என்ன ஒரு பெண்ணை விழவைப்பது? ச்சை! ரொம்பவும்தான் ஃப்ராய்டுத்தனமாக யோசிக்கிறேன்.

"என்னங்க.. பேரைக் கேட்டீங்க, அப்டியே யோசனையில ஆழ்ந்துட்டீங்க போல! என் பேருல ஏதாச்சும் விசேஷம் இருக்குதா என்ன?"

தூண்டில்!தூண்டில்!!

"இல்லைங்க ரகு! சும்மாதான்!"

ரகு.. ரகு.. பேரைச் சுருக்கிக் கூப்பிட்டாச்சு..செத்தான் இனி!

"தாங்க்ஸ்ங்க" என்றான்.

"எதுக்கு?"

"ரகுன்னு ஷார்ட்டா கூப்டதுக்கு" என்று சிரித்தான். ரோஸ் நிறத்தில்.. பளீரென்று...இன்னும் சிகரெட்டால் கற்பழிக்கப்படாத ஆரோக்கிய ஈறுகள்... கிள்ளலாம் போல!

"யூ ஆர் சச் அன் இண்ட்ரஸ்ட்டிங் கோ பேஸஞ்சர் ரகு"

மீண்டும் சிரித்தான்.

ரமணனின் ட்ரேட் மார்க் சிரிப்பு!

பாவி..ரமணா! இத்தனை வருஷங்கள் ஓடிய பிறகும்.. நொடிக்கு நொடி..  பாரதிக்கு நந்தலாலா.. எனக்கு ரமணன்

     "கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
      கீதம் இசைக்குதடா நந்தலாலா"



 [ காக்கைச் சிறகினிலே - துள்ளாத மனமும் துள்ளும்]

லேசாகப் பொங்கித் தளும்பி சின்னக் கோடாய்க் கன்னம் வழியே கீழிறங்கியது.

"ஹலோ! என்னாச்சுங்க... திடீர்னு?"

ரகுவின் குரல் மீண்டும் ட்ரெய்னுக்குள் இழுத்து வந்தது.

"நத்திங் ரகு. திடீர்னு என்னென்னமோ ஞாபகம். ஸாரி..வெரி ஸாரி"

ஜன்னல் கம்பிகளில் கன்னத்தைச் சாய்த்து ஒரு கையை முட்டுக்கொடுத்தபடி பார்வையை வெளியே மாற்றினேன். அசுரவேகத்தில் ரிவர்ஸில் ஓடிக் கொண்டிருந்த வெளிச்சப்புள்ளிகள்.. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ரமணன். "“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்ற ரமணன்... " தமிழால் மட்டும் இல்லையடி பெண்ணே.. உன்னாலும்தான்" என்று குறும்பாய்ச் சிரித்த ரமணன்... கம்பனையும் ஷெல்லியையும் காதலிக்கக் கற்றுத்தந்த ரமணன்... ஃப்ராய்டு,நீட்ஷே, சார்த்தர், நெரூதா என்று ஜன்னல்களை விரியத் திறந்த ரமணன்...

களிமண்ணாய் இருந்த உமாவைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ரமணன்...

மூளைச் சிதறல்கள் சுற்றிலும் தெறித்துக் கிடக்க வெறித்துப்போன விழிகளுடன் மல்லாந்து கிடந்த என் ரமணன்...

எனக்கு அழவேண்டும் போல இருந்தது.

மெல்ல எழுந்து நடந்து பாத்ரூமை நெருங்கி, உள்நுழைந்து தாழ்ப்பாளிட்டேன்.

ஒரு பாட்டம் அழுதுதீர்த்து, முகம் கழுவித் துடைத்துக்கொண்டு பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.

அங்கே... அங்கே...


டிஸ்கி: இந்த ரிலே ரேஸ் கதையின் அடுத்த பாகத்தைத் தொடர கூகிள் பஸ், ப்ளஸின் டான் அண்ணன் ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி முன் வந்திருக்கிறார். மேலும் பாரா சித்தப்பூ, நேசன், லதாமகன் ஆகியோரையும் அழைக்கிறேன்

சனி, 23 ஜூலை, 2011

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-2




எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோதுஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.அந்த கொடூரமான குற்றச்சாட்டு அடங்கிய 'இந்தியா டுடே' தமிழ்வார இதழை இணைத்துள்ளேன். தயைகூர்ந்து முழுமையாக வாசித்துப் பாருங்கள்.

என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல்நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த டி.ஐ.ஜி (DIG) இராஜூ அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப் படிப்பு (DECE) படித்தவன் என்றபோது அவர் கேட்டார் "நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா?" - இதை முன்பே எனது முறையீட்டுமடலில் குறிப்பிட்டிருக்கிறேன். இதையே அன்று ஏடுகள் மூலம் பிரச்சாரம் செய்தனர். அதன் ஒரு உதாரணமே மேற்சொன்ன 'இந்தியா டிடே'.

