திங்கள், 2 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-2: வலியறிதல்

எல்லா மனிதரும் ஏதோ ஒருவகையில் பாவப்பட்டவரே. ஒவ்வொருவர் வாழ்விலும் எளிதில் மறக்க முடியாத வலி பனிக்கத்திபோல உறைந்திருக்கும் அல்லது சொறிந்துவிடப்பட்டுக்கொண்டே இருக்கும் புண்போல நிணம் வடிந்துகொண்டே இருக்கும்.

தம் வலி பகிர நட்புக்களும் உறவுகளும் ஆயிரம் இருக்கலாம். ஆயினும் வலியின் வீரியம் என்பதை முழுதுமாய் சொற்களால் கடத்துவது என்பது இயலாத காரியம்

"வாழ்ந்தே தீரவேண்டியதாய் இருக்கிறது வாழ்க்கை" என்கிறார் மலையாளக்கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

காலச்சக்கரம் வேகமாய்ச்சுற்றுகையில் காணாமல் போகலாம் சில வலிகள்;

காலங்காலமாய் கல்வெட்டுச்சித்திரங்களாய்ப் பேசப்படலாம் சமூகக் களையறுக்க சிலுவை சுமந்தோரின் வலிகள்;

ஊமைகண்ட கனாபோலும், யாரும் அறியாப்போதில் உதிர்ந்துவிட்ட நட்சத்திரங்கள் போலும் பகிரப்படாமலே போகலாம் பலரது வலிகள்.

வலியை வெளியேற்றும் வடிகாலாய்க் கண்ணீர் இருப்பதுண்டு;
வலிக்கத்தியால் நெஞ்சுகிழிக்கும் காரணியாக சிலர் கண்ணீர் பிறப்பதுமுண்டு

கூப்பிய கரங்களுள் கொலைக்கருவி கொண்டிருப்போரால் வருவது துரோகத்தின் வலி;

இதயம் நொறுக்கிப் பிரிந்து செல்வது காதலின் வலி;

நம் ப்ரியத்துக்குரியோர் இருந்தபோது எடுத்துக்கொண்ட இடத்தைவிட இறந்தபோது எடுத்துக்கொண்டுபோன இடத்தால் வருவது வெறுமையின் வலி;

தெரிந்தே இழந்த பொன்னான விஷயங்கள் காலமுழுதும் நமக்குத் தருவது இழப்பின் வலி;

தன்னுயிர்பிரித்து புத்துயிர் பிரசவிக்கும் தாய்க்கு பிற்கால நினைவின் மீட்டல்களில் அது இன்பவலி.

வலிதரும் அனுபவங்கள் சிலருக்கு வாழ்வின் புதியவாசல்களைத் திறக்கக்கூடும்;

வாழ்வைச்சிறையாக்கி மீதமிருக்கும் ஜன்னல்களை அடைக்கவும் கூடும்.

குருஷேத்திரத்தில் பாய்ந்தோடிய குருதியாற்றின் பிறப்பிடம் பாஞ்சாலியின் கண்ணீர்;

கவிகாளிதாசனின் எழுதுகோலில் மந்திரசக்தியாய் இருந்தது அபலை சகுந்தலையின் கண்ணீர்;

ட்ராய் நகரம் மண்ணோடு மண்ணாக மறைந்துபோகுமளவு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது ஹெலனின் கண்ணீர்.

பெண்களின் கண்ணீர் மட்டுமல்ல; ஆணின் கண்ணீரும் சக்திவாய்ந்ததுதானோ!

கார்ல்மார்க்ஸின் கண்ணீர் புரட்சிப்பெருங்கடலாய் மாறி மேடுபள்ளங்களை உடைத்து நிரவும் கம்யூனிசத் தத்துவமானது;

வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் கண்ணீர் ஜீவகாருண்யத்தின் குளிரமுதாய் மாறி இன்றும் வடலூரில் இல்லாதோர் பசிதணித்து "அருட்பெருஞ்சோதி; தனிப்பெருங்கருணை"
என்று இசைத்துக்கொண்டிருக்கின்றது

எவ்வாறாயினும் சரி வலிப்பிணி தீர்க்கும் மருந்து வெறும் வார்த்தைகளாலான ஆறுதல்களிலும், அன்பிற்குரியோரைத் தேடிப் புலம்புவதிலும் மட்டும் இருக்க முடியாதென்பதே என் கருத்து

இதோ 'வலியறிதல்' இயலுமா என்று கல்யாண்ஜி எழுதுகிறார்:

"இப்படியா அப்படியா
எப்படி இருந்தது என்று
நாலைந்து சொற்களை
அவரே தந்து
வலியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னார்
உச்ச மகிழ்ச்சிக்கும்
உச்ச வலிக்கும்
அனுபவிப்பவனிடம்
அடைமொழி இல்லை
மேலும்
எம் வலியும் ஆகாது
உம் வலி
"

3 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

life is over head... என்று ஒன்று இருக்கிறது...

வழிகளில்தான் இருக்கிறது வாழ்வின் மிச்சமும்..

நல்ல மொழி நடை கைகூடிவிட்டது.. தொடர்ந்து எழுதுங்கள்...

ஹேமா சொன்னது…

வலியும் சுகமும் மனதில்தான் !

நேசமித்ரன் சொன்னது…

//நல்ல மொழி நடை கைகூடிவிட்டது.. தொடர்ந்து எழுதுங்கள்//

அதே அதே !!!!

Related Posts with Thumbnails