புதன், 11 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-7 : என் முத்தங்கள் தீர்ந்துவிட்டன


மழையில்
ஜன்னல் குருவியைப் போல
என் உதட்டில் நிற்கிறது
ஒரு முத்தம்...
உன் கூட்டுக்குள் ஓடிவரும்
தூரத்தை நினைத்து!
                        - பழநிபாரதி


அவன் அவளைக் காதலிக்கத் துவங்கியது எப்போதென்று அவனுக்கே தெரியாது. அவளது பள்ளிச் சீருடையில் ஓர் அன்னம் கரையிறங்கி ஓடுவதைப் போன்ற சிறு ஓட்டத்தைப் பார்த்தபோதா? அவளது குறும்பு தாங்காமல் அவளது அப்பா குச்சிகொண்டு துரத்தியபோது " டேய் அப்பா! நீ என்னை அடிச்சினா தூங்குறப்போ அம்மிக்குழவிய தலையில போட்ருவேன்" என்று மிரட்டியதைப் பார்த்து அருந்திக் கொண்டிருந்த தேநீர் புரையேறச் சிரித்தபோதா? இல்லை, அவளது தாவணிச்சிறகால் மெல்ல உரசிக் கடந்து சென்றபோதா?

தெரியாது! காதல் தோன்றும் கணம் தெரிந்தால் மட்டும் போதும்; பாதிப்பேர் வரிசைகட்டிக் காத்திருப்பார்கள்! மீதிப்பேர் தலைதெறிக்க ஓடியிருப்பார்கள்! இல்லையா?

அவளும் அவனைக் காதலித்தாள்போலும்! இருவருக்கும் தயக்கம் எப்படிச் சொல்வது காதலை! ஏதாவது எக்குத்தப்பாய் போய்விட்டால்?

அன்று ஏதோ ஒரு திருநாள்! ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சிறுபரிசு கொடுத்துக் கடைசியாய் வெறுங்கையனாய்ச் சென்றான் அவளிடம் விடைபெற்றுச் செல்ல! பரிசு கொடுக்கும் அளவுக்கு அவள் நெருங்கியதில்லை அதுவரை! ஆனால் கேட்டாள் " எனக்கு ஒண்ணுமேயில்லையா?"

காதலின் வேகம் உந்தித் தள்ள உள்ளிருந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாய் உச்சரித்தான் அவன், காலையில் ஓதும் காயத்ரி மந்திரம்போல! " கையில ஒண்ணுமில்ல! வேணா ஒரு முத்தம் தரட்டுமா?"

காற்றடிக்கக் காத்திருந்த மரக்கிளையாய் வேகமாய் அசைந்தது அவள் தலை!

இழுத்து, இறுக்கி, கூந்தல் கோதி, இமைமூடி, இழைத்துச் செதுக்கிய கன்னம் வருடி, இதழ்மாற்றி, எச்சிலருந்தி ஏகாந்தித்துத் தங்கள் காதல் கூறிக்கொண்டார்கள் இருவரும்!

கதை இருக்கட்டும். விஷயத்துக்கு வருவோம்!

தொடுகை என்ற ஒன்றுதான் உயிரினங்களின் ஆகப்பெரும் சிறந்த மொழியாய் இருக்கின்றது. சோர்ந்து சுருங்கிப்போய் அமர்ந்திருக்கும்போது நம் தாயோ, நண்பனோ வந்து தோள்தொட்டுத்  தலை தடவும்போது அந்தத் தொடுகை நம் ரத்தத்தில் ஓர் உற்சாக  வெள்ளத்தை ஊற்றெடுக்க வைக்கின்றது அல்லவா?

தொடுகையின் உச்சமாய் எப்போதும் திகழும் முத்தம்! எரிந்து கொண்டிருக்கும் மின்சாரத்தை கொஞ்சமும் இழப்பில்லாமல் இடம் மாற்றும் மீக்கடத்திகள் (Super Conductors) எப்போதும் இதழ்கள்தாமே!

முத்தமிடல் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான்!

குழந்தையைக் கொஞ்சுகையில் முத்தமின்றி முடியுமா என்ன?

மதங்களில் கூட குருமார்களின் பாதங்களையும் அவர்களின் மோதிரங்களையும் முத்தமிடும் பழக்கம் பணிந்ததற்கு அறிகுறிதான்!