எனது பெற்றோர் கல்வி ஒன்றே பெரும் சொத்தெனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்கவே உண்மையான ஈடுபாட்டுடன் படித்தேன். அதன் காரணமாகவே நல்ல மாணவன் என்ற பெயருடன் எனது 10ஆம் வகுப்பையும் மின்னணுவியல் (DECE) படிப்பையும் நிறைவு செய்தேன்.

எனது ஆசிரியர்கள் எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்தனரே தவிர குண்டு செய்வதற்குச் சொல்லித்தரவில்லை. எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தார்க்கும் பயன்பட்டதோ இல்லையோ புலனாய்வுத்துறையினருக்கு இவ்வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்து தூக்குமேடையில் நிறுத்தப் பயன்பட்டது என்றுதான் சொல்வேன்.

எந்த 'இந்தியா டுடே' மூலம் என்னை வெடிகுண்டு நிபுணர் என1991ல் பொய்ப்பிரச்சாரம் செய்தனரோ, அதே ஏடு, 1996ஆம் ஆண்டு 'துப்பில் துவாரங்கள்' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை தீட்டியது. அக்கட்டுரை புலனாய்வுத்துறையினர் (CBI, SIT) செய்துள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, 'வெடிகுண்டு குறித்தும் எந்தப் புலனாய்வும் செய்யப்படவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளது.

புலனாய்வுத்துறையினரின் விசாரணையை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக 'இந்தியா டுடே' இதழ்மீது அன்று சிறப்பு நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர் என்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

அவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்ட எனது கல்வி, இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நான் எத்தனை தூரம் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை இது தொடர்பான ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எனது வழக்கு முழுக்க முழுக்க தடா ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புக் கூறப்பட்டது. இது குறித்துத் தீர்ப்புரை பக்கம் - 2660 பத்தி (Para) 80இல், கீழ்க்கண்டவாறு உள்ளது.

80.மேற்கூறிய முக்கிய சர்ச்சையில் முடிவு காண்பதற்கு, ரசு தரப்பானது மேல்முறையீட்டாளர்கள் பலரும் அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்களையே நம்பியுள்ளது.இந்த வாக்குமூலங்கள் தடாச்சட்டத்தின் பிரிவு 15-ன் படி பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

என்றும், பக்கம்: 2843 பத்தி 658 இல் கீழ்க்கண்டவாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

658. திரு.ராஜீவ்காந்தியைக் கொலை செய்யச் சதி புரிந்த குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எதிரிகள் அளித்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையே முக்கியமாக நம்பியுள்ளனர்; இந்த வாக்குமூலங்கள் தடாச் சட்டத்தின் 15(1) பிரிவின்படி பதிவு செய்யப்பட்டவையாகும்.

ஆகையால் தடா ஒப்புதல் வாக்குமூலமே முதன்மை ஆதாரமாக(Substantive Evidence)க் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்'தடா' வாக்குமூலங்களை நிரூபிக்கத் துணை ஆதாரங்களாகவே (Corroborative Evidence) மற்றவை பயன்படுத்தப்பட்டன. நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்சொன்ன கருத்தின் அடிப்படையிலேயே என் வாதத்தை முன்வைக்கிறேன்.

1.9 வோல்ட் மின்கலம் குறித்து எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுவதில் உள்ள வாசகங்களை அப்படியே தர விரும்புகின்றேன்.

"மேலும் நான் 9 வோல்ட் மின்கலம் இரண்டு (Golden Power) வாங்கி சிவராசனிடம் கொடுத்தேன். இவைகளைத்தான் அவர் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தினர்.

இவ்வழக்கில் 9 வோல்ட் மின்கலம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் .அ.சா 91 மொய்தீன், அ.சா 252 சீனிவாசன், அ.சா. 257 மேஜர் சபர்வாள், அ.சா 280 சந்திரசேகரன் ஆகியோர் ஆகும். இவர்களில் அ.சா252, அ.சா 257, அ.சா 280 ஆகியோர் தடயவியல் நிபுணர்கள். அவர்கள் சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 வோல்ட் மின்கலம் பற்றி நிபுணத்துவக் கருத்து (Expert Opinion) மட்டுமே அளித்துள்ளனர். எனவே அவர்களுடைய சாட்சியம் எனது வழக்கை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.

அ.சா 91 மொய்தீன் என்ற கடை ஊழியரின் சாட்சியம்மட்டுமே என் வழக்கோடு தொடர்புபடுத்தி வருகிறது. அவரது சாட்சியத்தையும், அவரை விசாரித்து வாக்குமூலம் பதிசு செய்ததாகக்கூறும் ஆய்வாளர் அ.சா 266 வெங்கடேசன் சாட்சியத்தின் தொடர்புடைய பகுதியையும் உங்களது பரிசீலனைக்குத் தருகிறேன்.

இவ்வழக்கில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட 288 அரசு சாட்சியங்களில், மேற்சொன்ன ஒரே சாட்சியான அ.சா 91 மொய்தீன் நம்பகத்தன்மை குறித்து மட்டுமே உச்சநீதிமன்றத்தில் 25 மனுதாரர்களின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் தனது வாதுரையை எடுத்துரைத்தார் என்பதைத் தங்களது பார்வைக்குத் தருகிறேன்.

மேற்சொன்ன இரண்டு சாட்சிகளான அ.சா 91, அ.சா 266 ஆகியோரின் சாட்சியத்தைப் படிக்கும்போது தாங்களே உணர்வீர்கள் அ.சா 91 எத்தனை பொய்யான சாட்சியம் என்பதை. முறிப்பாக அ.சா266 கூறுவதுபோல் அ.சா 91 இன் கடையில் மின்கலம் வாங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் எதையும் நான் கொடுக்கவில்லை என்பதால்தான் அவ்வாறான எந்த வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினரால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால்தான் அ.சா 266 தனது முதல்விசாரணை பக்கம் 6இல் 16-08-1991 அன்று நான் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அவரே மீண்டும் முரண்பாடாக பக்கம் 15இல் 15-08-1991 என்றும் மாற்றி மாற்றிக் கூறுகிறார்.

2. வழக்கின் மிக முக்கியமான ஆவணமாக, ஆதாரமாக அரசு தரப்பால் காட்டப்படுவதும், உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுவதுமான 7-5-1991 தேதியிட்ட ஒயர்லெஸ் செய்தி (Exh. P-392) குறித்த தீர்ப்புரைகளில் வரும் பகுதிகளைக் கீழே தருகிறேன்.

முதல் எதிரி நளினி குறித்த வழக்கைப் பற்றி விவாதிக்கும்போது நீதியரசர் வாத்வா, பத்தி. 429, 430 இல் (State of Tamilnadu Vs Nalini and Ors AIR 1999 SC 2640)-

429. 7-5-1991இல் சிவராசன், சென்னையிலிருந்து இலங்கையில் இருக்கும் பொட்டு அம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பிய ஒரு சங்கேதச்செய்தியை விண்டு பார்த்தபோது பின்வருமாறு உள்ளது: 'அந்தப்பெண் இந்து மாஸ்டர் இல்லத்தில் மூத்த மகள் ஆவாள். நமது நோக்கம் எங்கள் மூவரைத் தவிர யாருக்கும் தெரியாது. அதிகாரத்துக்கு வரப்போகும் கட்சியின் ஆதரவைப் பெறுவதுதான் நோக்கம் என நான் அந்தப் பெண்ணுக்கும் சொல்லி இருக்கிறேன். இங்கு வி.பி.சிங் வருகிறார். நாங்கள் வரவேற்போம். இதேபோல் எல்லாத் தலைவர்களையும் வரவேற்போம்.

நான் பையப்பைய நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நமது நோக்கத்தை நான் சொலிவிட்டால், அந்தப்பெண் உறுதியாக நம் பக்கம் நிற்பார் என்பதில் ஐயமில்லை.

நாங்கள் அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகி வருகிறோம். எங்களுக்கு முழு மனநிறைவு உள்ளது. நோக்கத்தை அவரிடம் வெளிப்படுத்தலாம். அவரை நம்பலாம் என்று பெண்கள் சொல்கிறார்கள்.

நான் திரும்பி வந்தால் உங்கள் ஆளாகத் திரும்பி வருவேன். நாம் தூள் வணிகத்தில் வலுவாக இருக்கிறோம்.'

430. இந்த மூத்த மகள் என்பது நளினி(ஏ1)யைக் குறிக்கும். இந்து மாஸ்டர் முருகனை(ஏ3)க் குறிக்கும்

...தொடரும்.

வியாழன், 21 ஜூலை, 2011

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-1




பதிவுலகம் பக்கம் வந்து நீண்ட காலமாகிவிட்டது. எதையும் தொடர்ந்தாற்போல் சற்றுநேரம் சிந்திக்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்ததே காரணம். வெறுமனே கூகிள் பஸ்ஸில் கும்மியடித்துக் கொண்டிருந்துவிட்டேன். தொடர்ந்தாற்போல ஒரு நல்ல கட்டுரையையோ, கதையையோகூட வாசிக்கும் அளவு மனதை ஒழுங்கு செய்ய இயலவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் மிகவும் வைராக்கியத்துடன் ஒரு புத்தகத்தை வாசித்திருந்தேன். என் மனதில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்திய புத்தகங்களுள் அது முக்கியமான ஒன்று!