நவீன அறிவியல் நம்மை அதிகம் முத்தமிடச் சொல்கிறது. முத்தமிடும்போது நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் நம் ஆயுளை அதிகரிக்கின்றனவாம்! இளமையை நீட்டித்து இதயம் வலுவாக்குகின்றனவாம்!

இதழ்கள் கவ்விக் கொள்ளும்போது இமைகள் மூடிக் கொள்வதேன்? இது ஓர் இனிய ஆராய்ச்சி!

உள்ளுக்குள் புதைந்து இறையோடு ஒன்றிப் பேரின்பம் காணும் முயற்சியோ?!

இதழ்ச்சிறை உடைத்து நாவுகளின் நளின நடனத்தை மனக்கண்ணில் காட்சிப் படுத்தும்போது வரும் வெட்கமோ?!

புரிந்தவர் தொடரலாம் முத்த ஆராய்ச்சியை!

"கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ!"


என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்கூட கண்ணனிடம் முத்த ஆராய்ச்சி செய்ய ஏங்குகிறாள்!

இதயங்களின் அன்புச்சுரப்பு உதாசீனப் படுத்தப்படும் போதும், பிரியத்துக்குரியோர் நம் மனம் விட்டு நீங்கிச் செல்லும் போதும் கசக்கத் துவங்கும் முத்தங்கள்.

பரிமாறப் படாத விருந்து, சமைத்தவரின் உள்ளத்தை எப்போதுமே கொஞ்சம் கீறிப் பார்க்கின்றதல்லவா?

நேசிக்கும் ஜீவன்கள் இல்லாதபோது இதழ்களை இறுக்க மூடி முத்தக் கடைக்குப் பூட்டுப் போடுகிறது " ஆண்டாள் பிரியதர்ஷினி"யின் கவிதைக் கதாபாத்திரம்!

என் முத்தங்கள் தீர்ந்துவிட்டன

எத்தனையோ முயலுகிறேன்
நானும், இருப்பு வைக்கவென.

உச்சமாய் லயித்துக் கிறங்கித்
ததும்பும் பிரேமையில்
விநியோகிக்கவென வைத்திருந்தேன்
முத்தக்கடை ஒன்று.

போகத்துக்கும் மோகத்துக்கும்
சோகத்துக்கும் தாய்மைக்கும் எனக்
கைவசமிருந்தன
விதவிதமான் முத்தங்கள்.
நேரிலும் தொலைபேசியிலுமான
ஆர்டர்களுக்கும்
நடந்தது விநியோகம்.

சத்தமாக சத்தமின்றி
உடனடியாக எப்போதாவது
அவசரத்துக்கு நிதானமாகவெனப்
பல்வேறு வகைகளும்
தீரும்முன்பே நிரப்பப்பட்ட
நம்பகமான கடை அது.

திடீரென விலையும் தேவையும்
ஏறும் இறங்கும் என்றாலும்
கையிருப்பு குறைந்ததில்லை.

எல்லாமே இன்று
பூசணம் பிடித்துவிட்டன
கரப்பான் தின்றும்
எலி கரம்பியும் வெம்பியும்.

கமறலும் குமுறலுமான
இப்போதைய விடியலில்
முத்தக்கடையின் கதவு
திறக்க முயலுகையில்தான்
உணர்கிறேன்
என்றைக்குமே இருப்பு இனி
நிறைக்க முடியாதென.
நிரந்தரம்
இந்த அறிவிப்பு
அட்டைதான்.
'என் முத்தங்கள்
தீர்ந்துவிட்டன'.

2 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

//காற்றடிக்கக் காத்திருந்த மரக்கிளையாய் வேகமாய் அசைந்தது அவள் தலை!//

அசத்தல் வரிகள்...

தீர்ந்திருக்கும் முத்தம் மொத்தமும், பிரியங்களையும் கொண்டல்லவா சென்றிருக்கின்றன...

தீர்க்கப்படாத ஒரு உபகாரத்தை என்னிடம் கொடுத்துச் சென்ற அவளுக்கு என் பரணில் ஏதேனும் முத்தங்கள் மிச்சம் இருந்தால் அனுப்பி வைக்கிறேன்..

வெறுப்புகள் தோய்ந்த அம்மிச்சம்... காற்றில் சொல்லக் கூடும்... சில காயங்களின் வீச்சத்தை....

சௌந்தர் சொன்னது…

ரொம்ப ஆராய்சி செய்து இருக்காரு

Related Posts with Thumbnails