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தனது வாழ்வின் மிகப்பெரும் பகுதியை சிறைப்பறவையாகவே கழித்துக் கொண்டிருக்கும் பேரறிவாளனின் "தூக்குக்கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற நூல்தான் அது. அதனை தமிழ் இணையவாசிகள் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. என்னால் ஒரு பத்துபேர் அந்தப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால், அது என் பாக்கியம் எனக் கருதி அந்த நூலை தட்டச்சு செய்து எனது வலைப்பூவில் ஏற்றுகிறேன். ஒரு சிறு துரும்பாக எனது பணி அமையும் என்று கருதுகிறேன்.

இந்த நூலுக்கு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களும், நீதியரசர் எச்.சுரேஷ் அவர்களும் எழுதிய அணிந்துரைகளை இத்தொடரின் கடைசியில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.

எனது கருத்துக்கள் போதும். இனி, புத்தகத்துக்குள் நுழையலாம்.

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். - அ.ஞா.பேரறிவாளன், மரணதண்டனைச் சிறைவாசி, த.சி.எண். 13906, நடுவண் சிறை, வேலூர்-2.

மதிப்பிற்குரிய அம்மா/அய்யா! வணக்கம்!

நான் அ.ஞா.பேரறிவாளன்.ராஜீவ் கொலைவழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரணதண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன்.எனது கருணைமனு மேதகு குடியரசுத்தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதுச் சிறுவனாக அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 14 1/2 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப்பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்காப்புப்போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.

துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தங்களைப்போன்ற மனிதநேய உள்ளங்களின் துணை இருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உண்டு. ஏற்கனவே நான் கைது செய்யப்பட்டதன் பின்னணி, சட்டப்புறம்பான காவல், துன்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் பெற்ற முறை, வாக்குமூலம் தொடர்பான முரண்பாடுகள், சிறைத்துன்பங்கள் எனப் பல்வேறு செய்திகளை உள்ளடக்கி, முறையீட்டுமடல் ஒன்றை 1999-2009 ஆண்டுக் காலப்பகுதியில் தங்களுக்கு அனுப்பி இருந்தேன். (இணைப்பு-1)

அம்மடலோடு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள முரண்பாடுகள், பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டி ஒரு ஆவணமும் இணைத்திருந்தேன். (இணைப்பு-2) அவற்றில் எனது தரப்பின் நியாயத்தைப் படித்துணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்நிலையில் மீண்டும் ஒரு மடல் எழுதக்காரணம், மரணதண்டனைத் துன்பத்தோடு 14 1/2 ஆண்டுகளின் பின்னும் சிறைவாழ்வு நீடிக்கிறதே என்பதால் மட்டுமல்ல. இருவேறு முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இம்மடல் எழுதுகிறேன்.

முதலாவது காரணம், மேதகு குடியரசுத் தலைவர் எமக்குக் கருணை காட்டும்படி அரசுக்குப் பரிந்துரைத்த செய்தி அறிந்தபின் கொண்ட நம்பிக்கையும், மகிழ்ச்சியும்.

மேதகு குடியரசுத்தலைவர் அவர்களின் பரிந்துரையோடு, 1999 ஆம் ஆண்டில் திருமதி சோனியா அவர்கள் எம் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நான் உள்ளிட்ட நால்வருக்கும் தண்டனையை நிறைவேற்றுவதில், தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ விருப்பம் இல்லை எனச்சொல்லி, மேதகு குடியரசுத்தலைவர் அவர்களுக்கு எழுதிய மடல், எனது தண்டனையை மாற்றியமைத்துவிடும் என்ற நம்பிக்கையை மேலும் வலுவாக்கியுள்ளது.

தற்போதைய அரசு திருமதி சோனியா அவர்களின் தலைமையிலான கூட்டணி அரசு என்பதால் அவரது விருப்பத்தைப் பிரதிபலிப்பதாகவும் மனிதநேயக் கண்ணோட்டத்தோடு மேதகு குடியரசுத் தலைவர் எடுத்துள்ள நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அரசின் பரிந்துரை அமையும் என்ற நம்பிக்கையோடு உள்ளேன்.

இம்முறையீட்டுமடலுக்கான இரண்டாவது மிக முக்கியக் காரணம், எமது வழக்கில் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகவும், பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் (MDMA) அதிகாரியாகவும் அங்கம் வகித்து இவ்வாண்டின் (2005) மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு.இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, 'குறுந்தகடு' (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு வழங்கிய பேட்டியே.

10-08-2005 தேதியிட்ட 'குமுதம்' வார இதழின் பேட்டியின் இறுதியில் திரு.இரகோத்தமன் சொல்கிறார்-

"கொலை நடந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை" என்கிறார் இரகோத்தமன். அவை "ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கொலைக்குப் பிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் தப்புகிறார்கள். அவர்களுடன் மூன்றாவது நபர் ஒருவரும் பயணிக்கிறார். அவர் யார் என்பது இன்றுவரை தெரியவில்லை.

மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய வெடிகுண்டு பெல்ட்டைத் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை."

உங்களில் யாருக்காவது தெரியுமா?

31-07-2005 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழின் பேட்டியில் இறுதிக்கேள்வியும் அவரின் பதிலும்:

"ராஜீவ் கொலைவழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா?"

"ஒரே ஒரு விஷயம் இருக்கிறது... தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு 'பெல்ட்'டைச் செய்து கொடுத்த நபர் யார்... என்கிற விஷயம்தான்!"

ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள, பல்நோக்குக் கண்காணிப்புக்குழு (MDMA) விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தியிருக்கிறது.

...தொடரும்

புதன், 18 மே, 2011

கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட... (வயதுவந்தோர் மட்டும்)




இப்பல்லாம் ப்ளாக் பக்கம் எட்டிப் பாக்குறதே இல்ல. முழுநேர கூகிள் பஸ்ஸராயிட்டேன்.அரட்டைக்கு அரட்டை, விவாதத்துக்கு விவாதம், நட்புக்கு நட்பு, ஜாலிக்கு ஜாலின்னு எல்லாமே தெகட்டத் தெகட்ட கிடைக்குது. அதுவும் கொஞ்சநாளா நைட் சர்வீஸ் பஸ் வுடுறேன் பேர்வழின்னு தமிழிலக்கியப்பாடல்களா எடுத்து செம்ம அரட்டை. இன்னிக்கு நைட் சர்வீஸ் பஸ்சு 18 +னு வெச்சிக்கிட்டு குற்றாலக்குறவஞ்சில இருந்து கொஞ்சம் பாட்டை எடுத்து அரட்டை அடிக்க ஆரமிச்சேன். பஸ் உலக நண்பர்களின் ஆலோசனைப்படி அதை எடுத்து இங்க பதிவா போடுறேன்.

சிற்றிலக்கியங்கள்ல குற்றாலக்குறவஞ்சியும் ஒண்ணு. ரொம்ப இண்ட்ரஸ்டிங். அதுல இருந்து சில பகுதிகள்:

குறிசொல்லும் குறவனும், குறத்தியும் ஊடல்கொண்டாடும் பாட்டுக்கள். குறவன் காதல் பித்தேறித் தவிக்கிறான். குறத்தி அவனை எள்ளிச் சிரிக்கிறாள்.


குன்றத்தைப் பார்த்தால் கொடியிடை தாங்குமோ சிங்கி! தன்
கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா!

குன்றுமாதிரி நிமிர்ந்து நிக்கிற உன் கொங்கைகளைப் பாத்தாலே மலைப்பாய் இருக்கிறதடி சிங்கி!. சின்னக்கொடி போன்ற இடை எப்டியடி இவ்ளோ கனத்தைத் தாங்கும்?!

சிங்கி சொல்றா:

யோவ்! அதப்பத்தி நீ என்னாத்துக்கு கவலைப்படுற. சுரைக்காய் காய்ச்சிருக்குற செடிக்கு சுரைக்காய் பாரமா என்ன? போவியா வேலைய பாத்துக்கிட்டு!

இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்நீ சிங்கி! நாட்டில்
நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா!

முன்னாடியெல்லாம் இப்டி நெளிவு சுளிவா ஒனக்கு பேச வராதேடி சிங்கி! எப்டிடி இப்போ மட்டும் என்னாமா தளுக்கி குலுக்கி பேசுற! எங்க போய்டி கத்துகிட்ட இதெல்லாம்?!

உன்னைமாரி ஊட்ல குழிபறிச்சிட்டு இருந்தா ஆவுமாய்யா! நாடு,நகரம்னு நாலு எடம் சுத்தி நாலு நல்ல மனுசன், பெரிய மனுசனைப் பாத்து குறி சொல்லிட்டு வாரப்ப, அவங்ககிட்ட இருந்து நல்ல விஷயமா நாலு கத்துக்கிட்டு வரலாம்யா!

பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி! நடுப்
பட்டப் பகலில்நான் எட்டிக் கொடுப்பேனா சிங்கா!

பொட்டில கெடக்குற பாம்புமேரி என்னா அழகா வளைஞ்சு சுருண்டு இருக்குற உன்னோட பெண்மைய மோகத்துல ஆடவைக்க வேண்டாமாடி என் செல்லச் சிங்கி?!

யோவ்! என்னய்யா மனுசன் நீ! எந்த மறைப்பும் இல்லாத வெட்டவெளியில நல்ல சாதிப் பாம்பா இருந்தா ஆடுமாய்யா? ஒனக்குத்தான் புத்திகெட்டு அலையிதுனா நானுமா அலையணும்! மருவாதியா அப்பால போயிடு!

கட்டிக்கொண் டேசற்றே முத்தம் கொடுக்கவா சிங்கி! நடுப்
பட்டப் பகலில்நான் எட்டிக் கொடுப்பேனா சிங்கா!

சரி அத வுடு! கொஞ்சநேரம் உன்னைக் கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒரு முத்தமாவது கொடுத்துக்கிறேனேடி சிங்கி!

என்னாது! முத்தமா? யோவ்! பட்டப்பகல்ல வேலவெட்டிய பாக்காம பேசுற பேச்சாய்யா இது? வெக்கங்கெட்ட மனுசா! மொதல்ல நீ எடத்த காலி பண்ணு. போ போ

முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி! காம
மட்டுப் படாவிடில் மண்ணோட முட்டடா சிங்கா

ஏண்டி சிங்கி! ஆனைக்குட்டிங்க மேரி இருக்குதுங்களே ஒன்னோட மாருங்க! என்னோட தலையால முட்டிப் பாக்கணும்னு தோணுதுடி! முட்டிப்பாக்கவா?

இந்தாய்யா! இந்த இழுவயெல்லாம் எங்கிட்ட ஆவாது. ஒனக்கு அரிப்பெடுத்தா தோ இருக்கு பாரு மண்ணுமுட்டு! அதுல போயி முட்டிக்க போ!

சேலை உடைதனைச் சற்றே நெகிழ்க்கவோ சிங்கி! சும்மா
நாலுபேர் முன்எனை நாணம் குலையாதே சிங்கா

ஏண்டி சிங்கி! சீலைத்துணிய இம்புட்டு இறுக்கமாவா கட்டுவ? இந்தா பாரு, தோலு எப்பிடி செவந்திருக்கு! நான் வேணா கொஞ்சம் லேச தளத்தி வுடவாடி?

ந்தே! அந்தாண்ட போ மொதல்ல! நாலு மக்கமனுசங்க இருக்குற எடத்துல என் மானத்த வாங்குறதே ஒனக்கு வேலையா போச்சு

பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி! மனப்
போதம் வருடிப்போய்ப் பூனையைக் குத்தடா சிங்கா

அடியே என் சிங்காரி! என்னால இதுக்கு மேல தாங்காது! நீயும் ஊரு ஒலகம்லாம் சுத்தி வந்துருப்பே! வாடி, உன்னோட காலை மெதுவா புடிச்சி வுடுறேன். அப்புறமா ஆகவேண்டிய 'முக்கிய'மானதை ஆரமிக்கலாம்.

யோவ்! ஒடம்புபூரா கொழுப்பேறித்தான் முறுக்கிக்கிட்டு திரியிற. ஒருத்தி ஊரெல்லாம் சுத்தி களைச்சிப்போயி வந்தா.... போயி அந்தால ஓடுது பாரு பூனை, அதப்புடிச்சி நீ பண்ண வேண்டிய 'காரிய'த்தை பண்ணிக்கோ!

நாக்குத் துடிக்குதுன் நல்வாயிதழுக்குச் சிங்கி! உன்றன்
வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா

உம்பேச்சே இம்புட்டு இனிப்பா இருக்கே! உன்னோட நாக்கும், எச்சியும் எம்புட்டு இனிப்பா இருக்கும். கொஞ்சூண்டு சாப்டு பாத்துக்கிறேனேடி செல்லம்! என் சிங்கி!!

என்னாய்யா இது புதுசா இருக்கு! ஒனக்கு எப்பவும் கள்ளுதானேய்யா ருசியா இருக்கும். இன்னிக்குத்தான் தேடுறியாக்கும் என்னோட நாக்கை? நீ வேணும்னா தர்றதுக்கும் வேண்டாம்னா போறதுக்கும் நான் ஆளு இல்ல ஆமா. முடியாது முடியாது

ஒக்கப் படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி! பருங்
கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா

அடியேய் சிங்கி! ஏண்டி என்னை இப்டி சூடேத்திக்கிட்டு இருக்குற? சரி சரி வா! நல்ல மறைவா ஒரு பாத்துட்டு வாரேன். கொஞ்ச நேரம் படுத்து தூங்கிட்டு போவலாம்.

அய்யே! தூங்க கூப்புடுற மூஞ்சை எங்களுக்குத் தெரியாது? தூங்கலாம் அப்டீனு கூப்டுவே. அப்டி இப்டி கூத்தாடி எல்லாக் 'காரிய'த்தையும் பண்ணிடுவ. எங்களுக்குத் தெரியாது ஒன்னோட பவுசு?! ஒழுங்கு மரியாதையா மொதல்ல சோத்துக்கு வழி பாரு மாமா. போயி கொக்குப் புடிச்சி அடிச்சி ஆக்குறதுக்கு ஒரு எடத்தைப் பாரு மொதல்ல

வித்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி! அது
சந்தேக மோவுன் தலைப்பேனைக் கேளடா சிங்கா

எப்பிடிப் பேசிப் பாத்தாலும் மடங்க மாட்றியேடி! ஏண்டி, ஒருவேள என்னாலதான் உன்னை மடக்க முடியலையா இல்ல எவனுக்கும் மடங்காத ராட்சசியா. சொல்றி சிங்கி!

யோவ்! என்னைப் பத்திதான் ஊரு ஒலகத்துக்கே தெரியுமேய்யா. இந்தா.. அடுத்தாப்புல எதைச் சொன்னா கவுருவான்னு தலையச் சொறிஞ்சிட்டே நிக்கிறியே. ஒந்தலையில இருக்குற பேனைக் கேட்டுப்பாரு. அது சொல்லும்யா என்னோட பவுச!

தென்னா டெல்லாமுனைத் தேடித்திரிந்தேனே சிங்கி! அப்பால்
இந்நாட்டில் வந்தென்னை எப்படி நீகண்டாய் சிங்கா

ஏண்டி இப்டி இரக்கமில்லாம பேசுற? நானும் உன்னைத்தேடி தெக்கத்திச்சீம பூரா தேடித்தேடி களைச்சிப்போயிதானேடி வந்துருக்கேன்?

சரி அதெல்லாம் கெடக்கட்டும். அப்பறம் எப்டிய்யா என்னைக் கண்டுபுடிச்ச?

நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி! மணிப் 
பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா

தோ இருக்காரு பாரு திருக்குற்றாலநாதர்! அவர்ட்ட வேண்டிக்கிட்டேண்டி. எப்டியாவது என்னோட ஆள எனக்கு கண்ணுல காட்டிடுன்னு!

அய்ய! ரொம்பத்தான் ஆசையா அலைஞ்சிருக்க போல! சரிசரி வாய்யா! அதான் என்ன கண்டுபுடிச்சிட்டல்ல. போயி மறுக்கா கும்புட்டுட்டு வந்துடுவோம்

பாடிக்கொள் வாரெவர் ஆடிக்கொள் வாரெவர் சிங்கி! நீதான்
பாடிக்கொன் டாற்போதும் ஆடிக்கொள் வேனடா சிங்கா

சரிடி என் தங்கம்! சாமிய யாரு பாடுறது? யாரு பாட்டுக்கு ஆடுறது?

இந்தா... நீ ஆடி ஒரு கழுதையும் பாக்காது. நானே ஆடுறேன். நீ பாடுய்யா

பார்க்கப் பொறுக்குமோ பாவியென் ஆவிதான் சிங்கி! முன்னே
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறார்களோ சிங்கா!

அடிப்பாவி மவளே! ஏற்கனவே நான் ரொம்ப சூடா இருக்கேண்டி. இதுல நீ ஆட வேற போறேன்னு சொல்ற. நீ ஆடுறதைப் பாத்தா எனக்கு அடக்கிக்கிட்டு இருக்க முடியாதேடி! செத்தே போயிடுவேண்டி.நான் என்ன பண்ணுவேன்?!

ஏய்யா பொழப்பு கெட்ட மனுசா! ஆக்கப் பொறுத்த நீரு ஆறப் பொறுக்க மாட்டீரோ?! இருய்யா, பூசையெல்லாம் முடிச்சிட்டு, அப்புறமா வீட்டுக்கு போயி நெதானமா எல்லா 'காரிய'த்தையும் பாக்கலாம்
**************************************
அடுத்தாப்புல ஒரு டவுனு பொண்ணு.வசந்தவல்லின்னு பேரு. ரொம்ப பவுசா நாகரீகமா வளந்த பெரியதனக்காரரு வூட்டுப்பொண்ணு! குற்றாலநாதர் கோயில் வீதியில பந்து வெளையாண்டுட்டு இருக்கா. அவளைப் பாக்குறாரு கவிஞரு. ஒடனே கவிதை கரைபொரண்டு ஓடுது. அவளை வர்ணிக்கிறாரு பாருங்க! யாத்தேய்....

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்செயம் என்றாட- இடை 
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட-இரு 
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட- மலர்ப் 
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!

"நல்லா கலரா செவசெவன்னு செவந்த கைய்யில போட்ருக்குற அந்த வளவியெல்லாம் இருக்கே அதெல்லாம் கலின் கலின் னு சத்தம் போடுறது "வெற்றி!வெற்றி"னு கூப்பாடு போடுறாமேரியே இருக்கு! இவ பாட்டுக்குக்கு எதப்பத்தியும் ரோசன இல்லாம குதிச்சிக் குதிச்சி வெளையாடுறாளே, எவ்ளோ பெரிய மாருங்களை வெச்சிக்கிட்டு இருக்கா.. இந்த ஆட்டம் போட்டாக்கா சின்னூண்டு இடுப்பு ஒடிஞ்சி போனாலும் போயிடுமேன்னு அவ கால்ல கெடக்குற சிலம்பும், தண்டையும் பொலம்பிகிட்டே ஆடுதுங்க. இவளோட மாருங்க இருக்கே! அது ரெண்டும் அசப்புல அவ வெச்சிக்கிட்டு வெளையாடுற பந்து மாதிரியே இருக்குங்க. அதுங்களோட திரட்சியான வடிவத்துக்கு அந்த பந்துதான் போட்டியா, எதிரியா இருக்கும்போல அப்டி ஒரு அழகு! ஆனா யார்ட்ட போட்டி போடுறது?! பந்து தோத்துடுது. அதான் அந்த கொடும்பகையான பந்தை தோக்கடிச்ச கர்வத்துல அவளோட மாருங்களும் குதிச்சி வெளையாடுது. பூமாலைமேரி இருக்குற வசந்தவல்லி பந்தாடுனதைப் பாத்தா இப்டியெல்லாம் தோணுதுய்யா! இது மட்டுமா... இன்னம் இருக்குங்காணும்!"

அடுத்த பாட்டு

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக் - குழல் 
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி 
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிசை திண்டாட - மலர்ப் 
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!

"அவளோட காதுல போட்ருக்குற தோடுஜிமிக்கி இருக்கே, அதுங்க அவளோட கண்ணு ரெண்டுமேலயும் பொரண்டு பொரண்டு ஆடுதுங்க. அது எப்டிய்யா தோடுஜிமிக்கி கண்ணுக்கு வந்திச்சின்னு கேக்குறீங்களா? அவ கண்ணு ரெண்டும் அவ்ளோ பெரிசுய்யா. காது வரைக்கும் நீண்டுருக்கு. சொம்மா ஆறடி நீளத்துக்கு மேகம் மேரி விரிஞ்சி கெடக்குதுல்ல கன்னங்கரேல்னு அவளோட கூந்தல்! அதுல அவ வெச்சிருக்கிற பூவுல இருக்குற வண்டுங்கல்லாம் அவ போடுற ஆட்டத்துல கூந்தல்ல இருந்து எந்திரிச்சி ஓடுதுங்க. அதப் பாத்துட்டு மம்முதன் வில்லுல நாணா இருக்குற வண்டெல்லாம் கலைஞ்சி ஓடுதுங்களாம். அவளோட சின்னஞ்சிறு இடை தளந்து தளந்து ஆடுதாம், ஏன்? நம்ம அழக பாத்துட்டு இந்த ஒலகம் என்ன பாடு படுதோன்னு கவலையில ஆடுதாம். சொம்மா பூ கணக்கா அப்டி பந்து வெளையாண்டுட்டு இருக்கா நாம் ஈரோயினு!"

அதுக்கடுத்த பாட்டு

இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மனம் 
முந்திய தோவிழி முந்திய தோகரம் முந்திய தோவெனவே - உயர் 
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிய 
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரிபொற் பந்து கொண்டாடினளே!

"இந்தமேரி கெட்ட ஆட்டம் போடுறாளே... இவ மகாலட்சுமியா இல்ல ரதியா இல்ல தேவலோக ரம்பையா இல்ல யாராச்சும் மோகினியா! என்னமா மின்னல் மேரி ஆடுறாய்யா!! இவ மனசுதான் அவ்ளோ வேகமா முன்ன போயி ஆடுதா? இல்ல அவளை முந்திக்கிட்டு கண்ணு ரெண்டும் ஆடுதா? இல்ல நெசமாமே கையாலதான் ஆடுறாளா? ஆட்டத்துக்கு பேர்போன அந்த கூத்தபெருமானே, அதாம்யா மூணாம்பிறைய தலையில வெச்சிக்கிட்டு ஆடுவாரே அவரு! நல்லா பொருத்தமாத்தான் அவரு கோயிலு இருக்குற தெருவுல நம்ம ஈரோயினு அம்சமா பந்து வெளையாடுறா. பொற்பந்துன்னா பொன்னாலான பந்து இல்ல. அம்புட்டு கனத்தை பூ மேரி இருக்குற இவ எப்டி சொமப்பா! இவ கைய்யி பட்டு அந்த பந்து தங்கம் மேரி தகதகன்னு மின்னுது. அந்த பந்த வெச்சிட்டு ஆடுறா இவ!"

ஹும்ம்! இந்தமாதிரி தேன்சிந்தும் பாட்டையெல்லாம் விட்டுப்புட்டு, காக்காவலிப்பு வந்தவன் மாதிரி வெட்டிவெட்டி பாடுற, ஆடுற பாட்டுக்களை ரசிக்கவேண்டிய நெலைமைக்கு ஆளாயிட்டோம்!
Related Posts with Thumbnails